நூலதிகாரம்
*******************
நூல்; அஞ்சலை அம்மாள்
நூலாசிரியர் ; இராஜா வாசுதேவன்
வெளியீடு; தழல் ; வெளியான ஆண்டு சனவரி 2021
விலை; 250
தொடர்பு எண்; 9360860699
********************************************************************************
உலக வரலாறு, உள்ளூர் வரலாற்றில்
பெரும் பங்கு வகிக்கும். அதே போல் உள்ளூர் வரலாறு உலக வரலாற்றை தீர்மானிக்கும் = சீனிவாச சாஸ்திரி.
உள்ளூர் வரலாறுகள் எழுதப்படும்
போதுதான் உலகவரலாறு முழுமை பெறும் = தொ.ப.
திராவிட கட்சியின் எழுச்சி மிக்க
வளர்ச்சியால், இந்திய பொதுவுடமை கட்சி, பேராயக் கட்சியின் (காங்கிரஸ்) *தியாக* வரலாற்றை
சொல்லவே நாதியில்லாமல் போய் விட்டது. தியாக வரலாற்றை சொன்னாலும் கேட்க காதுகள்
இல்லாமல் போய்விட்டது. பேராயக்கட்சியின் வரலாற்றை உள்ளூர் வரலாற்றோடு ஒப்பிட்டு நிறைவு
செய்துள்ளது *அஞ்சலை அம்மாள்* கதை நூல் .
இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில்
பல மாற்றங்களை நிகழ்த்திட மையப்பங்கு வகித்தது வடகிழக்கு, வடமேற்கு கடற்கரைகளே. தமிழகத்தின்
வடகிழக்கில் கெடிலம்
ஆறு, பெண்ணாறு சங்கமிக்கும் ஆற்றைங்கரையில் அமைந்துள்ள கடலூர் பல்லாயிரங்கால
வரலாற்றைச் சுமக்கிறது. 16ம் நூற்றாண்டில் டச்சு, பிரெஞ்சு, பிரிட்டீஷ்காரர்களின்
தரை மற்றும் கடல் எல்லையாக இவ்வூர் இருந்தது.
இந்திய விடுதலை காலத்தின் வரலாற்றை
இவ்வூர் அனலாக சுமந்திருந்தாலும், தென் - வடக்கு பகுதியிலிருந்து ஒதுங்கி இருப்பதால்
என்னவோ, இப்பகுதியில் அமைந்திருக்கும் ஆன்மீக, மடத்தலங்கள் வெளிச்சம்பட்டளவிற்கு அரசியல்
வரலாறு வெளிச்சம்படவில்லை என்றே தோன்றுகிறது. இக்குறையை நீங்கிட, கடலூரில் சாமானிய
பெண்ணான ''அஞ்சலை அம்மாள்'' பேராயக்கட்சியில் தன்னை இணைத்து, எந்தளவிற்கு இந்திய துணைக்கண்டத்தின்
விடுதலை கனலை ஏற்றிருந்தார் என்பதை அழகிய நடையில் அப்பகுதியின் வரைப்படமாக வரந்துள்ள நூல்.
நூறு ஆண்டுகளுக்கு முன் பெண்களின் நிலையிலிருந்து சிந்தித்துப்
பார்த்தால் பள்ளிப்பாட
நூல்களில் படிக்கும் விடுதலை வீரர் வரிசையில் அஞ்சலை அம்மாள் வந்திருக்க வேண்டும்.
தமிழக பேராயக்கட்சி வரலாற்றை எழுதியவர்கள் வ.உ.சிதம்பரம்பிள்ளையின்
பெயரை விடுவித்தது போல் அஞ்சலை அம்மாளையும் பேசாது விட்டு விட்டார்கள் என்றே நூலினை
வாசித்து முடிந்த போது தோன்றியது.
கடலூர் அஞ்சலை அம்மாவின் வரலாற்றை
ஆய்வு செய்த நூலாசிரியர் கதையை மெய்த்தன்மை சிதையாமல் வரைந்துள்ளார். வரலாறு, கதை படிக்கும்
இருதரப்பு வாசகர்களுக்கும் இந்த நூல் ஈர்க்கும் என்று நம்பலாம்.
1908ல் துவங்கும் இக்கதை
1947ல் விடுதலை நாளில் முடிகிறது. இந்த காலகட்டத்தில் கடலூருக்கும் பேராயக்கட்சி,
பார்வர்டு பிளாக், நீதி கட்சி, இராமசாமி படையாச்சியின் அரச குல இளைஞர் அமைப்பு (பின்னாலில்
அது அரசியல் கட்சியாக பரிணாமம் அடைந்தது). பொதுவுடமை கட்சிகளின் அரசியல் வரலாற்றை அஞ்சலை
அம்மாளின் வாழ்வோடு இணைந்திருந்தது. அதை சுருக்கி எளிதாக விடுபடாமல் வரலாறுப்பிழை
இன்றி கொடுத்துள்ளதே இந்நூலின் சிறப்பு.
1920 காலங்களில் குதிரை
வண்டி, பொதி, பாரம் ஏற்றும் வண்டி வைத்து வணிகர்களுக்கு சரக்கு ஏற்றி வருவது தனித்தொழில்.
வண்டி வைத்திருப்பவர் இன்றைய லாரி உரிமையாளர் போலவே கருதப்பட்ட காலம். இந்தத்தொழிலை
செய்து வரும் முத்துமணி படையாச்சி, குதிரை, மாடுகளுக்கு இலாடம் கட்டுவதையும் தொழிலாக
செய்து வருபவர். இவரின் வெளியுலக தொடர்பால் மகள் அஞ்சலையை இன்டர் மீடியம் வரை படிக்க
வைக்கிறார். துடுக்கான பெண்ணான அஞ்சலை பாட நூல் அல்லாது பத்திரிக்கை வாசிப்பு ஊர்
நடப்புகளை தேடி அறிந்து வரும் நபராக வளர்கிறார்.
''கடலூர் பல அரசுகளில்
எல்லையாகயும், உப்பு வணிகத்தின் துறைமுகமாக இருப்பதால் கலெக்டர், எஸ்.பி அந்தஸ்து
அதிகாரிகள் கடலூரில் பணியாற்றினர். இவ்வூருக்கு பணி செய்திட டபில்யூ..ஜார்ஜ்
என்ற ஆங்கிலேய போலீஸ் இன்ஸ்பெக்டர் குதிரை வண்டியில் வருகிறான். குதிரை வண்டி தெருவில்
இருந்த பெரியவர் மீது போத வண்டி சாய்கிறது. இதனால் கோபமான அந்த இன்ஸ்பெக்டர் பெரியவரை
சட்டையால் அடிக்கிறார். வண்டி ஓட்டி வந்தவர் 'குதிரைக்கு இலாடம் இல்லாததால்
தடுமாறி விட்டது' எனச்சொல்ல அத்தெருவிலுள்ள முத்துமணி வீட்டிற்கு குதிரையுடன் வருகிறார்கள்.
வெள்ளைக்கார அதிகாரின் செயலை மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். இதைப்பார்த்த
அஞ்சலை, ஓடிப்போய் அடிபட்ட பெரியவரை தூக்கி விட்டு தண்ணீர் கொடுத்து அருகிலுள்ள
திண்ணையில் உட்கார வைத்து விட்டு அப்பாவிடம் வருகிறார். அங்கிருந்த இன்ஸ்பெக்டரைப்
பார்த்து மனிதபிமானம் இல்லாமல் நடந்து கொண்டதாக ஆங்கிலத்தில் சொன்னார். இளம் பெண்
எதிர்த்து பேசியது இவனுக்கு தலைக்கு ஏறுகிறது. இது தான் அஞ்சலைக்கு விடுதலை
இயக்கம் மீது காதல் வர காரணம்'' என கதை துவங்குகிறது. மகள் விருப்பப்படி நெசவு
தொழில் தொழில் செய்து வரும் முருகப்பன் வீட்டோடு மாப்பிள்ளையாக அமைந்திட அஞ்சலைக்கு
திருமணம் நடக்கிறது.
பாண்டிச்சேரியிலில்
தலைமறைவாக இருந்து பாரதியார் நடத்தும் இந்தியா விஜயா பத்திரிக்கைகள்
நடத்துகிறார். கடலூரிலிருந்து பிரெஞ்ச் காலனி பகுதியான பாண்டிச்சேரிக்கு பாரம்
ஏற்றிச்செல்லும் கட்ட வண்டிகளில் இந்தப்பத்திரிக்கைகள் பேராயக்கட்சியினருக்கு கமுக்கமாக
வந்து சேரும். பாண்டிச்சேரிக்கு பாரம் ஏற்றிச்செல்லும் தம்பி இராமசாமி மூலமாக இந்தப்பத்திரிக்கைக்கு
சந்தாதாராகவும் வாசகர் கடிதமும் கொடுத்து அனுப்பி வந்தார் அஞ்சலை. குடும்பம், குழந்தை, நெசவு என வாழ்ந்தாலும் இப்பத்திரிக்கை மூலம் விடுதலை உணர்வை பெற்றிருந்தார். அஞ்சலை
கடிதம் மூலம் ஈர்க்கப்பட்ட பாரதியார் வாசகரான அஞ்சலை வீட்டுக்கு இராமசாமி
வண்டியில் மறைந்து வீட்டுக்கு வந்து பேசியதால் விடுதலை உணர்வு அதிகம் பெற்றார்.
இந்த நிலையில் ஊருக்குள்
நுழையும் போதே பெரியவரை அடித்த இன்ஸ்பெக்டர் மீன் வாங்க வந்திருந்தார். மீன்
விற்பனை செய்திடும் நபரிடம் தனியாக கிடந்த சுறா மீனை விலைக்கு கேட்டான். 'தினம்
என்னிடம் மீன் வாங்கும் வியாபாரிக்கு இந்த மீனினை விற்று விட்டேன். அவரிடம் நான்
முன்பணமும் வாங்கியுள்ளேன்'' என மீனவன் சொல்ல அதிகாரத்தோரணையில் மீனை தூக்கினான்.
இதனால் வாக்கு வாதம் முத்தியது. மீனை தூக்கிக்கொண்டு மீனவனை பூட்ஸ் காலால் எத்தி
தள்ளினார் இன்ஸ்பெக்டர். அங்கு மீன் வாங்கப்போன அஞ்சலை இந்தக் காட்சியைப்பார்த்து
அங்கு போக 'பெரியவரை அடித்தவனாச்சே' என அவனிடம் நியாயம்
கேட்டுள்ளார். அவன் அதிகாரத்தோரணையில் அஞ்சலையை அடிக்க கை ஓங்கினான். 'இவனை
பிடித்து மரத்தில் கட்டுங்கள். வரும் பிரச்சனையை நான் சந்திக்கிறேன்' எனச்சொல்ல
அங்கிருந்தவர்கள் மரத்தில் கட்டி வைத்தனர். பிரச்சனை கலெக்டர் வரை போனது. அவரே நேராக
வந்து விசாரிதார். கலெக்டரின் ஆங்கிலத்தில் அஞ்சலை பேசி இன்ஸ்பெக்டர் தவறினை
புரியவைத்தார். தவறை ஜார்ஜ் - ம் ஒத்துக்கொண்டான்.
கலெக்டர் மக்களிடம் மன்னிப்பு கேட்டு அவனை அழைத்துப்போனார். 'கலெக்டரையே மன்னிப்பு
கேட்க வைத்தார் அஞ்சலை என்ற பெண்' என்ற செய்தி நகரம் மட்டுமல்லாது சுற்று வட்டாரம்
முழுவதிலும் பரவியது. இந்த நிகழ்வு பத்திரிக்கையில் செய்தியாக வெளி வர நாடு
முழுவதும் அஞ்சலை குறித்து தெரிந்தது. அஞ்சலை அவரை அறியாமலே மக்களின் மனதில் தலைவியாக உருவானார்.
இப்படியாக துவங்கும் அவரது
பயணத்தில் காந்தி கடலூர் வந்தது, கள்கடைக்கு எதிராக பேசியது, கள்ளுக்கடையை மூட பெண்களைத்திரட்டி போராடத்
தூண்டியது. பேராயக்கட்சியில் உறுப்பினராக சேர்ந்து, கள்ளுக்கடை அகற்றும்
போராட்டம், சென்னையில் உள்ள பிரிட்டீஷ் அதிகாரி கேப்டன் ஜெம்ஸ் ஸ்மித் நீல் சிலை
அகற்றும் போராட்டத்தில் இவர் பங்கெடுத்தது இவரை தலைவராக்கியது. இவரது குடும்பமும்
இவருக்கு ஒத்துழைக்க மக்களுக்கான தலைவராக உருமாறிய அஞ்சலை, *அஞ்சலைஅம்மாள்* என
பொதுவெளியில் அறியப்பட்டார்.
நீல் சிலையை உடைத்தது சிறுமியான
அஞ்சலையின் மகளுக்கு நான்கு ஆண்டுகள் சீர்திருத்தப்பள்ளி சிறைச்சாலையில் தங்கிட தண்டணை கொடுத்தார்கள். இப்போராட்டமே
காந்தியார் வாயால் அஞ்சலை பெயரை உச்சரிக்க வைத்தது.
பிடிட்டீஷ் ஆட்சியில் 1920 முதல் தேர்தல்
நடந்தாலும் பேராயக்கட்சி தேர்தலில் நின்றதோ 1937ல். 17 ஆண்டுகாலம் அக்கட்சி தொண்டர்களை
விடுதலைக்கான போராட்ட வீரர்களாக மட்டுமே பார்த்தது. இந்த வீரர்களும்
போராடிக்கொண்டே இருந்தனர். அக்கால கட்டத்தில் பெண்கள் அரசியலில் தலைவராக வருவது
எளிய செயலன்று. இதில் விதிவிலக்காக அஞ்சலை எழுஞாயிறாக வந்துள்ளார் என்பது பெரும்
ஆய்விற்குறியது. 1937 தேர்தலில் கடலூர் தொகுதியில் நின்ற அஞ்சலை இருமுறை சட்ட மன்ற
உறுப்பினராக வென்றதுடன் அதிக வாக்கு வேறுபாட்டில் தேர்வு செய்யப்பட்டுவர் என்பதே
பெருமையான செய்தியாக உள்ளது.
இந்த நூலில் முதல்
உலக்கப்போர், ரவுலட் சட்டம், 66 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட நீல் சிலையை அகற்ற
பேராயக் கட்சியினர் எடுத்துக்கொண்ட அரசியல் தந்திரம், காந்தியார், ஒத்துழையாமை
இயக்கம், கதர் ஆடை விற்க வந்த பெரியார், தொழுநோயால் அவதிப்பட்ட சுப்பிரமணியசிவாவிற்கு
கடலூர் ஆசிரமம் அமைத்துகொடுக்க உதவியது யார்? அவரின் இறப்பு எங்கே. பாண்டிச்சேரியில்
தங்கிய பாரதியார் எப்படி கைதானார். வ.உ.சி கப்பல் விட்டது, அவர் சிறை சென்றது,
அவரது இறப்பு. சுபா சந்திர போஸ் இரண்டாம் முறையாக பேராய கட்சியின் தலைவராக வந்தது.
அதன் பின்னர் நேதாஜீ என்ற பெயர் வரக்காரணம், பிரிட்டீஷார்
கொண்டு வந்த கல்வித்திட்டத்தில் ஆங்கிலம் இணைப்பு மொழியான வரலாறு, பெரியார் நீதிகட்சிக்கு
போய் திராவிடர் கழகமாக மாறியது, என்பீல்டு துப்பாக்கி கம்பெனி தான் பின்னாலில்
மோட்டார் சைக்கிளை உற்பத்தி செய்தது என்ற தகவல், வட மாநிலத்தில் மக்கள்பாண்டே
நிகத்திய போராட்டம், திருநெல்வேலி சரித்திரம் எழுதிய சோமயாஜீலுஅய்யர், காந்தியார்
முதன்முதலாக பிரம்ம ஞான சபையின் ஒளிபெருக்கியில் மேடையில் பேசியது.
பேராயகாட்சியில் நேரு அகில இந்திய தலைவராக வந்த போது வாரிசு அரசியல் வரத்துவங்கியது
குறித்த விமர்சனம், பிரிட்டீஷ் மேலாதிக்கத்தில் இருந்து கொண்டே இந்தியா
பாரளுமன்றத்தை நடத்துவது என்ற பேராய தலைவர்களின் எண்ண ஓட்டம், ஓமந்தூர் இராமசாமிரெட்டியார்,
உப்பு சத்தியாக்கிராகம், சிங்காரவேலர், ஜீவா போன்றோர்
பொதுவுடமை கட்சி துவக்கிய செய்தியுடன் நினைவில் இருந்தாலும் மறைந்து விட்ட
குடியாத்தம் அனந்தாச்சாரி, வேலூர் ஜமத்கனி போன்ற பொதுவுடமை துவக்க கால அறிஞர்களான தலைவர்கள்.
பிரகாசம் ரெட்டியார் நடத்திய
உதயவனம் ஆசிரமம் என்ற போசன கல்வி நிலையம், சத்தியாக்கிராகப்
போராட்டத்தில் பேராயக்கட்சி தொண்டர்கள் பட்ட துன்பம், இரண்டாம் உலகப்போரின் எளிதான விளக்க
வரலாறு, அப்போது வெளியான மதராஸ் பத்திரிக்கை, வெள்ளையனே வெளியே இயக்கம், தமிழக
பேராயக்கட்சியில் காமராசர் தலைவரான கதை, சத்தியாக்கிரகப் போராட்டம் இரண்டாம் முறையாக அறிவித்த காந்தியார் வினோபா, நேரு
அடுத்து அஞ்சலை என்ற பெருமையான வரலாறு எப்படி அஞ்சலை அம்மாள் மறைக்கப்பட்டது?,
பேராயக்கட்சி தடைசெய்யப்பட்ட போது கட்சியினர் பட்ட துன்பம், இராஹகோபல ஆச்சாரியார் தனியாக கட்சி துவங்க நினைத்தது என வரலாற்றுகளை எளிமையாக தொகுத்துக் கொடுத்து வாசகனின்
தேடுதலை அதிகரிக்க வைக்கிறார் நூலாசிரியர்.
பேராயக்கட்சி தடை
செய்யப்பட்டபோது கைதான தலைவர்கள் உடல் நலிவுற்று விடுதலையான சில நாள்களில் இறக்கும்
செய்திகள், கூத்துக்கலைஞர்கள் விடுதலைக்காக குரல்கொடுத்த விதமஅவர்கள் பட்ட இன்னல்.
சீனதேசத்துப்புரட்சி, வீட்டுக்காவலில் வைத்திருந்த போது காந்தியின் மனைவி அவரது மடியில்
உயிர் நீத்தது, காந்தியார் பார்த்த முதல் திரைப்படம், இரண்டாம் உலக்கப்போரில் கிட்லர்,
முசோலினி இவர்களின் பங்கு. இவர்கள் இறந்த
செய்தி,
சுபா சந்திர போஸ் இந்தியாவை விட்டு தப்பி சென்று தலைமறைவாக இருந்த வரலாறு.
அவர் திடீரென ரேடியோவில் பேசி பிரிட்டீஷ் அரசுக்கு பயத்தையும் அதிரிச்சியை
கொடுத்தது. ஜப்பான் பர்மாவை பிடித்தது, அமெரிக்கா ஜப்பான் மீது குண்டு போட்டது, பிரிகேடியர்
மவுண்ட் பேட்டன் இரண்டாயிரம் ஜப்பான் விரர்களை மண்டியிட வைத்து தனது வீரத்தை
பறைசாட்டியது.
நந்தனார் பள்ளி வைத்து நடத்தி சைவமே தமிழரின் மதம் என முழங்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியான
சகஜனந்தர் அரசியல் பிரமுகரானது. இப்படியான செய்திகளை தனித்தனி நூல்களாக,
துணுக்குகளாக படித்திருப்போம், இவைகளில் உள்ளூர் செய்திகள் பல விடுபட்டு விடும்.
இவைகளையெல்லாம் அஞ்சலை அம்மாள் மூலம் தொகுத்து வழங்கியுள்ளது இந்த நூல்.
நூலினை படித்து முடிக்கும் போது மனம் கசிந்து விட்டது. மீண்டும்
மீண்டும் சொல்லலாம், வ.உ.சியின் வீர வரலாற்றை மறைத்தது போல் அஞ்சலையம்மாளின்
தீரமிக்க வீர வரலாற்றை நாம் கொண்டாவில்லை. பேராயக்கட்சியினர் அல்லாதவர்களும் அவரது
தீரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. பல்கலை கழக ஆய்வுப்புலத்திலும் அஞ்சலை அம்மாள்
குறித்து ஆய்வு வரவில்லை. அப்பணியை செவ்வனே செய்து முடித்து நூலாக்கம் செய்த நூலாசிரியர்
இராஜா வாசுதேவன் போற்றப்படுவார்.