Search This Blog

Tuesday, 31 December 2024

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

 

நூலதிகாரம்

நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன்

வெளியீடு ; அடையாளம்

 

‘முந்தி பிறந்தவன் நான் முதுகில் பூநூல் தரித்தவன் நான்

சாதியில் ஜங்கமன் நான், சாதிக்கெல்லாம் பெரியவன் நான்

முன் குடுமி, பிங்குடுமி வெண்சாரமம் பெற்றவன்,

வெள்ளைக்குடையான், புத்தகம் என்னது, பூநூலும் என்னது,

கட்டோடு வெற்றிலையும், தட்டோடு பாக்கும்,

சொப்போடு சுண்ணாம்பும், பாக்கும் தின்னும் பல் வெளக்கி

வெள்ளையாடை உடுத்தி, வீசி நடந்து வெள்ளிப்பிரம்பெடுத்து

காரூர் ஜாம்பவ மூர்த்தி பறை சாட்டி வருகிறேன்,

நாச்சிக்கும் நாச்சியப்பனுக்கு பச்சை பந்தலுடுத்தி

நித்திய தோரணம் கட்டி கல்யாணம் செய்யப்போறோம்

நல்லோர் இருக்கலாம் பொல்லார் எல்லாம் ஊருக்கு போகலாம்’’

 

தமிழகத்தில் கருநாடாக ஆந்திர எல்லையான கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள கன்னட மொழியை தாய் மொழியாக கொண்ட ஓலையர், திகலரு, புட்ட ஓலையரு, முரசுப்பள்ளி, மக்கதூர் என்ற வழக்குச்சொல்லில் அழக்கப்படும் முரசுப்பறையர் குறித்த ஆய்வு நூல். இம்மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக ‘நாடு’ என்ற அமைப்பில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது பழக்க வழக்கம் பண்பாடு வரலாறு குறித்து தஸ்டன் எழுதிய குடிகளும் குலங்களும் நூலிலும் மைசூர் மாநில கோப்புகளில் (கெசட்டியர்கள்)  பதிவுகள் உள்ளன. பொதுவெளியில் பேசுபொருளாக நூல்கள் குறைவே. இந்த குழுக்கள் இங்கு வாழ்ந்த கல்வெட்டு சான்றுகளோடு துவங்கும் நூல் பட்டு நூற்பும் செய்துள்ளனர் என்ற தரவினை முன் வைக்கிறது. மாமன்னன் திப்பு சுல்தான் காலத்தில் வேளாண்மை வானிலை நுணுக்கங்களை அறிந்த குழுக்கள் என்று பதிவு செய்துள்ள சிறிய நூல் கொத்துக்கொத்தாக பல தகவல்களை தந்துள்ளது.

இவர்கள் நாடு, தேசம் என்ற வரையரையில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு குலக்குரு என்ற தலைவர்கள் பார்ப்பனர்கள் திரிவிசிஸ்டாங்க ஐயங்கார் பிரிவை சேர்ந்த இவர்கள் திருப்பதி எல்லைப்பகுதியிலிருந்து வியஜ நகர அல்லது சோழர் காலத்தில் குடியமர்த்தப்பட்டவர்களாக இருக்கலாம். இவர்களே இம்மக்களை முழுமையாக வழிநடத்தும் நிர்வாகத் தலைவர்களாக இருந்துள்ளனர். இந்த நிர்வாகத்தில் கன்னடம் பேசும் லிங்காயத்து குலத்தினரே பிரச்சனைகளை பேசி தீர்ப்பு சொல்லும் அதிகாரம் படைத்தவர்கள், இவர்களுக்கு கீழ் மணியகாரன், எஜமான், கோல்காரர், பூசாரி இந்த அமைப்பு முறை தலைமுறை தலைமுறையாக வருபவை. இந்தக்குழு சாதி விட்டு சாதி மாறி திருமணம் முடித்தவர்கள், சாதிக்குள் முறை தவறி திருமணம் முடித்தவர்கள், திருடுபவர்கள், பெண்களை மானபங்கப்படுத்துவர்கள். சண்டையின் போது செருப்பு கொண்டு அடித்தல் போன்றவை குற்றங்களாக கருத்தப்பட்டு தண்டிக்கும் அதிகாரம் படைத்தது. நாக்கில் சூடம் ஏற்றுதல் அல்லது சூடு வைக்கும் தண்டணை சாதி மாறி திருமணம் முடித்தவர்கள், சாதிக்குள் முறை தவறி திருமணம் முடித்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை நிறைவேற்றுபவர்கள் குல குருவாக இருப்பவர். இதை வைத்துப்பார்க்கும் போது சாதி ஏன் இந்திய ஒன்றியத்தில் இறுக்கம் பெற்றுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இப்பகுதியில் வாழும் தமிழை தாய் மொழியாக கொண்ட பறையர்களும் இதே அமைப்பு முறையில் வாழ்ந்துள்ளனர் என்பதை கூர்ந்து கவனிக்க வைக்கிறது இந்த நூல். தமிழ் பறையர் அமைப்பில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை வசூல் செய்பவர் சலவாதி , தெலுங்கு கன்னடத்திற்கு செட்டி  என்ற பெயரில் லிங்காயத்து குலத்தை சேர்ந்தவர் நிர்வாக அமைப்பில் உள்ளனர். இவர்கள் லிங்கம் பொறித்த பூநூல் அணியும் வழக்கம் உண்டு. இவர்களது பணி வேளாண்மை குடிகளுக்கும் பறையர் குலத்தினருக்கும் ஏற்படும் சச்சரவுகள், கூலி உயர்வு கூறித்து பஞ்சாயத்து பேசும் அதிகாரம் படைத்தவர்கள். இப்பகுதியில் உள்ள சலவாதிகள் கன்னடம் பேசும் செட்டிகளுக்கு கீழ் தான் அதிகாரம் உள்ளதாம். இவர்கள் செட்டி சொல்லும் பணியை செய்ய வேண்டும். செட்டிகள் அரசின் மணி முத்திரையை பெற்றவர்கள். இதனை தெய்வத்திற்கு ஒப்பாக அனைவரும் வணங்குகிறார்கள். கருநாடாகத்தில் உள்ள லிங்காயத்திற்குள் இப்பதவி இருந்த சான்றுகள் இல்லை என்கிறார் நூலாசிரியர்.

பல்லவர்கள் காலத்தில் ஆந்திர மாநிலத்திலிருந்து ப்பிராமணர்கள் தமிழகத்துக்கு அழைத்து வந்தனர், இவர்களுக்கு வீடு கட்ட வீடு அருகில் கிணறு அமைக்க, செஞ்சாந்து வைத்து சுவர் பூச்சு செய்திட அனுமத்த கல்வெட்டு சான்றுகளை கூர்ந்து பார்க்கும் போது பிற குழுக்கள் இவைகள் செய்திட அரச அனுமதியில்லை என்றே பொருள்படுகிறது.

இன்றும் கிராமங்களில் பட்டியல் குழுக்கள் செருப்பு போட, உருமா கட்ட, குடை பிடித்துச்செல்ல சமூக தடை சட்டம் உள்ளதை அறிவோம். இந்த அனுமதியை பிற்பட்டுத்தப்பட்ட குழுக்கள் எப்படி பெற்றனர் என்பதற்கான அந்தியூர், திருப்பூர், அவிநாசி, பேரூர் குடிமங்களம், கடத்தூர், கரூர், மொடக்கூர், பாரியூர் கல்வெட்டு சான்று மூலம் ‘பார்பனர்களுக்கு 10 கழஞ்சி பொன் கொடுத்தால் அதை அவர்கள் பாதியை அரசுக்கு செழுத்தி விட்டு மீதியை அவர்கள் வைத்துக்கொண்டு செருப்பு அணிய, சீன குடை (வெண்பட்டு) பிடிக்க, குதிரையில் போக அனுமதி வழங்கியுள்ளதை பதிவிட்டு வியப்படைய வைக்கிறது.

 

இறப்பு சடங்கின் போது பால் தெளிக்கும் சடங்கின் போது சிறியவர் முதல் பெரியவர் வரை பீடி, சுருட்டு வழங்கி அதை அவ்விடத்தில் புகைக்க செல்லும் பழக்கம் கூர்ந்து கவனிக்க வைக்கிறது. குடும்ப சம்பிரதாய நிகழ்வுகளில் ஏகாளி என்ற வண்ணார் குலத்தவரே முன்னின்று செய்வது கவனிக்க வேண்டிய செய்தியாக உள்ளது.

உருமி அறிந்த இசைக்கருவி என்றாலும் இதனை தலை உறுமி என்ற கருவியை தலையில் வைத்து இசைக்கும் வல்லமை நுணுக்கம் பெற்றவர்களாக இக்குழுக்கள் இன்றும் உள்ளனர். அதே போல் உடும்பு சவ்வின் மூலம் செய்திடும் இசைக்கருவிகளை இம்மக்கள் செய்திடுவார்களாம்.

யாத்திரை என்பது செல்வது ஜாத்திரை என்பது கூடுதல் என்ற செய்தி நூலாசியரியரை பாராட்டாமல் இருக்க முடியாது.

கிருஷ்ணகிரி வடக்கு பகுதியில் பறையர், வெள்ளாளர் இருசமூகமும் சேர்ந்து கரகம் எடுக்கும் விழா இன்று வரை சிறப்பாக நடை பெறுவதை பார்த்துள்ளேன். இதில் பறையர் கரகம் ஆண் சாமியாகவும், வெள்ளாளர் கரகம் பெண் சாமியாகவும் கருதி இரு கடவுளுக்கும் திருமணம் நடத்துவே தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதியில் அதி பிரமாண்ட திருவிழா. இதில் வன்னியர் பிறந்தவிட்டார்கள் என விழாவிற்கு வருவது, மறுகரக விழாவின் போது நாடார் குலத்தினர் கரகம் கொண்டுவருவது என அனைத்து குலங்களும் ஒற்றுமையாக இருப்பது இவ்விழாவில் காணலாம்.

இந்த சமூக அமைப்பு முறையில் உள்ள பழக்க வழக்கங்கள் எப்படி நிலை கொண்டுள்ளது என்பதை அறிந்திட நினைக்கும் நபர்கள் வாசிக்க வேண்டிய நூல்.       

Monday, 28 August 2023

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

 

                                                 நூலதிகாரம்

 
நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்
ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார்
பதிப்பகம் ; தமிழ்மண்; 9444410654
விலை 270
 
‘’பழங்குடிகள் தங்களது குழு நடவடிக்கையில் அதிக ஞானமும், அறிவியல் ஆற்றலும், இயற்கையை எதிர்கொள்வதிலும் மிதமிஞ்சியவர்கள். ஆனால் இவர்கள் பொது சமூகத்துடன் உறவாடி தொடர்பு கொள்ளும் போது பாதுகாப்பற்றவர்களாக மாறிவிடுகிறார்கள். அரசாங்க சட்டதிட்ட நெறிமுறைகளை புரிந்து கொள்ளும் கடினத்தால் மனவழுத்ததிற்காளாகி வீழ்த்தப்படுகிறார்கள்; கிறிஸ்டோபர் பழங்குடிகள் ஆய்வாளர். 
 
ஊராளி, தனியான மொழியை கொண்ட இனம். இவர்கள் குறித்து இதுநாள் வரை தனி நூல் வந்ததில்லை. பல்லாண்டு காலம் ‘பரண்’ என்ற தொண்டு நிறுவன அமைப்பு மூலம் இம்மக்களுடன் பயணித்து அவர்களது பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், வழிபாடுகள் இவைகளை முழுமை தொகுக்கப்பட்ட முனைவர் பட்ட ஆய்வு நூல் என்றால் மிகையான பாராட்டு அல்ல.. 
 
தென்னகம், மேற்கு மலைகளில் வாழும் காடர், பளியர், முதுவர், காணி குடிகள் குறித்தும், நீலகிரி மலையில் வாழும் தோகதர், குறும்பர் உள்பட ஏழு குழுக்கள் குறித்தும் பல ஆய்வு நூல்கள் வந்து ஆனால் வீரப்பன் தேடுதல் வேட்டையில் பொது தான் ஊராளி, லிங்காயத்து, சோளகர் போன்ற பழங்குடி இனப்பட்டியல் மக்களை பொதுச்சமூகம் மெல்ல அறிந்தது. சமூக வழக்கறிஞரான திரு. பால முருகன் அவர்களின் ‘சோளகர் தொட்டி’ புதினம் மூலம் ஓரளவிற்கு அறிமுகமானார்கள். பொதுவுடமை கட்சியின் தனி பிரிவாக செயல்பாடுகளாலும் அமைப்புகளுக்குள் இம்மக்கள் தெரிந்தார்கள். 
 
பன்னிரண்டு உட்பிரிவுகளை கொண்ட ஊராளி மக்களுக்கும் அங்குள்ள லிங்காயத்து மக்களுக்கும் உள்ள தொடர்பு முல்லை மருத நிலப்பரப்பில் உள்ள கம்பளத்து நாயக்கர் அருந்ததியர் கதைபோல் உள்ளது. அதே போல் தனி மொழி உடைய சோளர்களுக்கும் இவர்களுக்குமுள்ள உறவு முறைகளை விளக்குகிறது. அனைத்து பழங்குடி மக்களும் மாட்டுக்கறி உண்பதில்லை என்ற உண்மையை பலரும் அறிந்திருந்தாலும் இதை பொதுவெளி சமூகத்திற்கு பரவலாக தெரிவதில்லை. ஆனால் காட்டுக்குள் வாழும் லிங்காயத்துகள் புலால் உண்பதில்லை பலரும் அறியா செய்தி. 
 
ஊராளிகளின் தொன்மக்கதைகள் கிரேக்க கதைகளுடன் ஒத்து செல்வதை நூலாசிரியர் விவரிப்பது சித்தர்கள், முனிவர்கள், ஜெஜூட் பாதிரிமார்களைப்போல் ஆய்விட்டுள்ளார் என்பதை என்பதை நிறுவியுள்ளார். 
 
கொடிய நஞ்சினைபிரிட்டீஷார் வனச்சட்டமாக்கினார்கள். அதை இன்று வரை பொது விவாதமாக்காதன் விளைவால் மேற்கத்திய மனப்பான்மையுடன் ‘பாங்காட்டிற்குள் எப்போது குயேறினீர்கள்’ என்ற கேள்வியுடன் ஆய்வு செய்து, வனம் என்பது மனிதர்கள் வாழ பகுதி என்ற மனநிலையை இன்றுவரை நிலைநிறுத்திவிட்டார்கள்’’ என்பதை சொல்லாமல் பதிவு செய்துள்ளது நூல்.
 
அரச மரபில், காட்டிற்குள் வேட்டையாடுவதன் மூலம் கொரில்லா போர் முறையும் மனவலிமையும் பயிலும் இடம். கருங்காடு என்ற பாங்காட்டில் வேட்டையாடிட போகும் போது விலங்குகள் மறைந்திருந்து தாக்கும். அதனிடமிருந்து தப்பிப்பது, அல்லது அதனை எதிர்கொண்டு வேட்டையாடி கொல்வது. திக்குத்தெரியாத காட்டில் திசைமாறி சென்று ‘மீண்டு’ வருவது இது தான் அன்றைய காடுகளின் பயன்பாடுகளின் ஒன்று. இப்படி பயிற்சிக்கு காடுகளை அறிந்த குழுக்கள் இருந்தால் தானே தப்பிப்போனவர்களை மீட்க முடியும். வனத்துள் பல்லாயிரம் ஆண்டுகளாக மிளகு, ஏலம், இஞ்சி பயிரிட, பட்டை, சோம்பு, கருவேப்பிலை, அரண்மனை, அணைகள் கட்ட கடுக்காய், சித்த மருத்துவ பெருபாலான மூலிகைகள் இருக்கும் இடமறிய காடறிவந்தவர்களுக்குத்தானே கண்டறிந்து கொண்டு வரமுடியும். மனித குலம் தோன்றிய காலம் தொட்டு காடுகளுக்குள் மக்கள் வாழ்ந்தார்கள் என்ற பார்வையை புறம் தள்ளியதன் விளைவு தான் வனம் என்பது தனிக்கிரகமாக பார்க்கும் மனநிலையை உடைக்கும் நூலினை தனக்கே உரிய மெல்லிய குரலில் எழுதப்பட்ட நூல்.
 
இந்தியாவில் வனச்சட்டம் என்ற முதலாளிகனுக்கான சட்டத்தை கொண்டு வந்தபின்னர் மலைகளில் வாழ்ந்த மக்கள் ‘உழுதிடும் நிலத்தை காடு என்றே சொல்லும் பழக்கம் உள்ளவர்கள் என்று அறியாது, வேளாண்மை நிலத்தை காடு (forest) என எழுதி காட்டில் மைப்பகுதியில் வாழ்விடமாக கொண்ட மக்களை வெளியேற்றி விட்டனர். இதை நூலாசிரியர் ‘பிச்சைக்காரர்கள் அல்லாத இனத்தை பிச்சை எடுக்க வைத்துவிட்டார்கள்’ என நாகரீகமாக பதிவிட்டுள்ளார்.
 
இம்மக்களின் பிரதான உணவு ராகி என்ற கேழ்வரகு. இதன் தாக்கம் பெண்ணை கூட ராகி என்றே மறை பொருளாக சொல்லும் வழக்கம் உள்ளதை அவர்களது சடங்கு முறைகள் தொகுப்பில் பதிவிட்டுள்ளார். பில்லூர் என்ற சொல் தெலுகு சொல் என்பதால் பூனை அல்லது அதைபோன்ற தந்திரம் உள்ள மக்கள் வாழ்விடம் என நம்பிக்கை ‘பில்லு’ என்பது ஊராளி மொழியில் வாழ்விடம் என வெளிச்சமிட்டு பில்லு என்ற புல் வகையில் வீடுகளை வேய்ந்த வீடுகளின் படத்ததையும் பதிவிட்டுள்ளது இந்நூல். 
 
திராவிட குழுக்கள் பெரும்பாலும் குடும்ப நிகழ்வில் தாய்மானுக்கு மையப்பங்குண்டு என்பதை பல சான்றுகளோடு ஊராளி மக்கள் குடும்ப நிகழ்வுகளான திருமணம், குழந்தை பிறப்பு, திருமணம், இறப்பு வரை மக்களோடு வாழ்ந்து அவர்களது மொழியில் பேட்டியாக ஊர், பெயர், அவர்களது படம் உள்ளிட அனைத்தையும் பதிவிட்டுள்ளது இந்த ஆய்வேடு.
குடும்ப பிரச்சனைகளில் பஞ்சாயத்து முறை வந்தால் தீர்ப்பு சொல்லும் அதிகாரம் லிங்காயத்துகளிடம் உள்ளது. அதே போல் கோயில் திருவிழாக்களில் பூசாரிகளாக ஊராளி இனத்தினர் இருந்தாலும் லிங்காயத்துகளே பஜனை பாடும் அதிகாரம் உள்ளதை குறிப்பிட்டு இவர்களுக்குளிருக்கும் சாதிய முரண்பாடுகளையும், ஊராளிகளுக்கும் அருந்ததிய மக்களுக்கும் இருக்கும் சாதிய ஏற்ற தாழ்வு முறையும் போகிற போக்கில் பதிவிட்டு வருகால ஆய்விற்கு பாதை அமைத்துக்கொடுத்துள்ளார் ஆய்வாளர் ஊராளன்.
தரைப்பகுதியில் குடியானவர்களுக்கு சேவைக்குடிகள் இருப்பது போல் அங்கு சேவை குடிகள் என்பவர்கள் அருந்ததியர் மட்டுமே இவர்களே முடிதிருத்தம் செய்திடும் பணியையும், இறப்பு சடங்கு செய்வது மட்டுமே செய்கிறார்கள். ஆசாரி, சலவை தொழில், குயவர் என்ற குழுக்கள் பணியை இக்குழுக்கள் தங்களது தேவையை குறுக்கி தங்களுக்கு தாங்களே செய்துகொள்கிறார்கள் என்ற செய்தியும் கூர்ந்து கவனிக்கதக்கது. 
 
ஊராளி குழுக்களுக்குள் மறுமணம் எளிதாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் திருமணத்திற்கு முன்பு ஆண் பெண் தனித்து பேசக்கூடாது என்ற நடைமுறை 1990 வரை கட்டுப்பாடாக இருந்தது. தற்போது சற்று தளர்வு ஏற்பட்டுள்ளதாம். பழங்குடி மக்களிடம் இப்படியான கடுமையான சட்டம் இருப்பது ஆழ்ந்து ஆய்வு செய்திட வேண்டும் என்றே தோன்றுகிறது. 
 
திருமணச்சடங்கில் தரைப்பகுதியில் உள்ள கமளத்து நாயக்கர், அருந்ததியர், கன்னடம் பேசும் குழுக்களிடம் வெற்றிலையில் பால் தொட்டு தலையில் வைத்து ஆசிர்வசிக்கும் பழக்கம் உள்ளது போல் அம்மக்களிடம் உள்ளது கூர்ந்து கவனித்தக்கது. அதே போல் தலைப்பாகை கட்டும் நடை முறை, வெள்ளை ஆடை உடுத்தி திருமண சடங்கு செய்வது, கருப்பு பாசியை நாத்தனானர் தாலியாக கட்டுவதில் உள்ள நடைமுறை தரைப்பகுதியில் மடி மாற்றும் சடங்கிற்கும் உள்ள தொடர்பு, மாப்பிள்ளை பெண் கங்கணம் கட்டிய 24 மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருப்பது, கோல்குச்சி என்ற மணமுறிவு குறியீடு, பெண்ணுக்கு நகை பணம் கொடுத்து திருமணம் முடிக்கும் பழக்கம் என பலவற்றை தொட்டு பெரும் ஆய்விற்கு வழிவிட்டுள்ளார் நூலாசிரியர்.
பசுங்கோமியம், பசும்சாணம் இன்று குறிப்பிட்ட அரசியல் கட்சியினரிடம் கொள்கை கோட்பாடாக மாறிவிட்டது. ஊராளி மக்களில் இறந்தவர்கள் புதைத்த பின் அனைவரும் சாணத்தை உடலில் பூசி குளிக்கும் நடைமுறையும் மலையாளிகள் என்ற குலத்தினரிடம் உள்ள மகாபாரத கதைகளும், இதே போல் இறந்த ஆண்கள் அனைவருக்கும் நடுகல் நடும் பழக்கம் தரப்பகுதியில் உள்ள கன்னடம் பேசும் சில குழுக்களிடமும், தெலுகு பேஉஸ்ம் அருந்ததிய சில குழுக்களிடம் உள்ளது போல் இம்மக்களிடம் உள்ளது. 
 
பார்ப்பன பூசாரிகள் தலையில் கால் வைத்து ஆசிர்வசிக்கும் மரபினை மறுத்தலிக்கும் நாம் இப்பழக்கம் பழங்குடி மக்களிடம் உள்ளதை நாம் கவனிக்க மறுத்து விட்டோம் என்ற பார்வையை புறம் தள்ளமுடியாது.
இறந்தவர்களுக்கு இளநீர் விளக்கு எண்ணை தேய்த்து வழிபடும் பழக்கம் தேவேந்திர குல வேளாளர் குலத்தில் ஒரு பிரிவில் சாமி வழிபாட்டில் உள்ளது போல் ஊராளி இனத்தில் கொடுவார் குழுவினரிடம் உள்ளது கவனிக்கத்தக்கது.
பண்ணாரியம்மன் இவர்களது தெய்வத்தை 
 
பெருந்தெய்வமாக மாற்றி விட்டனர் என்ற சான்றுடன் நிறுவியுள்ளார் ஊராளி.
ஊராளி மக்களிடம் உள்ள கோவில் வழிப்பாட்டு பாடல், தாலாட்டு, ஒப்பாரி இசைகருவி, புழங்கு பொருள்கள், சொற்கள் என தொகுத்து ஒரு பல்கலை கழகம் செய்திடும் பணியை தனிமனிதனாக சாதித்து விட்டார் நூலாசிரியர்.
பிரிட்டீஷ் ஆட்சி வரை காடுகள் முழுவது இவர்களுக்கு சொந்தமானதாக இருந்ததை வனச்சட்டம் மூலம் வன நிலம் வகைப்பாடு செய்ப்பட்டு எஸ்டேட் ஆக்டிற்கு கொண்டு வந்து குத்தகை நிலமாக்கினார்கள். இதனால் மலைவாழ் மக்கள் அல்லாத மக்கள் அங்கு குடியேற்றம் நடந்ததன் விளைவால் இம்மக்கள் அவர்களின் அடிமைகளாக்கி விட்டனர் என்பதை இட்லி போண்டாவிற்கு நிலத்தை விற்ற சான்றுகளுடனும் அரசியல் சான்றுகளுடனும் நிறுவியுள்ளார் ஆசிரியர். 

 
வனத்தை காப்போம் என பேசுபவர்கள், மானுடவியல் ஆய்வாளர்கள், சமூக அக்கரையுள்ளோர் படிக்க வேண்டிய நூல் என நம்பிக்கையுடன் பரிந்துரைக்கிறேன்.

Monday, 3 April 2023

வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் ஏன் தேவை


 
                               

                               வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் ஏன் தேவை 

 

 கடந்த தலைமுறையில் மலட்டுத்தன்மை, கேன்சர், சர்க்கரை இதய நோய்கள் குறைவு. காரணம் சித்த மருத்துவம் என்ற பண்டுவம் நம்மிடம் அப்புறப்பட்ட போது. 

 




பாண்டிய, சோழ விஜயநகர ஆட்சியாளர்கள் மூலம் சமற்கிருதமயமானாலும் (sanskritization) எந்த தனி மனிதனோ, குழுவோ, குலமோ சாதி மேலோன்மையை பெறவில்லை. அதற்கு பதிலாக சாதிய ஆதிக்கத்தையும், ஆண்டான் அடிமைத்தனைத்தையும் பெற்று விட்டோம்.

 இந்திய ஒன்றியத்தில் மன்னர் ஆட்சிக்கு அடுத்து வந்த ஆங்கிலேயர்களால் நாம் (westernization) பெற்று இந்திய ஒன்றிய தன்மையை இழந்தோம். உடை முதல் உணவு, கலாச்சாரம், பண்பாடு, மருத்துவம் அனைத்திலும் ஒற்றை தன்மையான  (monopoly) சிந்தனையை நாம் ஏற்று விட்டோம். இதன் விளைவால் கண்டுபிடிப்பு என்பது நிறுவனங்கள் (artificial company) மூலம் வெளிவந்தால் தான் ஏற்போம் என்ற மனநிலையை பகுத்தறிவு என்ற ஒற்றை வாதத்தால் பகுத்தறிய மறுக்கும் மனநிலையைக்கு மாறினோம். இதில் பல்லாயிரம் கண்டுபிடிப்புகள் வந்தாலும் உணவு விசயத்தில் மட்டும் பெரிதான மாற்றத்தை மட்டும் நிறுவனங்கள் கொண்டு வரமுடியவில்லை. அதனால் தான் உணவில் பழைமைக்குள் புதுமை என்ற சித்தாந்தந்திற்குள் நின்று வியாபாரம் செய்வார்கள். இதற்கு எளிய எடுத்துக்காட்டு புலால் உண்பது எந்த எந்த விலங்கு கறிய உண்ணலாம் என பண்டைய மனிதன் கண்டறிந்ததை தாண்டி புதிதாக இன்று வரை கண்டறியவில்லை என்பதே உண்மை.

இதில் பழமை பேசும் இசுலாமியர், அந்தனர், பழங்குடி  குழுக்கள் உள்பட பலரும் மேற்கத்திய கலாச்சார உடையான கோர்ட்டு சூட் போடும் ஒற்றைத்தன்மைக்குள் மாறி இருப்பதைப் பார்க்கலாம். இந்த ஆடை மாற்றம் என்பது அழகியல் சார்ந்தது என்பதை சொலும் உடல்கூறுயியல் மானுடவியல் அறிஞர்கள் ‘’இந்த மனநிலை உணவினை நேரடியாக கைவைக்க முடியாது ஆனால் அதன் பக்கவாட்டில் சிதைக்கும் தன்மை கொண்டது’’ என ஆய்வுகளாக கொடுத்துள்ளனர்.  இப்படியாக சிதைத்ததில் ஒன்றுதான் உலகம் முழுவதிலும் இருந்த வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை மாற்றியது. இந்த பழக்கம் திராவிட அல்லது தமிழர்களுக்கு மட்டும் அல்ல மனித குழு எங்கெல்லாம் வாழ்கிறதோ அங்கெல்லாம் இந்த பழக்கம் இருந்தது, இருக்கிறது. இடத்திற்கு இடம் இதில் சிறிசில மாற்றம் இருக்குமே தவிர பெரும் மாற்றம் இல்லை என உணவு சரித்திர நூல்கள் அறுதியிடுகிறது. 

 

வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை மன்னர் ஆட்சியில் சடங்கு சம்பிரதாயத்தில் (Ritual and cultural) வைத்திருந்தனர்.  இதனாலே வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது என்பது மரியாதை கலந்ததாக இன்றும் உள்ளது. இந்த பழக்கம் குறிப்பிட்ட சாதி மற்றும் ஆதிக்கத்த தன்மைக்குள் இருந்ததால் பிரிட்டீஷ் ஆட்சிக்கு வந்த போது மன்னர் ஆட்சி மீதிருந்த கோபத்தை வெளிக்காட்ட வெற்றிலை பாக்கு மீது காட்டி தூக்கி ஏறிந்தனர் என்பதை மறுக்க முடியாது'' என வேடிக்கையாக ஆய்வாளர்கள் குறிப்பிடுவது உண்டு. ஆனால் வெற்றிலை போடுவது கெட்ட பழக்கமாக மாற்றியது பகுத்தறியா பகுத்தறிவு என்பதை மறுக்கவும் முடியாது. 

 


தற்போது ஆண்களில் பல பேருக்கு மலட்டுத்தன்மை உருவாகியுள்ளது என்பதை ஆய்வாக சொல்லாவிட்டாலும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, ஏலம், கிராம்பு, பத்திரி என்ற சாதிபத்திரி இவைகள் கலந்து போடும் பழக்கத்தில் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு அளவிற்கு சுருங்கி விட்டதே இதன் மாற்றம் காரணம் என்பதை விட கிராம்பு, சாதிபத்திரி, ஏலம் இவைகள் பிரிட்டீஷாரில் வனச்சட்டத்தால் கடுமையான விலையேற்றத்தை பெற்று விட்டதுடன் கிடைக்காத பொருளாகவும் மாறிவிட்டது. செரிமான பிரச்சனை முதல் எலும்பு கெட்டி பெருவது, ஆண்மை ஊக்கம் வரை வெற்றிலை, பாக்கு என்பது பல நோய்களைத் தீர்க்கும் ஒரு அருமருந்து என்பதால் முக்கியத்துவம் கொடுத்திருக்கிது மனிதகுலம்.  பிரிட்டீஷ் ஆட்சியினர் காலத்திற்கு முன்பு சித்த மருத்துவத்தில் புகையிலையும் ஒரு வகை மருந்து தான் ஆனால் வெற்றிலை பாக்குடன் போடும் பழக்கத்தில் இல்லை. இந்த பழக்கம் பிரிட்டீஷ் ஆட்சியில் வந்தது. புகையிலையை வைத்துக்கொண்டு வாயில் கேன்சர் வந்திடும் (புற்றுநோய் எப்படி உருவாகிறது என இன்று வரை தெளிவான முடிவு இல்லை), பற்களில்  கரை போகவே போகாது (உண்மைதான் போகவே போகாது), தவிர "டேய்.. இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டு கிட்டு….எனச் சொல்லிச் சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைத்து விட்டார்கள் பகுத்தறியா பகுத்தறிவாளர்கள்.

வெற்றிலை, பாக்கில் சேரும் சுண்ணாம்மில் கல்சுண்ணாம்பு, முத்துச்சிப்பி சுண்ணாம்பு, புளிபோட்ட சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி உண்டார்கள். இதனை சுவைக்கும்போது முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டும் என்றும், மூன்றவதாய் ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட்ட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில், "ஆங்.. தாம்பூலமா அப்படின்னா?", எனக் கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது. வெற்றிலை எச்சிலை துப்பிட பனிக்கம் என்ற தனிப்பாத்திரம் வைத்திருந்ததெல்லாம் காலமாற்றத்தில் காட்சிபொருளாக மாறி ஆய்வாளர்கள் மட்டுமே இதை காணும் நிலை மாறிவிட்டது.

 பெருகி வரும் ஆண் மலட்டுத் தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் Motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து.வெற்றிலையில் உள்ள Hydroxy Chavicol எனும் Phenol Compound ஆனது ஆண்களின் Prostate-ஐ வலுப்படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது,

விதைப்பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு Prostate-ல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது Motility உண்டாகிறது, IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தைச் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள் போல,மலச்சிக்கலா…., தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கைச் சேர், வாய் நாற்றமா, கிராம்பு சேர், வீரியம் வேண்டுமா,….. சாதிக்காய் சேர் எனச் சொன்ன தமிழ்ச் சமூகம் இன்று Infertility center-களில் முடங்கி கிடக்கிறது. அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூலத்தின் மகத்துவத்தை எடுத்துரைப்போமே. 

சித்த மருத்துவத்தில் ரசத்தை (பாதரசம்) மருந்தாக்குவதற்கு சுத்தி முறையில் பயன்படுவது வெற்றிலை. பல மருந்துகளை இதன் சாற்றில் ஊறல் போட்டு அதன் நஞ்சினை நீக்கவும் பயன்படுகிறது. 

 

 முத்துநாகு உடன் Karthikeyan Karuppasamy  

 

 

Wednesday, 15 March 2023

தமிழர்கள் திராவிடர்களே திராவிடர்களே.....!




                        தமிழர்கள் திராவிடர்களே திராவிடர்களே.....!


''திராவிடம் என்பது கிறித்தவ மதத்தை பரப்ப வந்த திரு. கார்டுவெல் அவர்கள் 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூல் எழுதிய பின் திராவிடம் என்ற சொல்லாடல் வந்தது அதையே தோழர் பெரியார் தூக்கி சுமந்து தமிழ் மக்களை ஏமாற்றி இயக்கம் கட்டினார்'' என முகநூலிலும், ஊடகங்களிலும் பரப்புரை செய்திடுகிறார்கள். அது எந்தளவிற்கு மெய்யானது.  திராவிடம் என்ற சொல் எங்கெல்லாம் உள்ளது என்பதை பட்டியல் இடுகிறோம். முடிந்தவரை. 



1. காரவேளன் ஹத்திகும்பா (அலகாபாத் - இது அசோகன் காலத்துக்குறியது)  கல்வெட்டு தமிழ்நாட்டை "திரமிகா / Dramica என்று குறிப்பிடுகிறான்.


2. பொது ஆண்டுகிற்கு பின்பு 5ம் (கி.பி) நூற்றாண்டில் கங்க மன்னன் துர்வினீதன் கொங்குதேச இராசாக்கள் சரித்திரத்தில் "காஞ்சி உள்ளிட்ட திராவிடத்தை வென்றான்" எனக்குறிப்பிடுகிறது.


3. பொ.பி 642 காஞ்சி வந்த சீனயாத்ரீகர் இயூன்சங் அவரது குறிப்பில் காஞ்சியை சுற்றியுள்ள பகுதியை திராவிடம் என்று குறித்துள்ளார்.


4. திராவிடம் = தமிழ்நாடு; திராவிடம்; ஆந்திரம் ;கர்னாடகம்; மகாராட்டிடம்;  கூர்சரம்  என்ற பஞ்சதிராவிட தேசங்கள். திரமிளம் = திராவிடம். செந்தமிழ்அகராதி.


5. பொ.பி. 1246-1279 மூன்றாம் இராசராசன் மகன் இராசேந்திரன் "திராவிட மண்டலத்து (பல்லவநாடு) குலோத்துங்க ராசேந்திரனை வென்று (காகதீய அரசன் கணபதி இந்த அரசனே ஹம்பி கோட்டை முகப்பில் மிக பெரிய பிள்ளையார் சிலையை விஜயநகரத்து அரசுக்கு காணிக்கையாக அதாவது அன்பளிப்பாக செழுத்தினான்) கப்பம் வாங்கினான். (Epind volm. 27 no35. நயனப்பள்ளி கல்வெட்டு.


6. ஆந்திரதேசத்து பித்தர்புரத்தில் உள்ள மல்லப்பதேவனின் கல்வெட்டு (E.i.i V எண் 33;செ.22-4 "அபூர்வ புருஷனான குலோத்துங்கன் ஆந்திரநாடு உட்பட ஐந்து திராவிடப் பகுதிகளையும் ஐம்பது ஆண்டுகள் ஆண்டான்" .


7 . "பழங்கால பாரததேசத்தில் 56 தேசங்கள். பி.வி.ஜகதீஸ் அய்யங்கார் "கிருஷ்னாநதியின் தென்பகுதியும் ; காவிரியாற்றின் வடபகுதியும் ; கருநாடகமும் ;இணைந்த பகுதியே திராவிட நாடு."


8. "அந்நாளிலே திராவிட (அல்லது) திரமிள என்ற சொல் காஞ்சியை தலைநகராகக்கொண்ட தொண்டைமண்டலத்தையே குறித்தது"-- பல்லவ செப்பேடுகள் 30 நூலின் ஆசிரியர் குழு.


9.  "நமாம யஹம் த்ராவிடவேத சாகரம்"-- திருவாய்மொழி-நாதமுனி தனியன்கள்.


10. 18453-1903 ஆண்டு சபாபதிநாவலர் எழுதிய நூலின் பெயர் "திராவிட பிரகாசிகை.


11. தாயுமான சுவாமிகள் தம் பாடலில்  "வல்லான் ஒருவன் வரவுந்திராவிடத்திலே" என்கிறார்.


13. கவிமணி தேசியவினாயகம்பிள்ளை தமிழ் நாட்டை "திராவிடநல் திருநாடு"என்கிறார்.


14.  ரவீந்திரநாத்தாகூர் தமது தேசியகீதத்தில்"திராவிடநாடு" என்கிறார்.


15. வேதாந்த தேசிகர் "திராவிடோஉபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி" நூல் : யாத்தார்.


16, இராமாயணத்திலும் பார்ப்பன வேதங்களிலும் 'திராவிட் என்ற சொல் உள்ளது.


17. திருமேனி &சிலப்பதிகாரத்தில் "ஆரியப் படை" கடந்த நெடுஞ்செழியன் என வருகிறது.


18. அத்வைதம் படைத்த ஆதி சங்கரர்,திருஞானசம்பந்தரை "திராவிடசிசு"என்றார்.


இலக்கியங்கள் ஆரிய-திராவிட என்றது இடத்தைச் சுட்டிக் காட்டுகிறது. பிரிட்டிஷ் காலனியவாதிகள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பே ஆரிய-திராவிட சொற்கள் பயன்பாட்டில் இருந்தது. இதை வைத்து ஐரோப்பிய இங்கிலாந்து காலனியவாதிகள் ஆரிய-திராவிட என்கிற சொற்களால்

1. மார்க்ஸ் முல்லர் போன்றோர் வரலாற்றைக் கட்டமைத்தனர்.

2. வில்லியம் ஜோன்ஸ்,

கிறிஸ்டோபர் கால்டுவெல் பாதிரியார் போன்றோர்... கிறித்தவ,பைபிள் புராண கதைகளின்படி மொழிக்குடும்பங்களை உருவாக்கினர். இந்த மொழிக்குடும்ப அடிப்படையில் இனவாத அரசியலை கட்டமைத்தனர்.  இந்திய வரலாறு நெடுகிலும் முரண்பாடு என்பது ஆரிய-திராவிட முரண்பாடு என்றனர். இந்திய வரலாறு ஆரிய-திராவிட இனவாத அடிப்படையிலானது என்றனர். இந்த நிலைபாடு எதற்காக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் உருவாக்கினர். பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் போராடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக.

அந்த அடிப்படையில்...

வடக்கே ஆரிய இனவாத அரசியல் பேசிய சாவர்க்கர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எங்கள் எதிரி இல்லை என்றார். எங்கள் எதிரி அதாவது ஆரியர் எதிரி இஸ்லாமியர்கள் என்றனர். தெற்கில் திராவிடர்களின் எதிரி ஆரிய பார்ப்பனர் என்றனர்."பார்ப்பனிய எதிர்ப்பு பிரதானமானது" என்றார் பெரியார்.


ஆகவே... வடக்கே... தெற்கில்...

பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து இரண்டு இனவாத (ஆரிய-திராவிட) அரசியல்வாதிகளும் போராடவில்லை. பிரித்தாளும் சூழ்ச்சியை, ஆரிய-திராவிட இனவாத அரசியலை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் திட்டமிட்டு செய்தது.


அதனால்....

ஆரிய-திராவிட இனவாத அரசியலால் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்த போராட்டங்களை திசைதிருப்ப பயன்பட்டது. பிரிட்டிஷ் காலனிய எதிர்ப்பில் பகத்சிங் போன்றோர்

உறுதியுடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tuesday, 7 March 2023

மலம் அள்ளும் தொழில் எப்படி வந்தது ? ஏன் வந்தது ? யார் கொண்டுவந்தார்கள்?

 

மலம் அள்ளும் தொழில் எப்படி வந்தது ? ஏன் வந்தது ? யார் கொண்டுவந்தார்கள்?

 

https://www.hindutamil.in/.../954712-how-did-you-come-to... 

            தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  பரப்புரையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘அருந்ததியர் சமூகத்தை மையப்படுத்தி மலம் அள்ளும் தொழில் குறித்துப்பேசியதாக’ எழுந்த சர்ச்சை சமூக வளைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறி அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

           சுகாதார துப்புரவு பணியில் மலம் அள்ளும் தொழில் எப்போது துவங்கியது?, குறிப்பிட்ட சமூகங்களை மட்டும் ஏன் இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்? என்ற கேள்விக்கு விடை தேட வைத்துள்ளது இந்த விவாதம்.

 

        மன்னர், பாளையப்பட்டு, ஜமீன் காலத்தில் அரண்மனைகள் தனியாகவும் அல்லது ஊரில் மையப்பகுதியில் அமைந்து பட்டி, ஊர், சேரி, பட்டிணம், நகரம் என்ற அமைப்பில், சாதிவாரியாக தெரு அமைந்திருப்பதும் அதில் தற்போது பட்டியல் குழுக்களாக அறியப்படும் குலத்தினர் பொதுவாக வடபுறத்திலும் சில பகுதிகளில் மேல் புறத்திலும் வீடுகள் அமைந்த சான்றுகள் உள்ளன.

 

        ஆண்டாண்டுகாலமாக மனிதர்கள் கூடும் தின, வார, மாத சந்தை, ஆண்டுக்கு ஒரு முறை கோயில் திருவிழாக்களை மையமாக வைத்து மக்கள் பெரும்திரளாக கூடும் திருச்சந்தையில் கூட துப்புரவுப்பணியாளர்கள் குறித்த தரவுகள் கிடைக்கவில்லை. ஆனால் கோயிகளில் உழவாரப்பணிகளை திருக்கூட்டத்தார் செய்த சான்றுகளே கிடைக்கிறது.  

 


 

         ‘’வேளாண்மை உற்பத்திக்காக பணி அமர்த்தப்பட்ட குழுக்கள் வேளாண்மை நிலம் கைமாறும் போது நிலத்தில் பணி செய்து கொண்டுள்ள மக்களும் நிலத்துடன் விற்ற சான்றுகள் உள்ளன. இதை அடிமை விற்பனை என பேராசிரியர் காளிமுத்து, ஆ.சிவசுப்பிரமணியன் போன்றோர் பதிவிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் துப்புரவு மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்ட சான்றேதும் குறிப்பிடவில்லை.

 


‘மழை பெய்தால் தெரியும் வறட்டாம் பீ நாத்தம்’ என்ற பழமொழி குறித்து விளக்கம் பெறுவதற்காக பேராசிரியர் தொ.பரமசிவம் அவர்களிடம் நான் விவாதித்த போது ‘பொதுவாக வெப்பமண்டலப்பகுதியில் மலத்தை தனியாக அள்ளுதல் இருக்காது. அரண்மை பெண்கள் மலம் கழித்திட ‘பீ மந்தை’ என்ற ஒன்று இருந்த வழக்காறு உள்ளது. அதில் கூட மலத்தை அள்ளிட ஆள்கள் இருந்த சான்றுகள் இல்லை. இது பிரிட்டீஷ்காரனின் தேவையால் உருவானது. பிரிட்டீஷார் கொண்டு வந்த சீனிசர்கரை ஆலைக்கு தேவையான கரும்பினை அதிக உற்பத்தி செய்திட உரத்திற்கு காய்ந்த மலத்தை அள்ளிட வைத்தார்கள். இதன் நீட்சி 1975 வரை நீடித்ததை நான் பார்த்துள்ளேன். ஆனாலும் இது குறித்த பெரிதான ஆய்வுகள் வரவில்லை’ எனச்சொன்னார்.

  

           டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் மீனா ராதகிருஷ்ணன் டிஸ்கானர்டு  பை கிஸ்டரி (Dishonoured by History: "Criminal Tribes" and British Colonial Policy 2010) என்ற ஆய்வு நூலில் ‘’ உப்பு விற்பனை வரி,உப்பு விற்பனை உரிமம் பெற கட்டணம் போன்ற சட்டத்தால் உப்பு வியாபாரம் செய்த குடிகள் கடுமையான பாதிப்பட்டனர். 1871ல் வட இந்தியாவில் கொண்டுவந்த குற்றப்பரம்பர சட்டம் இந்தியா முழுவதற்கும் 1911–14ல் நடைமுறைக்கு வந்தது. குற்றப்பரம்பரை வளையத்தில் சிக்கவைக்கப்பட்ட சாதியினர் அனைவரையும் ஒரு கொட்டடிக்குள் அடைத்து வைக்கப்பட்டனர். இவர்களில் யாரேனும் ஐந்து முறைக்கு மேல் திருட்டுக்குற்றத்தில் ஈடுபட்டால் கொட்டடியில் உள்ள கழிப்பறைய சுத்தம் செய்திடும்  தண்டணை வழங்கப்பட்டது. இப்படி தண்டணை பெற்றவர்களை முதல் வகுப்பு இரயில் பெட்டியில் மட்டும் அமைக்கப்பட்டிருந்த கழிப்பறைகளை சுத்தம் செய்திட பணிக்கப்பட்டனர்’’ என தனது ஆய்வேட்டில் குறிப்பிடும் இவர், குறவர் சமூகம் போன்ற சாதியினரை இப்பணிக்கு பயன்படுத்தியதாக குறிப்பிடுகிறார்.

 

 

ஆனால் மதுரை மேனுவல் நூலினை 1860ல் எழுதிய ஜெ.ஹெச். நெல்சன் குறவர் குடிகள் உப்பு விற்பனையுடன் வெடியுப்பு தயாரித்து வியாபாரம் செய்தனர் என்று பதிவிட்டுள்ளார். 1911 வெளியான பிரான்சிஸ் எழுதிய மதுரை மேனுவல் நூல் மேல்குறிப்பிட்ட குலத்தினரை திருடர்கள் என்றும் சில குழுக்களை அடிமைத்தொழில் தலைமுறை தலைமுறையாக செய்து வருவதாக பதிவிட்டுள்ளார்.

                 

           கிழக்கு இந்தியன் கம்பெனி இந்தியா முழுவதிலும் 1801ல் பாளையப்பட்டுகளிடம் இருந்த நீதி, இராணுவத்தை தடை செய்து, வெடி ஆயுத தடைசட்டம் கொண்டு வந்தனர்.. பாளையப்பட்டு படைகளில் வெடிப்படை வீரர்களாகவும் வெடி தயாரிப்பவர்களாக இருந்தவர்கள் அருந்ததியர், குறவர், காலாடி, பிறமலைகள்ளர், வலையர் போன்ற குழுக்கள் என்பதற்கு இன்றும் சான்று எச்சமாக கொங்கு மண்டலம் மதுரை மண்டல கோயில் திருவிழாக்களில் வெடி வெடிக்கும் உரிமை இவர்களிடம் உள்ளதை கள ஆய்வில் தெரிந்து கொள்ளலாம்.

 

            ‘1801 சட்டத்தின் படி வெடிப்படை வீரர்களை பாளையப்பட்டு தலைவர்கள் கைவிட வேண்டிய சட்ட நெருக்கடியால் படை வீரர்களை பிரிட்டீஷார் எளிதாக சட்ட வளையத்திற்குள் கொண்டுவந்து நகராட்சி துப்புரவு தொழிலுக்கும், இராணுவ குடியிருப்பு, இரயிவே குடியிருப்பு, தேயிலை எஸ்டேட்டுகளில் பிரிட்டீஷார் குடியிருப்புகளில் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனாலும் குற்றப்பரம்பரை சட்டத்தில் இருந்த அனைத்து சாதியினரையும் துப்புரவு தொழிலுக்கு கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது’’.

 

 ‘’இந்தியாவில் ஏற்கனவே சமூக சட்ட நடைமுறையில் இருந்த மனுதர்ம அடிப்படையில் சாதி தோற்ற புனித கதைகளை சான்றாக வைத்து குறிப்பிட்ட சாதிகளை இப்பணிக்கு கொண்டு வந்தனர்’’ என குறிப்பிடுகிறார்’ நார்த்தன் யுனிவர்சிட்டியிலிருந்து தமிழகத்தில் இரட்சன்ய சேனையும் குற்றப்பரம்பரை சட்டமும் என்ற தலைப்பில் ஆய்வு செய்த எமிலி.ஏ.பெர்ரி என்ற ஆய்வாளர். (the salvation army; criminal cartakers 1882-1914) Emily.A.Berry,Northearten university).

         1896ல் பல்லாண்டுகள் குறவர் சாதியினருடன் தங்கி ஆய்வு ஆய்வு செய்த டபியூ.ஜெ.ஹச் (w.j.Hatch) என்ற ஜெசூட் பாதிரியார் (the land pirates in india) அறிக்கையில் (நூலான வந்துள்ளது) உப்பு சட்ட நெருக்கடி  காரணமாக தொழில் இழந்த குழுவினர் வயிற்றுப்பிழைப்பிற்காக திருட்டு குற்றம் செய்திடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதற்கு முன்பு உப்பு, கருவேப்பிலை, இஞ்சி, கூடை முடைதல், அரசர்களுக்கும், படை வீரர்களுக்கும் சாராயம் காய்ச்சி கொடுத்தல், சிறுதானிய வியாபாரம் செய்தவர்கள் தொழிலை விட்டு சாலை கொள்ளையர்களாக உள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

           மெட்ராஸ் மாகாண காவல் துறை தலைவராக 1904ல் இருந்த பாப்பு நாயுடு தனது அறிக்கையில் (நூல்)  (railway thives) தென் இந்தியா முழுவதிலும் இருந்த குறவர் சாதியினரை இரயில்வே கொள்ளையர்கள் எனக்குறிப்பிடுகிறார்.

          இப்படியாக பிரிட்டீஷ் ஆட்சியில் தொழில் வர்த்தகத்தை சில குழுக்களுக்காக கொடுத்து தமிழகத்தில் வியாபார குடிகளாகவும் போர் குடிகளாகவும் போர் துணைக்குடிகளாகளாக இருந்த சாதியினரை மலம் அள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதே வரலாறு.

 

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...