Search This Blog

Friday 14 December 2018

சுளுந்தீ- தமிழுக்குக் கிடைத்த கொடை: - பா.முருகன்

தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட மருத்துவ முறைகளை ஒரு வரலாற்று நாவலில் உள்புகுத்தும் சாத்தியங்களையும், தனிமனித வீரம் நிகழ்த்தும் வரலாற்று மாற்றங்களால் எழும் நாட்டார் கதைகளும், ஜமீனுக்குட்பட்ட அதிகார வரம்புகளை நில வரைவியல் முறையில்  பாலியல் பாசாங்குகள் அற்றுப் பேசும்போது அது ஏற்படுத்தும் மாயஜாலங்களும்,

சவரக்கத்திக்குள் மறைக்கப்பட்ட மருத்துவம் மற்றும் கலாச்சாரத்தை இவ்வளவு நெருக்கமாகப் பதிவு செய்த விதத்தில் இந்த நாவல் அதிசயத்தை நிறுத்துகிறது. இதற்கு முன் மளையாளத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட ' சின்ன அயரத்தி' நிறுத்தியது குறிப்பிடதக்கது.

இந்த நாவலில் உள்ள தரவுகளும் குறிப்புகளும் நாவல் தளத்திலிருந்து கட்டுரை வடிவத்துக்கும், பின் கட்டுரைத் தன்மையிலிருந்து நாவல் தன்மைக்கும் மாறுகிறது. அடுக்கடுக்கான படிமங்களால் நம்மை முன்னும் பின்னும் அசைக்கிறது. நாவிதன் புரவியின் காலடிச்சத்தம் காதுக்குள் கதம்ப வண்டுச் சத்தமாய் கிறுகிறுக்க வைக்கிறது.

கிடா முட்டுச்சத்தம்  நமக்கான பெருந்தண்டனையாய் மாறும் அதே நேரத்தில், நாவிதனின் நடவடிக்கைகள் ஆகம விதிகளுடனும் பிறப்பின் தர்மத்தையும் எரிக்கும் வேள்வியாகிறது. தமிழ் நாட்டார் வழக்காற்றியலில் ஓமலிப்புப் பாடல்களை ஆயுதமாகப் பயன்படுத்தினர். அதற்கு எடுத்துக் காட்டு கலகக்காரர்களும் எதிர்க்கதையாடல்களும் நூல்.

நாவிதனின் தாய் மகனைக் கொன்ற வீரனைக் கைகளால் தடவிப் பாடும்போது குற்ற உணர்ச்சியால் நம்மைக் கல்லாக்குகிறது.

நமக்குத் தேவையான மருத்துவம், நிலவரைவியல், கலாச்சாரப் படிமங்கள், மனித நோய்க்கூறுகள், சமூகத் தரவுகள் மற்றும் மானுடவியல், நாட்டார் வழக்காற்றியல் என அனைத்துக் குறிப்புகளுக்கும் இந்த நாவல் உங்கள் நூலகத்தில் இருந்தால் எடுத்துத் தைரியமாகத் தேடலம்.

இவ்வளவு தரவுகளுக்கும் ஒரு நீண்ட நெடிய களப்பணி இல்லாமல் சாத்தியமே கிடையாது.

'சுளுந்தீ' நாவல் தமிழுக்குக் கிடைத்த கொடை. அவ்வளவே சொல்வேன்.

ஆசிரியர் அண்ணன் இரா.முத்துநாகு அவர்களுக்கு அன்பும் வாழ்த்துக்களும்.

அடவி ஆதி பதிப்பகம் வெளியிடவிருக்கும் சுளுந்தீ நூல் குறித்து Pa Murugan Andipatti அவர்கள் எழுதிய பதிவு.

சுளுந்தீ- கதை வடிவிலான வரலாறு :- ஏர் மகாராசன்

சுளுந்தீ:
தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று நுண் அரசியல் ஆவணம்.

வரலாற்றைக் கதையாகவும், கதையை வரலாறாகவும் பேசுகிற பாணியில், எழுத்தின் வாயிலான ஒரு பெருங்கதைக்குள் பல்வேறு குடிகளின் வாழ்வியலைப் பேசுகிற இனவரைவியல் மற்றும் நிலத்தின் வரைவியல் பேசுகிற தமிழின் மிக முக்கியமான பெரும் புனைகதைப் படைப்பிலக்கியமாக வெளிவரப் போகிறது சுளுந்தீ எனும் நூல்.

தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதவும் பேசவும் கூடியவர்கள் மறைத்த, மறந்த, மறுத்த ஒரு காலகட்டம் குறித்த வரலாற்றுத் தரவுகளை, மக்களின் வாய்மொழி, பண்பாடு, மற்றும் ஆவணக் குறிப்புகள் போன்ற வரலாற்றுக் குறிப்புகளோடு புனைகதையாகப் புலப்படுத்தி இருக்கிறார் தோழர் இரா.முத்துநாகு.

தமிழகத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்த தெலுங்கின நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில், நிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்த தமிழ் உழவுக்குடிகளிடமிருந்த வேளாண்மை நிலங்கள் பறிக்கப்பட்ட வரலாற்றை மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

தமிழ்க் குடிகளுக்கும் தமிழ் அல்லாத குடிகளுக்குமான முரணும் பகையும் குறித்து மிக நுணுக்கமாகவும் ஆழமாகவும் விவரித்திருக்கிறது.

நாயக்கர் ஆட்சிக் காலத்தில் நிலவிய அதிகாரத்தின் கோர முகங்களையும், அவ் அதிகாரத்தை எதிர்த்து நின்ற பல்வேறு சமூகக் குடிகளின் வாழ்வையும் பேசுபொருளாகக் கொண்டிருக்கும் இந்நூல், தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் புதிய தரவுகளை நிறையவே தந்திருக்கிறது.

இன்றைய சமூக அமைப்பில் விளிம்பு நிலைச் சமூகங்களாகக் கருதப்படுகிற பல சமூகக் குடிகள், அக்காலகட்டத்தில் அறிவும் திறமும் பெற்றிருந்த சமூக ஆளுமை மிக்கதாக இருந்த வரலாற்றை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

குறிப்பாக, தமிழ் நிலத்தின் மருத்துவ அறிவும் நுட்பமும் முறைகளும் கற்றுத் தேர்ந்திருந்த சித்த மருத்துவப் பண்டுவர்களான நாவிதர் பற்றிய விரிவான விவரிப்புகள் சமூக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் மட்டுமல்ல; தமிழில் இதுவரையிலும் பதிவாகாத செய்திகளும் கூட.

தமிழ் நிலத்தின் தமிழ்ப் பூர்வீகக் குடிகளைக் குறித்தும், வந்து குடியேறிய தமிழ் அல்லாத குடிகளைக் குறித்தும் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் நேர்மையாகவும் இந்நூல் பதிவு செய்திருப்பதாகவே என் வாசிப்பில் உணர்கிறேன்.

தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று ஆவணமாகவே இப்பெருங்கதை நிலைத்திருக்கப்போகிறது என்பதே இந்நூலின் சிறப்பாகும்.

இந்நூல், வெறும் கற்பனையோ அல்லது சிறுகச் சேர்த்த புனைவோ என்பதைக் கடந்து, கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேகரித்த மக்களின் வழக்காற்று ஆவணங்களே ஒரு பெருங்கதைக்குள் உலவித் திரிகின்றன. அவ்வகையில், மக்கள் வரலாற்றையும் வழக்காற்றையும் எழுத்தில் பதிவு செய்திருக்கும் தோழர் இரா.முத்துநாகு அவர்களின் தேடலும் உழைப்பும் ஒவ்வோர் எழுத்திலும் படிந்திருக்கிறது.

தோழர் முத்துநாகுவின் சுளுந்தீ, மக்கள் வரலாற்றியலின் தமிழ் அடையாளம் என்றே கருதலாம்.

வாழ்த்துகளும் பாராட்டும் அன்பும் தோழர்.

அடவி - ஆதி பதிப்பகம் விரைவில் வெளியிட இருக்கும்,
இரா.முத்துநாகு எழுதிய சுளுந்தீ பெருங்கதையைக் குறித்து ..

ஏர் மகாராசன்

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...