Search This Blog

Monday 30 November 2020

எஸ்.டியிருந்து எஸ்.சியாக....,புலம்பும் புலயர்கள்

 

                        எஸ்.டியிருந்து எஸ்.சியாக....,புலம்பும் புலயர்கள்

         முற்பட்ட வகுப்பினருக்கு பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் இந்தியளவில் விவாதப்பொருளாக மாறிவரும் நிலையில் எங்கள் கோரிக்கையை காதுகொடுத்துக்கேட்க நாதியில்லையே என ஒரு புலம்பல் கேட்கிறது.

தமிழ்திருநாட்டில் ஒரு சமூகத்தை ‘வாய்யில்லா பூச்சி’ என துணிந்து சொல்லாம் என்றால் அவர்கள் பழங்குடி மக்கள் மட்டுமே. இவர்கள் நம்மைப்போல் மாடி வீடு கட்டி காரில் போக வேண்டும் என ஆசைப்பட்டதே கிடையாது. தானுண்டு தான் வேலையுண்டு என மலையை கொடையாக நினைத்து வாழ்பவர்கள். இந்த மக்களே கோரிக்கை வைத்து போராடுகிறார்கள். கேட்பதற்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ‘பழங்குடியினராக (ST) இருந்த புலயர் சமூகத்தை 1976ல் தாழ்த்தப்பட்டோர் (SC) பட்டியிலில் சேர்த்து விட்டார்கள். ‘எங்களை பழங்குடியினராக மாற்றுங்கள்’ என நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மத்திய மாநில அரசுகளிடம் இவர்களின் கோரிக்கையை அரசு ஏறேடுத்து பார்க்க மறுக்கிறது’ என்பதே வேதனையிலும் வேதனை. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த பல சாதிகளை கோரிக்கை வைக்காமலே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதியினர் என அறிவித்த அரசு இவர்களின் நியாமான கோரிக்கையை செவி மடுத்துக்கூட கேட்க மறுப்பதே கொடுமை.

               தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்ட மலைகளில் புலயர் என்ற மலைவாழ் தோராயமாக 30 ஆயிரம் மக்கள் வாழ்கிறார்கள். இந்த மக்கள் அதிகமாக வாழும் தாண்டிக்குடி அருகே உள்ள புலயன் கால்வாய் என்ற மலைக்கிராமத்தில் உள்ளனர். இந்த ஊரைச்சேர்ந்த மாதி என்பவர் பகுதி நேர அஞ்சலக ஊழியராக பணி செய்து ஓய்வு பெற்றவர். இவர் நம்மிடம் ‘‘காமராஜர் ஆட்சி காலத்தில் உண்டு உறைவிட பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்தாங்க. ஒரு சிலர் படித்தோம். அப்போது பள்ளிக்கூடத்திற்கு வந்த எஸ்.சி/எஸ்.டி அமைப்பை சேர்ந்தவங்க ‘மத்திய அரசு வேலையில் பழங்குடியினர் ஒதுக்கீட்டை நிரப்ப ஆளில்லை. எட்டாவது படித்தால் போதும் வேலை உறுதி’ என சொல்லி வேலைக்கான அப்ளிகேசனைக் கொடுத்து விட்டுப்போனாங்க. எட்டு வயதில் ஒன்னாவதில் சேர்ந்து இரண்டு வருசம் பள்ளிக்கூடத்திற்கு போனால் எட்டாம் வகுப்பு பாஸ் சார்டிபிகேட் கொடுத்தாங்க. இதனால் கொடைக்கானல் மலையில் பலருக்கும் ரயில்வேயில் கடைநிலை பணியாளர் வேலை கிடத்தது. எனக்கு அஞ்சல் துறையில் பகுதி நேர பணியாளர் வேலை கிடைத்தது. எஸ்.டி பிரிவினருக்கு கல்வி தகுதி இருந்தால் புரொமோசனில் முன்னுரிமை கொடுப்பார்கள். 1980ல் நான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி பாஸ் ஆனேன். தற்போதைய தேதியில் சாதி சான்று வாங்கிக் கொடுத்தால் புரோமோசன் கொடுப்பதாக மேல் அதிகாரிகள் சொன்னார்கள். கொடைக்கானல் தாசில்தாரிடம் 1984ல் சாதி சர்டிபிகேட் கேட்டு விண்ணப்பித்தேன். எனக்கு தாழ்த்தப்பட்டோர் (SC) என சான்று கொடுத்தார்கள். ‘நான் எஸ்.டி எனக்கு எஸ்.சி சர்டிபிகேட் கொடுத்திருக்கீங்க. எனது பழைய சான்றில் எஸ்டி (ST) என உள்ளதை காட்டி கேள்வி கேட்டேன். 1974 முதல் புலயர்களை எஸ்.சியாக மத்திய அரசு மாற்றி விட்டது’ என சொன்னாங்க. பழங்குடி சான்று கிடைக்காததால் எனக்கு கிடைக்க வேண்டிய புரமோசன் கிடைக்கவில்லை. புலயர்களை என்ன காரணங்கள் அடிப்படையில்  எஸ்.டியிருந்து எஸ்.சியாக மாத்திருக்கிருக்கீங்க என, அரசிடம் மனு மேல் மனு கொடுத்தும் பதில் இல்லை. இப்ப கூட தகவல் பெறும் உரிமை சட்டத்தில் மனு கொடுத்தேன் ஆண்டுக்கணக்காகியும் பதில் இல்லை. நாங்கள் மக்கள் தொகையில் குறைவானவங்க. அதனால் எங்களது கோரிக்கையை அரசு கவனிக்க மாறுக்குது. ஆனால் நக்ஸ்லைட் தடுப்பு போலீஸ்சார் மட்டும் தினமும் வந்து ஒவ்வொருத்தர் வீடா சோதனை போடுது’’ எனச்சொல்லி தனக்கு அரசு கொடுத்த எஸ்.டி மற்றும் எஸ்.சி  சர்டிபிகேட்களை காட்டினார்.

        பழனி மலை ஆதிவாசிகள் கூட்டமைப்பின் தலைவர் மன்றவயல் (ஊரின் பெயர்) சேகர் ‘‘எனது தாத்தா, காந்தி ரயில்வேயில் வேலை பார்த்தவர். எங்களை எஸ்.சியாக மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி நீதி மன்றத்தில் வழக்கு போட்டார். உரிமையியல், மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் ‘புலயர்களை எஸ்.சியாக அறிவித்தது தவறு’ என தீர்ப்பு சொன்னாங்க. அரசாங்கம் உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ‘தகுதி ஆய்வு செய்யப்பட்டு புலயர்களை எஸ்.சியாக அரசு அறிவித்துள்ளது. ஒரு சமூகத்தை எஸ்.சியாகவும் எஸ்.டியாகவோ, பி.சியாகவோ அறிவிக்க அரசுக்கு அதிகாரம் உண்டு. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது’ என நீதிமன்றம் தீர்ப்புச் சொன்னது. அதற்கு மேல் நீதிமன்ற போராட்டம் நடத்த எங்களால் முடியவில்லை. புலயர்களை எஸ்.டியாக அறிவிக்க வேண்டும் என எம்.எல்.ஏ,எம்.பி தேர்தலை புறக்கணித்தோம். அதுக்கும் எதுவும் நடக்கவில்லை’’ என சொல்லி நீதி மன்ற தீர்ப்பு நகல்களை நம்மிடம் காட்டியவர் ‘எங்களில் யாருக்கும் சொந்தமாக நிலம் கிடையாது. எங்கள் பிள்ளைகள் படிப்பை பாதியில் விட்டு விட்டு ஓடி விடுவார்கள். இந்த தலைமுறையில் அரசாங்கம் பழங்குடியினருக்காக நடத்தும் உண்டு உறைவிட பள்ளியில் படிக்கிறாங்க. எஸ்.டி சான்று கிடைத்தால் ஏதாவது அரசாங்க வேலை கிடைக்கும். 2006ஆம் ஆண்டு வனச்சட்டத்தின் படி மூன்று தலைமுறையாக வனத்தினுள் வாழும் மக்களுக்கு பத்து ஏக்கர் நிலமும், வீடு கட்ட பத்து சென்டு நிலமும், வன விளைபொருள்கள் சேகரிக்கும் உரிமைகள் உண்டு. ஆனால் பளியர் இன மக்களுக்கு இந்த உரிமையை அங்கீகரித்த அரசு எங்களுக்கு மறுக்கிறது. நாங்கள் தலைமுறை தலைமுறையாக காட்டுக்குள்ளே வாழ்கிறோம்' எனப்பேசினார்.

                புலயர் சமூகத்தை பற்றி ஆய்வு மேற்கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ‘தமிழகத்தில் பழங்குடியினர் பட்டியலில் பளியர், புதர வண்ணான், இருளர், காட்டுநாயக்கர், முதுவாகுடி என 18 பட்டியலில் சாதியில் புலயரும் இருந்தனர். 1974ல் பழங்குடியினர் பட்டியலை மறு சீரமைப்பு செய்திட இந்திய அரசு குழு அமைத்தது. இந்த குழுவினர் கேரளத்தை மையமாக வைத்து ஆய்வு மேற்கொண்டு ‘கேரளத்தில் உள்ள சேரமார் புலயர் தரை பகுதியில் வாழ்கிறார்கள். நில உடமையாளர்களாக இருக்கிறார்கள். பொருளாதரத்திலும் இவர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். இதனால் புலயர்களை பழங்குடி பட்டியலிருந்து நீக்கலாம்’ என அரசுக்கு பரிந்துரைத்தது. இதனை ஏற்ற அரசு புலயர்களிய எஸ்.சி பட்டியலிலுக்கு மாற்றப்பட்டனர். ‘இடம் பெயர்தல், மலைகளில் வாழ்தல், பிற சமூகத்தினரிடம் ஒன்றி வாழாதிருத்தால், யாரையும் எளித்தில் நம்பாமை, தனித்த பழக்க வழக்கமும், தங்களுகென்ற மொழிநடையும், தனித்த இசைக்கருவி, நடனம் இவை அனைத்தும் பழங்குடி மக்களுக்குறிய பண்பு. பழங்குடியினருக்கான அரசு வரையரையில் சொல்லப்பட்டுள்ள பண்பாட்டு கூறுகள், வாழ்க்கை முறைகள்’ அனைத்தும் புலயர்களிடம் இருப்பதை நான் மேற்கொண்ட கள ஆய்வில் கண்டேன். எனது முப்பது பக்க ஆய்வை புத்தகமாக தொகுத்து 15 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கட்சியின் மூலம் சமூகம் மற்றும் அதிகாரம் வழங்கும் மத்திய அமைச்சகத்திடன் நேரடியாக கொடுத்தோம். அரசு பரிசீலிப்பதாக கடிதம் அனுப்பியதே தவிர எந்த நடவடிக்கையும் இல்லை’’ என சொன்னார்.

                    இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க மானுவியல் ஆய்வாளர் முனைவர் மகேஸ்வரன் தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்ககுழு ''சங்க இலக்கியங்களில் உள்ள சொற்களை இம்மக்கள் புழக்க சொற்களாக பயன்படுத்துகிறார்கள். இவர்களின் பழக்க வழக்கங்கள் பொருளாதர நிலையைப்பார்க்கும் போது எஸ்.டியாக அங்கீகரிக்கலாம்' என தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை அரசு பரிசீலிக்கும் முன் 2006 வனச்சட்டத்தின் படி இம்மக்களை வனத்துறை காட்டுக்குள்ளிருந்து வெளியேற்றி அகதிலாக்கும் என்பது மட்டும் உண்மை. அரசினை எதிர்த்து போராடினால் நக்சலைட்டுகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் உள்ளே தள்ளுவார்கள் எனப்து மட்டும் உண்மை. ‘இனி பறையருக்கும் புலயருக்கும் விடுதலை’ என பாரதி பாடி அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகி விட்டது.இவர்களுக்கு எப்போது விடுதலை...? 

                                                       இரா.முத்துநாகு

  

ஏன் ஆதிவாசிகளை கொண்டாட வேண்டும்

 

 

                               ஏன் ஆதிவாசிகளை கொண்டாட வேண்டும்

                     மனித குழுக்களிடம் உள்ள நல்ல பழக்க வழக்கங்களை நாம் மறந்து விடக்கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் பல தினங்களை கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை சில தினங்களை கொண்டாட அறிவித்துள்ளது. அதில் கை கழுவும் தினம், அன்னையர் தினம், காதலர் தினம், வன நாள் போலவே உலக ஆதிவாசிகள் தினமும் கொண்டாடிக்கொண்டாடுகிறோம். உலகத்தில் பல ஆயிரம் இனக்குழுக்களில் இவர்களிடம் மட்டுமே தனித்துவமான பண்புகள் இன்னும் தேங்கியுள்ளதால் அவர்களை உலக நாடுகள் கொண்டாடுகிறது.

                   'விஞ்ஞான வளர்ச்சி உச்சத்தை அடைந்து விட்டதாக பெருமை அடித்தாலும், நாம் வாழும் பூமி மனிதன் 'வாழவே' தகுதியற்றதாக மாறிவிட்டது என்பதை மறக்கலாகாது.

                காற்றும், குடிக்கும் தண்ணீரும், தாய்ப்பாலும் நஞ்சாகி விட்டது, பூமி வெப்பமயமாதலால் பருவநிலைகளில் மாற்றம் வருகிறது என்கிறது ஆய்வறிக்கை. இதனால் பூமித்தாயை காப்பாற்ற ஊவ்வொரு நாடும் முனைப்பு காட்டுகிறது.

                பதினைந்து ஆண்டுகள் பயன்படுத்திய மோட்டார் வாகனம் நன்றாக இருந்தாலும் அதற்கு தடை, நெகிழிக்கு தடை, வாகன எரிபொருள் பதிலாக சூரிய ஒளி, பேட்டரி பொறுத்த ஆலோசனை என இந்திய அரசு சுற்றுச்சூழலைக்காக்க முனைப்பு காடுட்கிறது. ஆனால் இவைகளை நாம் வாழும் இடத்திலுள்ள குப்பையை அள்ளி நாம் வாழாத இடத்தில் போடுவதை 'சுத்தம் சுகாதாரம்' என்கிறோம் எனச்சொல்லுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள். 

                மனிதகுலம் உப்பினை மட்டும் தின்று விட்டு தண்ணீரைத் தேடி தவியாய் தவிக்கிறது என்பது மட்டும் உண்மை. இதற்குத் தீர்வு வேறெங்கும் தேட வேண்டாம் நாம்முடன் வாழும் ஆதிவாசிகளைகளின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி அவர்களைப்போல் 20 விழுக்காடு கடைபிடித்தாலே இந்த பூமி பழைய நிலைக்கு மாறிவிடும் என்பதை இந்த உலகம் செவி சாய்த்து கேட்க மறுக்கிறது.

                                                                                 ஆதிவாசி

 

              குறிஞ்சி நிலமான மலையில் முல்லையும், மருதமும் கலந்த விளைநிலமாக உள்ள விளைச்சல் தரும் இடமே ''வாசி'' என்கிறது நிகண்டுகள். பழங்குடி மக்கள் வாழும் பெரும்பாலான மலைகளுக்கு வாசிமலை, தவசிமலை, தளி மலை என்ற பெயரில் உள்ளது. மழை வளமும், மண் வளமும் உள்ள இடத்தை கண்டறிந்து வேளாண்மை செய்தவதவனே ''மாறன்'' என விளக்கம் தருகிறது நிகண்டு. இம்மக்கள் வாழும் இடமே குடி.

            மலையில் வாழும் புலையர், பளியர், காடர், ஊராளி, முதுவா, மலையாளி, குறுப்பா, காணி, கணியன், மலசர், தோடர், தோதர், கோத்தர், சோளகர் போன்ற குலத்தினரே ஆதிவாசிகள் என அரசு அறிவித்துள்ளது. நாகரீகம் என்ற பெயரில் நாம் தொலைத்த பழக்க வழக்கங்களை இம்மக்களே இன்னும் கட்டிக்காத்து வருகிறார்கள்.

                                                                                   மொழி

 

அப்படி இவர்களிடம் என்னதான் இருக்கிறது......!

 ஜல்லிக்கட்டு தமிழகதின் அடையாளமாக மாறிவிட்டது. பலரது முகநூல் முகப்பு, ஆடை, பேருந்து, உணவு விடுதி, இல்ல நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ் இவைகளில் மஞ்சுவிரட்டு காளை படங்கள் உயிர்பெற்றுள்ளது. இப்படி நாம் பண்டைய அடையாளத்தை சொல்லிட மொழி முக்கியம். அந்த மொழி அழியாமல் இருப்பது ஆதிவாசிகளிடம் மட்டுமே. ஜல்லிக்கட்டுக்கு மஞ்சுவிரட்டு, வாந்தி என்ற சொல்லுக்கு ஓங்கரிக்க, ஒவ்வாமை என்றும், கம்பு சோளம் இவைகள் பூக்கும் பருத்தை 'கொம்பை' என்ற பழம்சொல்லினை வேளாண்மை குடிகள் கூட மறந்து விட்டார்கள். ஆனால் இப்படியான சங்க இலக்கியத்தில் உள்ள சொற்கள் இம் மக்கள் பேச்சு வழக்காக உள்ளது. இவர்களிடம் இம்மாதிரியான பல ஆயிரம் சொற்கள் இருப்பதை தனது ஆய்வில் பதிவிட்டுள்ளார் நிலகிரியில் அமைந்துள்ள மைய்ய அரசின் பழங்குடிகள் ஆய்வு மைய்யத்தின் பேராசிரியர் சத்தியநாராயணன்.

                                                              நுகர்வு கலாச்சாரம்

 

                 இரண்டு, சில வீடுகளில் ஒரு வாரிசுக்கு மேல் இல்லை. தாய் தந்தையர் உள்பட நான்கு ஐந்து பேர் வாழ்ந்திட இரண்டு மூன்று செண்டில் கட்டினாலே கூட்டி பெருக்கி கழுவவே நேரம் போதாது. ஆனால் நடுத்தர வகுப்பினர் வீடு செட்டி நாட்டு அரண்மனை வீடுகளை மிஞ்சுகிறது. பத்து செண்டில் வீட்டை கட்டி எந்த அறைக்குள் யார் இருக்கிறார்கள் எனத்தெரியாமல் வீட்டுக்குள்ளே இருந்துகொண்டே கணவனும் மனைவியும் 'ஏங்க இருக்கீங்க ' என செல்போனில் கூப்பிடுவதைப்பார்க்கலாம். இப்படி ஒவ்வொரு தனிமனிதனும் அரண்மனை போல வீடு கட்டினால் செங்கல், மணல், கல், இரும்பு, மரம் அனைத்தும் இந்த பூமியிருந்து தானே எடுத்தாக வேண்டும். இந்த நுகர்வு கலாச்சாரம் என்ற கொடுமை இல்லாத இனக்குழு ஆதிவாசி மக்கள் மட்டுமே.

                    வீடு கட்ட சிமிண்ட் தேவை தானே என்ற கேள்வி எழும். சிமிண்டில் கட்டிய வீடும், சுண்ணாம்பு காரையில் அல்லது பழங்குடி மக்கள் போல் சுட்ட மண் அல்லது பச்சை மண் உருண்டையால் சுவற்றில் ஊணாங்கொடி வைத்து கட்டிய வீட்டின் வாழ்நாள் நமது வீடுகளை விட அதிகம் என ஆய்வுகள் மெய்பித்துள்ளது. நம்மால் செம்மண்ணில் வீடுகட்ட முடியாவிட்டாலும் அரசு சொல்லும் 'கைடு லைன்' கொடுத்திருக்கும் குறைந்த பட்சம் இரண்டு சென்ட்டில் அல்லது நாழு பேர் வாழ மூன்று செண்ட்டில் வீடு கட்டினால் போதுமே. கட்டி வைத்த பெரிய பெரிய வீடுகள் தற்போது யாருக்கு பயன்படுகிறது ? என்பதை கேள்வியாகக்கேட்க தடுப்பது நமது நுகர்வு மோகமே.  

                 அரண்மனை என்றவுடன் அரசர், மன்னர் அல்லது ஜமீன்தார் வாழ்ந்த வீடு என்பது மட்டும் நமக்கு நினைவில் வரும். இந்த அரண்மனைகள் மக்களுக்கு அரணாக பயன்பட்டதால் அரண்மனை என்று பெயர். அவை நிர்வாக இடம். அதனால்தான் மன்னர் மானியம் ஒழிப்பு சட்டம் வந்த போது அரண்மனைகளை அரசு கையக்கப்படுத்தியது என்பதை நாம் மறந்து தனி நபர் சொத்தாக நினைப்பதே நமது நுகர்வின் வெளிப்பாடு.

                தற்போது கட்டப்படும், கட்டு வரும் பெரிய பெரிய வீடுகள் தனிமனிதனின் மனநிறைவுக்கு மட்டுமே பயன் தரும். ஆனால் இந்த வீடுகளை கட்ட பயன்படும் இடுபொருள்களால் சுற்றுச்சூழலை அழிக்கிறோம் என்பதை நாம் உணர முடியாதபடி நுகர்வு கலாச்சாரத்தை அரசு நம்மிடம் விதைத்து முளைத்து விட்டது. இதன் விளைவு பூமி வெப்பமயமாகி மழை மாரி தவறி விட்டது.

            வீடுகட்டப்பயன்படும் சிமிண்ட் தயாரிக்க தேவையான சுண்ணாம்பு பூமியை துளைத்தும், பவளப்பாசிகள் கடலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. நாழு பேர் தங்குவதற்கு 3 செண்டில் வீடு கட்டினால் அதில் வீடுகட்டி, வாகனமும் நிறுத்தி, சிறிய வீட்டு தோட்டமும் அமைக்கலாம். ஆனால் நாம் கட்டிய அல்லது கட்ட நினைத்து வைத்துள்ள வீட்டின் அளவை நினைத்துப்பாருங்கள்.

                    நான்கு பேர் உள்ள நமது வீடுகளில் சமைக்க தேவையான பாத்திரங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதை நினைத்துப்பாருங்கள். நாம் ஊரரிய திருமணம் நடத்தி 'ரெட்டை சீர்' கொண்டு வந்து ஊரார் மெச்சிட கொண்டு வந்த சட்டி பானைகளில் மணப்பெண் பெயரை பொறித்து வீட்டில் மூலையில் அடைந்து வைக்கிறோம். இவைகளை ஆண்டுக்கு ஒருமுறை விளக்கிக்கழுவி மறுபடியும் கவுத்தி வைப்பதே நம்மிடம் திணிக்கப்பட்ட நுகர்வு கலாச்சாரம். இந்த பகுமானம் எதுக்காக யாருக்காக. சட்டி பானை செய்திட எடுக்கப்படும் கனிமங்கள் பூமிக்குள்ளிருந்து என்பதை நாம் உணருவதை தடுப்பதில் உள்ளது நுகர்வு கலாச்சாரத்தின் வெற்றி.  

               பழங்குடி வீடுகளில் கஞ்சி காய்சிட, தண்ணீர் எடுக்க, குழம்பு வைக்க, சாப்பிட எல்லாம் சேர்த்து அதிகபட்சமாக பத்து பாத்திரம் கூடத்தேறாது. இவர்கள் கட்டியுள்ள வீடுகளில் ஒருபக்கம் கேளையாடு அருகிலுள்ள 'வரை'யில் படுத்திருக்கும், சிறுத்தை குகையில் இருக்கும், கரடி கீழ் பள்ளத்திலிருக்கும் இயற்கையாக அமைந்த மலைக்குகையை கணகணக்கப்பான வீடாக பயன்படுத்தி வாழ்ந்தார்கள். இவர்களையும் நாம் நுகர்வு கலாச்சாரத்திற்குள் கொண்டு வந்து கெடுத்துவிட்டோம். இவர்களைப்போல் நாம் வாழ வேண்டாம், குறைந்தபட்சம் தேவையில்லாமல் வாங்கிக் குவிக்கும் தன்மையை இந்த மக்களிடம் கற்றுக்கொண்டாலே போதும்.

                                                                      துணி

                அரசு பணியாளர் அல்லது அவர் ஒத்த வருமானம் ஈட்டும் நபரின் வீடுகளில் குறைந்தது 20 பேண்ட் அதுக்கு மேச்சான சட்டை, பெண்களுக்கு குறைந்தது 100க்கு மேல் சேலைகளிய பீரோவில் அடிக்கி வைத்திருப்பார்கள். இதில மேச்சிங் இல்லாதவை கணக்கில் வராதவை. இப்படி குவித்து வைத்திருக்கும் இந்த உடைகளை நமது வாழ்நாளில் ஒரிரு முறைதானே உடுத்த முடியும். இந்த உடைகளை நீங்கள் மறுமுறை கட்டுவதற்குள் அதன் காலம் முடிந்து தானாக கிழிந்து விடும் அல்லது சாயம் விட்டுவிடும் அல்லது நமது வாழ்நாளே முடிந்து விடும்.

                  துணிகள் வண்ணமாக்கிட சாயம் மிக முக்கியம். இந்த வண்ண உடைகளை குறைக்காதவரை நீரும் நிலமும் மாசுபடுவதை தடுக்க இயலாது. ஆடை விசயத்தில் பழங்குடிகளைப்போல் இருக்க வேண்டாம் ஒரு ஆளுக்கு மூன்று ஆடை போதும் என மாகாத்மா காந்தி சொன்னது போல் கடைபிடிக்காவிட்டாலும் ஐந்து வைத்துக்கொள்வோம். இந்த சிக்கனத்தை சொல்லிக்கொடுப்பவர்கள் ஆதிவாசிகள்.

                                                                                      மணி

                    எங்கு பார்த்தாலும் நகைக்கடைகள். இங்கு விற்கப்படும் நகைகளைச் செய்திட பூமியைத் துளையிட்டு சுரங்கம் அமைத்து அதிலுள்ள மண், கல், பாறைகளை வெளியேற்றி மலையாக குவித்த பின்னால் தானே தங்கம் எடுக்கிறார்கள். பத்து கிராம் தங்கம் எடுக்க குறைந்தது அரை ஏக்கம் நிலத்தை தோண்டி சீரழித்தாகவேண்டும். இந்த தங்கத்தை உருக்கி அணிகளன் செய்திட ஏதுவாக மாற்றிட பல இரசாயனங்களை கொண்டு கழுவிட வேண்டும். இதனால் பூமி புல் பூண்டுகள் முளைக்கும் திறனை இழக்கிறது என்பதை தொலைக்காட்சிகளில் வரும் நகை விளம்பரத்தால் நமது மூலைக்கு எட்டாமல் போய்விடுகிறது. வீட்டு வளர்ப்பு விலங்குகளைப்போல் நாம் நுகர்வு கலாச்சாரத்திற்கு  மாறிவிட்டோம் என்றால் மிகையான குற்றச்சாட்டல்ல.

                  உலக மக்கள் தொகையில் அதிக நுகர்வு கலாசாரத்துக்கு வசியப்படுபவர்கள் ஆசிய கண்டத்து மக்கள். அதில் தெற்காசிய மக்கள் தான் நுகர்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்கிறது புள்ளி விபரம். மாகாத்மா காந்தியோ, தந்தை பெரியாரோ தற்போது உயிருடன் இருந்திருந்தால் 'என் கட்சியில் இருப்பவர்கள் நான்கு ஆடைகளுக்கு மேல் வைத்திருப்பவர்கள் கட்சியை விட்டு விளகுங்கள். இல்லை என்றால் நானே நீக்குவேன்' என அவர்கள் நடத்திய குடியரசிலும், யங்இந்தியா பத்திரிக்கையிலும் எழுதி நம்மை திருத்தி வழி நடத்தியிருப்பார்கள்.

                    பழங்குடிமக்கள் காட்டுக்குள் வாழ்ந்தாலும் தேவைக்கு அதிகமாக சுள்ளியைக்கூட எடுத்து சேமித்து வைக்க மாட்டார்கள். ''காடு அள்ள அள்ள குறையாது, காடு கொடுத்துக்கொண்டே இருக்கனும் என்றால் அதன் வளம் அதனிடம் இருக்க வேண்டும்'' என்ற இயற்கைத் தத்துவத்தை இம்மக்கள் புரிந்து வைத்துள்ளனர். அவர்களைத்தான் நாம் சட்டம் போட்டு காட்டை விட்டு விரட்டி நம்மளைப்போல நுகர்வு கலாச்சாரத்தில் சீரழிக்க திட்டமிடுறோம்.

                                                                    காடு

                 தந்தத்திற்காக ஆனைகளையும், தோலிற்காக புலியையும் வேட்டையாடுபவர்கள் பழங்குடி மக்களா? இந்தப்பொருள்களை இவர்கள் ஏறெடுத்துப்பார்ப்பதில்லை. இம்மக்கள் வனத்தை அழிக்கிறார்கள் என்ற அபத்தமான பொய்யை விதைத்து வருவது நாம் தானே.

                 ஆனைகள் தண்ணீருக்காக காட்டை விட்டு வெளியேறுகிறது என்ற செய்தி திருப்ப திருப்ப சொல்லி நம்ப வைத்து விட்டார்கள். ''சினையாக ஊள்ல ஆனை சவுட்டுப்பு என்ற உவர் மண்ணைத் தேடி உப்பு விளையும் தரைக்காட்டுக்கு வரும். தண்ணீர் தேவையென்றால் தெள்ளுக்கொடியை ஒடித்து தண்ணீரைக் குடித்து விடும். முந்திக்காலத்தில் ஆனை சினைப்பருவத்தில் மலையை விட்டு இறங்காமல் இருக்க உப்பங்குழி தோண்டி உப்பு வைப்போம். அதை எங்க தாத்தா காலத்தில் உப்பு வைத்த போது வெள்ளைக்காரன் புடிச்சு ஜெயிலில் போட்டான். அதனால ஆனைக்கு உப்பு வைக்குறது போன தலைமுறையோடு போய் விட்டது'' என பழங்குடி மக்கள் சொல்லுவது படித்த மேதாவிகளான நமது காதுகளுக்கு எட்டவில்லை.

                                                                 காடு யாரால் அழிந்தது

                      பூண்டு, மிளகு, கறிவேப்பிலை, புளி, பட்டை, இந்துப்பு, இஞ்சி அவ்வப்போது உணவுக்காக வேட்டையாடுதல், கல்மணிகள் (precious stone), உயிரைக் காக்கும் மூலிகைகள், சித்த வைத்திய மருந்துகள், வீடுகட்ட, வேளாண்மை கருவிகள் செய்திட தேவை கருதி வெட்டப்படும் மரம், இவை அனைத்தும் வனத்திலிருந்தே கிடைத்ததால் வனம் சார்ந்த வாழ்வு தவிர்க்க முடியாததாக இருந்தது. இந்த ஒட்டுறவை பிரிட்டீஷார் கொண்டு வந்த வனச்சட்டத்தால் முறியத்துவங்கி படிப்படியாக வனத்திற்கும் நமக்குமாக உறவு கருவறுந்து விட்டது.

             வெள்ளைக்காரன் வந்தான் தேயிலை, காபி போட கூப் என்ற பெயரில் பெருமரங்களை வெட்டி வனத்தை அழிந்தான். 1970ல் சாயம் தயாரிக்க விஸ்காஷ் நிறுவனத்திற்கு பெரு மரங்களை அழித்து யூக்லிப்டஸ், பைன், சைப்ரஸ் மரங்களை நடவு செய்திட அனுமதித்தோம். இப்படித்தானே வனம் அழிந்தது. இந்த சாயப்பட்டரையால் கோவை மாவட்ட ஆறுகள் நாசமானதே வரலாறு.

              கொடைக்கானலில் 930 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருந்த புல்வெளி 2014ல் 300 சதுர கிலோமீட்டரானது. உலகின் முதன்மை உயிர்சூழல் மண்டலம் என ஐ.நா மன்றத்தால் அறிவிக்கப்பட்ட நீலகிரியில் 29875 ஏக்கரில் இருந்த புல்வெளி, 4700 ஏக்கராகக் குறைந்தது. மழைக்காலத்தில் நீரினை சேமித்து வைத்து கோடைகாலத்தில் சிறுகசிறுக வடியவிடும் இந்தப்புல்வெளிகள் இல்லாததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மட்டுமே ஏற்படுகிறது. கோடைகாலத்தில் மலைகள் காய்ந்து விடுவதால் காடுகளின் தன்மையே மாறிவிட்டது. புல்வெளியில்லாததால் விலங்குகள் உணவு இல்லாமல் இடம் மாறுகிறது. இடமாற்றத்தால் பல இன்னலுக்கு ஆளாகி வருகிறது.   

           பூமி வெப்பமயமாதல் என்ற கூக்குரலிடும் நாம் பழங்குடி மக்களின் துவக்கப்பள்ளியில் படித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை மறந்து விடவேண்டாம் சுற்றுச்சூழலை காத்திட நாம் நுகர்வு கலாசாரத்தைக் குறைக்கவேண்டும். இந்த பழக்கம் நமக்கு வர நுகர்வற்று வாழ்ந்து  வரும் ஆதிவாசிகளை நாம் கொண்டாடும் போது தான் அந்த நல்லெண்ணம் நமக்குள் வளரும்.

 

 

திராவிடர் - தமிழர்

 

                                          திராவிடர் - தமிழர்                                                             

மறைபொருளாக பேசப்பட்ட திராவிடர் - தமிழர் என்ற சொல்லாடல்கள் சில ஆண்டுகளாக 'வந்து குடியேறியவர்கள்' என்ற சொல்லாட்சியால் அதிகம் கையாளப்படுகிறது. 

யார் தமிழர்

             ம.பொ.சி, ஆதித்தனார், பெருஞ்சித்திரனார் போன்றவர்களின் எழுத்துகளால் கையாளப்பட்ட தமிழ் தேசியம், மொழியை மையாமாக வைத்து நாம் தமிழர் என வளர்க்கப்பட்டது. இது தமிழ் இயக்கமாக, திராவிட நாடு என்றும் தனித்தமிழ் நாடு கோரிக்கையாகவும் ஒருபக்கம் வளர்ந்தது. இதில் திராவிடர் இயக்க கொள்கையாளர்களையும், தனித்தமிழ் இயக்கவாதிகளையும் உள்ளடக்கி தனித்தமிழ்நாடு கோரிக்கையும் வலுப்பெற்றது. அதன் போக்கு தீவிரவாதமாக இருந்ததால், துவங்கிய சில ஆண்டுகளில் மக்களின் செல்வாக்கை பெறாமல் அரசு எந்திரத்தால் நசுக்கப்பட்டது.  

          இந்த இடைவெளியில் குல தாக்கத்தோடு எழுதி வந்த பெங்களூரு குணா, குருசாமி சித்தர் போன்றவர்கள் ''திராவிடத்தால் வீழ்ந்தோம், திராவிட மாயை'' போன்ற நூல்களை எழுதி வெளியிட்டு பரப்புரையும் செய்தார்கள். இந்தக்கருத்தாக்கத்தத்தை முன்னிருத்தி கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  திரு. சீமான், 'தமிழர் அல்லாத வேட்பாளர்களை எதிர்த்து' பரப்புரை நடத்தினார். இதனால் தமிழர், தமிழர் அல்லாதவர் என்ற கருத்தாக்கம் பொதுவெளியில் பேசுபொருளாக மாறிவிட்டது. இந்த வீச்சு ஆதித்தனார், ம.பொ.சி போன்றவர்களின் செயல்பாடுகளைப் போல் நீர்த்து விடுமா ? அல்லது நீடித்து நிலைக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்லவேண்டும்.  

அதற்கு முன் திராவிடம் என்ற சொல்லின் தோற்றம் குறித்துப்பார்த்தாக வேண்டியுள்ளது. திராவிடம் என்ற சொல் உள்ள கல்வெட்டுகள் இலக்கியங்கள் எவை எவை.

1) பொது ஆண்டுக்கு முன்பு (கி.மு) மன்னன் அசோகனை அடுத்து ஆச்சி செழுத்திய காரவேளன் என்பவர் பெயரில் உள்ள ஹத்திகும்பா கல்வெட்டு தமிழ்நாட்டை "திரமிகா (Dramica) என்று குறிப்பிடுகிறது.   

2)பொது ஆண்டிற்கு பின்பு  (கி.பி) பின்பு 5ஆம்  நூற்றாண்டில் கங்க மன்னன் துர்வினீதன் கொங்கு தேச ராசாக்களின் சரித்திரத்தில் "காஞ்சி உள்ளிட்ட திராவிடத்தை வென்றான்" எனக்குறிப்பிடுகிறது. 

3) பொ.ஆ. பி 642 காஞ்சி வந்த சீனயாத்ரீகர் இயூன்சங் (யூவாங்சஸ்சுவாங்) அவரது குறிப்பில் காஞ்சியை சுற்றியுள்ள பகுதியை திராவிடம் என்று குறிப்பிட்டுள்ளார்.

4) செந்தமிழ்அகராதி.

தமிழ்நாடு, ஆந்திரம், கருநாடகம், மகாராசுட்டம், கூர்சரம் (ஒரியாவில் சில பகுதிகள் உள்ளடக்கியது) இவைகளை பஞ்ச திராவிடத் தேசங்கள் என்று குறிக்கிறது.

திராவிடத்திற்கு சிங்காரவேலு முதலியார் தரும் விளக்கம்;

கன்னடம், தெலுங்கு, மகாராசுட்டம்,, கருநாடகம், கூர்சரம் என்னும் தேசத்துப் பிராமணர்களை திராவிடர் என்கிறார். கன்னடம், மைசூர் முதல் கோல்கொண்டா வரையிலும், தெலுங்கு, காளகசுத்தி முதல் கஞ்சம் வரையிலும், மகராஷ்டிரம், கோல்கொண்டா முதல் மேற்குக் கடல் வரைலும், கருநாடகம் (தமிழ்), கன்யாகுமரி முதல் காளகசுத்தி வரைலும், கூர்ச்சரம், குசராத், முதல் டில்லி வரையிலுள்ள தேசங்களை திராவிடம் எனக்குறிப்பிடுகிறார்.   

அபிதான சிந்தாமணி வழங்கும் விளக்கம்;

 

01) அ. திராவிடாசாரி என்பவர் ஆதி சங்கரருக்கும் முன்னதாக அத்வைத கொள்கையைப் பரப்பியவர். இவர் ஒரு பார்ப்பனர். இவர் வேதாந்த சூத்திரத்துக்குப் எழுதிய உரையில் திராவிடபூபதி என்பவன் அகத்தியர் கால திராவிட அரசன். திரவிடன் என்பவன் சூர்ய வம்சத்து அரசன். திவ்யப் ப்ரபந்தத்தை திராவிட வேதம் என்று தனது உரையில் எழுதியுள்ளார். மேலும் தெலுங்கு பார்ப்பனர்களின் ஒரு பிரிவினருக்கு ''திராவிட'' என்ற ஜாதிப் பெயர் உண்டு. திராவிடம் என்பது பூகோளப் பெயரும் அதில் வாழும் மனிதர்களை குறிக்கும். தெற்கே பேசிய மொழியை திராவிட மொழி என்று அழைத்தனர். அது தமிழாகவும் இருக்கலாம், தெலுங்காகவும் இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.  

5) பொ.ஆ.பி. 1246 - 1279 மூன்றாம் ராசராசன் மகன் இராசேந்திரன் "திராவிட மண்டலத்து (பல்லவநாடு) குலோத்துங்க ராசேந்திரனை வென்று  கப்பம் வாங்கினான் என்று (Epind volm. 27 no35. நயனப்பள்ளி கல்வெட்டு சான்றளிக்கிறது.

6)ஆந்திரதேசத்து பித்தர்புரத்தில் உள்ள மல்லப்பதேவனின் கல்வெட்டு (E.i.i V எண் 33;செ.22-4 "அபூர்வ புருஷனான குலோத்துங்கன் ஆந்திரநாடு உட்பட ஐந்து திராவிடப் பகுதிகளையும் ஐம்பது ஆண்டுகள் ஆண்டான்" என்கிறது.

7) வரலாற்று ஆய்வாளர் பி.வி.ஜகதீஸ் அய்யங்கார்  "பழங்கால பாரததேசத்தில் 56 தேசங்கள் இருந்தன. கிருஷ்ணாநதியின் தென்பகுதியும், காவிரியாற்றின் வடபகுதியும், கருநாடகமும் இணைந்த பகுதியே திராவிட நாடு என்று  தனது தேச வரலாறு நூலில் குறிப்பிடுகிறார்.

8) திராவிடர் குறித்து பல்லவ செப்பேடுகள் 30 நூலின் ஆசிரியர் குழுவின் பார்வை.

"திராவிட (அல்லது) திரமிள என்ற சொல் காஞ்சியை தலைநகராகக்கொண்ட தொண்டை மண்டலத்தையே குறித்தது என குறிப்பிடுகிறார்கள்.

9) திருவாய்மொழி  - நாதமுனி தனியன்கள். "நமாம யஹம் 'த்ராவிட' வேத சாகரம்,

10) சபாபதிநாவலர் எழுதிய நூலின் பெயர் "திராவிட பிரகாசிகை.  (1845 -1903)

11) தாயுமான சுவாமிகள் தம் பாடலில் "வல்லான் ஒருவன் வரவுந்திராவிடத்திலே" என்கிறார்.

13) கவிமணி தேசியவினாயகம்பிள்ளை தமிழ் நாட்டை "திராவிடநல் திருநாடு"என்கிறார்.

14) ரவீந்திரநாத்தாகூர் தமது தேசியக்கீதத்தில்"திராவிடநாடு"என்கிறார்.

15) வேதாந்த தேசிகர் "திராவிடோ உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி" என்ற நூலினிய வார்த்துள்ளார்.

 16) ராமாயணத்தில் 'திராவிட்'' என்ற சொல் உள்ளது.

17) ரிக் வேத காலத்திலேயே 'திராவிடாச்சார்யா' என்ற நூல் குறித்து மாண்டூக்கிய உபநிடதம் மற்றும் ப்ரு பாஷ்யமும் குறிப்பிடுகிறது. 

18) திராவிட சிசு 

                  திருஞான சம்பந்தரை திராவிட சிசு என அழைக்கப்பட்டதன் காரணம் என்ன. திராவிட சிசு என்பது “தென்பகுதியின் குழந்தை” எனப்பொருளாகும்.

19) ஸெளந்தர்ய லஹரி என்ற சுலோகத்தில் ''த்ரவிட சிசு' என்னும் வார்த்தை காணப்படுகிறது.

 

 

மலையாள மொழியின் வரலாறு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதே. அதன் முன்னர் சேர, சோழ, பாண்டியர் காலங்களில் சேர நாட்டிலும் தமிழே மொழியாக இருந்தது புலனாகிறது. ஆதிசங்கரரும் தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்தவராகவே கருதலாமா? என்ற கேள்வியும் எழுகிறது.

 ''தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத பய பாராவார பரிவஹதி ஸாரஸ்வதமிவதயாவத்யா தத்தம் ''த்ரவிடசிசு'' -ராஸ்வாத்யதவயத் கவீனாம் ப்ரெளடானா மஜனீ கமனீய கவயிதா'' என திராவிட சிசுவுக்கான சான்று சமற்கிருத பாடல்களில் உள்ளது.

20) தேவநேயாப்பாவணன் பார்வையில் திராவிடம் குறித்து = நூல் தமிழர் வரலாறு கலவு நிலைக்காண்டம் பக்கம் 195, சிந்து என்னும் பெயர் தலைப்பில் எழுதப்பட்டது

''ஆரியர் வருக்கைக்கு முன் தமிழரே வடநாட்டிற் குடியேறி இருந்தமையாலும், குமரி மலை முழுகி அரபிக்கடல் தோன்றிய பின், சிந்துவெளி வழியாகவே தமிழர் அல்லது திராவிட மேலை ஆசியாவிற்கும் அதன் பின் அய்ரோப்பாவிற்கும் சென்றமையாளும், சிந்து என்னும் ஆற்றுபெயர் தமிழர் இட்ட தமிழ்பெயராகவே இருக்கலாம்'' என தமிழர் என்றும் சொல்லாமல் திராவிடர் என்றும் சொல்லாமல் ஊசாலாடி உள்ளார்.  

21) கே.கே.பிள்ளை 

“பூச்சிய பாதர் என்பவரின் மாணவரான வச்சிர நந்தி என்பவர் மதுரையில் திராவிடச் சங்கம் ஒன்றை நிறுவினார் (கி.பி-470) நீலகேசி, குண்டலகேசி, யசோதர காபியம், சீவக சிந்தாமணி ஆகிய காவியங்கள் தமிழில் தோன்றுவதற்கு இந்த திராவிடச் சங்கத்தின் தொண்டே காரணமாகும்" என்று கூறுகிறார். 

 22. வரலாற்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி

 வச்சிர நந்தி கி.பி. 470 –ல் தக்கிண மதுரையில் (பாண்டிய நாடு) திரமிள சங்கத்தை (திராவிடச் சங்கத்தை) நிறுவினார் என்றே அறுதியிடுகின்றார். திராவிடம் என்ற சொல்லாட்சி தமிழுக்கு புதிதன்று. இங்கே திராவிடம் என்ற சொல்லாட்சி விளிம்புநிலை தமிழ் மக்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இச்சங்கங்கள் அமைக்கப்பட்ட காலத்தில் தமிழகத்தில் களப்பிரர் ஆட்சி எனப்படும் சமண சமயத்தாரின் ஆட்சி நடைபெற்றது. திராவிடர்களின் ஒரு பிரிவினர் தங்களை நிலவுடைமையாளர்களாகவும் பார்ப்பனர்களின் துணையுடன் சாதி மேல்நிலையாக்கமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த சிறு சாகுபடி செய்யும் மக்களே களப்பிரர்கள் ஆவார்கள். அவர்கள் பின்பற்றிய சமயம் சமணம் ஆகும். ஏனெனில் சமண, பௌத்த சமயங்களே அன்று நால்வருண பாகுபாடுகளுக்கு எதிராக கடுமையாக போராடியவை என்று தனது சமணம் குறித்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

21.சி.பா.ஆதித்தனார் பார்வையில் 

திராவிடர்கள் யார்? - ''திராவிடர்கள் என்போர் தெலுங்கர்கள். தமிழர்கள் திராவிடர்கள் அல்ல. ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்தவர்களான திரி- வடுகர்களே திராவிடர்கள். திராவிடர் என்ற சொல்லை தமிழர்களுக்குப் பயன்படுத்துவது பொருந்தவே பொருந்தாது. 1875ஆம் ஆண்டிற்கு முன் திராவிடர் என்ற சொல் தெலுங்கர்களை மட்டுமே குறித்து வந்தது. அந்த ஆண்டில் கால்டுவெல் என்ற வெள்ளைக்காரர் அவர் எழுதிய புத்தகத்தில் அதுவரை ஆந்திரர்களை மட்டுமே குறிப்பிட்டு வந்த திராவிடர் என்ற சொல்லைத் தமிழர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப் போவதாகத் முட்டாள்தனமாக தெரிவித்து அதன்படியும் எழுதினார். குழப்பமும் செய்தார்.'' என ஆதித்தனார் சொல்லுகிறார்.

23.) பண்டிதர் அயோத்திதாசனார் பார்வையில்  

ஜான் ரத்தினம் என்பவர் 1885 ஆம் ஆண்டு திராவிட பாண்டியன்' என்ற இதழைத் தொடங்கினார். அயோத்திதாசர் அந்த இதழின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

         'ஆதித்தமிழர்கள் இம்மண்ணின் மைந்தர்கள், அவர்கள் இந்துக்கள் அல்ல' என பிரகடனப்படுத்தி எழுதினார். 1890 ஆம் ஆண்டு “திராவிட மகாஜன சபை'' என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி, அதில் பட்டியல் குலத்தினரை ஒருங்கிணைத்தார். பிரம்ம ஞான சபையின் செய்லாளர்களின் ஒருவரான ஆல்காட் என்பவரின் உதவியுடன் சென்னையில் ஐந்து  பள்ளிக் கூடங்களை நிறுவி பட்டியல் குலத்தினரை கல்வி கற்க வழிவகுத்தார். 1902 ஆம் ஆண்டு தென்னிந்திய பவுத்த சாக்கி சங்கத்தை ஏற்படுத்தியவர், 1907 ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 19 ஆம் நாள் “ஒரு பைசாத் தமிழன்'' என்ற வார இதழை நடத்தினார். 1908 ஆம் ஆண்டு இதழின் பெயரைத்”தமிழன்'' என்று பெயர் மாற்றம் செய்தார். தமிழகத்தில் தமிழர்களுக்கென்று எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் ''தமிழன்'' இதழ் மூலம் பார்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, மூடநம்பிக்கை, மொழிப்பற்று, இன உணர்வு, சமூக நீதி மற்றும் சுயமரியாதை இவற்றை மையமாகக் கொண்டு இதழை நடத்தினார். குறிப்பாக மண்ணின் மைந்தர்களே இம்மண்ணை ஆள வேண்டும் என்று எழுதினார்.

23.) தமிழர்கள் திராவிடர்கள் என்ற குழப்பத்திற்கு மானுடவியல் ஆய்வாளரான முனைவர் பக்தவச்சலபாரதி பண்பாட்டு ரீதியாக தமிழர்களுக்கும் தெலுங்கு கன்னட மொழியினருக்கும் உள்ள ஒற்றுமைகளை வகைப்படுத்தியுள்ளார்.

24) அனுபவங்களின் நிழல் பாதை நூலில் திராவிடர்களே தமிழர்கள் என்று தனது இந்தியத்துணைக்கண்டம் முழுவதும் ஆய்வு செய்து நிலைநிறுத்தியுள்ளார் நூலின் ஆசிரியர் அரங்கையா முருகன்.

24.) சென்னை, மதுரை போன்ற பெரு நகரங்களிலும் 'வடுக தெரு' என்ற பெயரில் தெருக்கள் உள்ளதை கூர்ந்து கவனித்தாக வேண்டும்.    இதிலிருந்து திராவிடம் என்பது 'மாயச் சொல்' எனச்சொல்ல முடியாது.

25) பஃறுளி யாற்றுடன் பன்மொழி அடுக்கத்து எனத்துவங்கும் சிலப்பதிகார அடிகள் பழம் பாண்டிய நாடு இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது என்பதை காட்டுகிறது.  இதனால் தான் தமிழ் புலவன் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று எழுதினானோ என்னவோ. காலப்போக்கில் இந்தியா முழுவதும் இருந்த தனித்தனி இன குழுக்கள் பிரிந்து தன்னாட்சி செழுத்தியிருக்கலாம். காலமாற்றத்தால் இவைகள் திரிந்து புதிய புதிய மொழிகளும் பண்பாடுகளும் உருவானது எனக்கொள்ளலாம்.  

 தமிழர்  

       சைவ சித்தாந்தத்தை உள்ளடக்கியும் சைவத்தமிழ் என்று பேசி தமிழ் மொழி உணர்வை தூக்கிப்பிடித்தவர்களின் மூலம் சைவமடங்களாகும். ஆனால் இந்த சைவ மடத்தில் அறியப்படும் திருப்பானந்தாள் மடத்தில் சமற்கிருதமே இன்னும் பூசை மொழியாக உள்ளது. இந்த சைவ பற்றார்களே மடத்திற்கு வெளியே தனித்தமிழ் எனப்பேசினார்கள் என்பதை கவனப்படுத்த வேண்டும். இவர்களின் சமற்கிருத கலப்பு என்பது விஜயநகர நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்டதல்ல அதற்கு முன்பாகவே இந்த மடங்கள் சமற்கிருதத்தை ஏற்றதற்கான சான்றுகள் அம்மடத்திலே உள்ளது.

         அதே நேரத்தில் தமிழர்கள் தமிழகத்தை ஆளவேண்டும் என்ற கோரிக்கையையும் மறுத்திடவும் கூடாது என்பதை விட, முடியாது என்பதே நமது வாதமும்.

                  இந்தியாவை ஆண்ட பிரிட்டீசாரை 'அன்னியர்' என்ற ஒற்றைச்சொல்லால் நமது தலைவர்கள் இந்தியதுணியக்கண்டம் முழுவதும் உள்ள மக்களை ஒன்று திரட்டினார்கள். அன்னியர் என்ற சொல் சுதந்தரப்போராட்டத்திற்கு இனித்தது.

''விஜயநகர + நாயக்கர் ஆட்சியில் பெருவாரியாக வந்து குடியேறியுள்ள தெலுங்கு கன்னடம் பேசும் மக்களை தமிழகத்தில் துள்ளிதமாக 306 ஆண்டுகள் ஆண்டவர்கள் தமிழர்களின் நிலபுலங்களை பறித்துள்ளது வரலாறு. இவர்களால் பாதிக்கப்பட்டதாக நினைக்கும் தமிழ் குடிகள் அவர்களை அன்னியர் என்ற சொல்லில் அழைப்பதை எப்படி நிராகரிக்க முடியும். இப்படி பேசுபவர்களை தமிழ் பாசிசவாதிகள் அழைப்பது சரியாக இருக்குமா?. 

தெலுங்கு கன்னடம் பேசும் மக்கள் தங்களது வேர்களை இழந்து இம்மண்ணின் குடிகளாக மாறிவிட்டார்கள். இவர்களால் மொழி சிதை மொழி தேசியம் என்பது இவர்களுக்கு எதிரானதாகப் பார்க்கப்படுவதான் கருத்தாக்கம் தான் சிக்கலை உருவாக்குகிறது. 

    இறைமறுப்பு கொள்கை பிற மாநிலத்தை விட தமிழகத்தில் பரந்து விரிந்தது. இறை மறுப்பை ஏற்காத மக்கள் கூட இறைமறுப்புக்கொள்கை கொண்டத் தலைவர்களை ஏற்றார்கள் என்பதை கூர்ந்து கவனித்தாகவேண்டும். இப்படிப்பட்ட தலைவர்கள் மொழியால் இனத்தால் குலத்தால் கன்னடம் தெலுங்கு பேசுபவர்களாக இருந்தாலும் அவர்களை தமிழை தாய்மொழியாகக்கொண்ட மக்கள் தூக்கி கொண்டாடி தங்களது தலைவர்களாக ஏற்றுக்கொண்டதில் அவர்களின் நேர்மை வெளிச்சப்படுகிறது. இது போன்ற வெளிச்சக்குறைபாடு இருக்கும் இடத்தில்தான், மொழி இன குலப் பாகுபாட்டுப் பார்வை வருகிறது. இதைக் கவனிக்காது ''மொழி பாசிசம்'' என்ற ஒற்றைச்சொல்லில் நிராகரிப்பது என்பது மொழி தீவிரத்தை அதிகரிக்குமே தவிர குறுகிவிடாது என்ற வாதத்தையும் மறுதளித்திட முடியவில்லை. 

பிறமாநிலங்கள் மொழியின் தாக்கம் எப்படி

தமிழகம் அல்லாது திராவிட இனக்குழுக்கள் நிறம்பியுள்ள ஆந்திரம் கர்நாடகம், கேரளத்தில் அவர்களின் மொழிக்கே ஆட்சி மொழியில், பள்ளிப் பாடத்திட்டத்தில் முன்னுரிமை கொடுக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக இல்லை என்பதை விட தமிழை கற்காத ஒருவர் தமிழகத்தில் அரசுப்பணியில் இருக்க முடியும் என்ற நிலைதான் உள்ளது. இதனால் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் இரண்டாம் தர மக்களாக கருத்தப்படும் நிலையுள்ளது. 

ஒரு மொழி பின்னுக்கு தள்ளும் போது அதில் உள்ள வளம், விஞ்ஞானம் தானாக மறைந்து விடும். உலகத்திலே முதன் முதலாக காவிரி ஆற்றில் கல்லனை என்ற தடுப்பு அணை கட்டியது தமிழகத்திலே. இதை ஆய்வு செய்த ஆதர்குட்டன் என்ற ஆங்கிலப்பொறியாளர் சுண்ணாம்பு, காசிக்கட்டி, கருப்பட்டி, கடல்பாசிகள் போட்டு ஆட்டி சாந்துப்பூசியுள்ளார்கள். இதை கட்டி சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலிருக்கும் என தனது ஆய்வறிக்கையில் கொடுத்தார். இந்த ஆய்வறிக்கையின் அடிப்படியயிலே பிரிட்டீசார் ஆண்ட பகுதிகளில் அணைகள் கட்டப்பட்டது. இந்த தொழில் நுட்பத்தில் கட்டப்பட்ட அணைகள் ஆயுள் இன்னும் திடமாக உள்ளது என்பதை முல்லைப்பெரியாறு ஆய்வறிக்கை அறுதியிட்டுள்ளது. ஆனால் முல்லை பெரியாறு ஆய்வரிக்கையை நிராகரித்து பேசும் பொதுவுடமை கட்சியின சுண்ணாம்பு சுதை என கேலி கிண்டல் செய்ததை நினைத்துப்பார்க்க வேண்டும் என தமிழ் தேசியவாதிகள் சொல்லுவதை நாம் கேட்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இப்படி மொழி என்பது விஞ்ஞானத்தை, அறிவை கலையை கட்டிக்காத்தது என்பதை உள்வாங்கிட மறுப்பதே பாசிசமாகும். 

அதே போல் பண்டுவம் என்ற சித்தமருத்துவம் அதன் நுணுக்கத்தை எள்ளி நகையாடியே அன்னியப்படுத்தி விட்டோம். இது போன்று பல நூறு ஆயிரம் எடுத்துக்காட்டுக்களை அடுக்கலாம்.

இப்படி மொழியின் திடத்தை தேவையை இந்திய தேசிய, திராவிடத் தலைவர்கள் நிராகரிப்பதால் அவர்களின் குலம் இனம் மொழி குறித்த குற்றச்சாட்டுகள் எழுகிறது என்பதை பார்ப்ப மறுப்பதே பாசிசமாகும்.

மொழி இனத்தை வைத்து அரசியல் செய்வது தமிழ்நாடு மட்டுமா?

இந்திய சுதந்திரத்திற்கான முழக்கம் மொழி, இன அடிப்படையில் மகாராசுட்ராவில் துவங்கியது என்பது வரலாறு. அங்கு மொழி இன, குல வாததத்தை முன் வைத்தே அங்கு பல்நெடுங்காலமாக ஆட்சி நடக்கிறது. இதே போல் கருநாடகாவில் கடந்த 20 ஆண்டுகளாக மொழி தேசியத்தைக் கட்டமைத்தார்கள். இதை எதிர்க்க இயலாத இந்திய தேசிய கட்சிகளே அவர்கள் பின்னால் சென்று விட்டது அனைவரும் அறிந்த செய்தியே. இதன் வெளிப்பாடாகவே முல்லை பெரியாறு, காவிரியில் தண்ணீர் தரமறுக்கும் கோரிக்கைக்கும் இந்திய தேசியத்தை ஆதிரிக்கும் கட்சிகளே முன்மொழிவதை எப்படிப் பார்ப்பது. ''புழுத்த இந்திய தேசியம்'' பேசுபவர்கள் என்ற தமிழ் தேசியவாதிகளின் வாதத்தை புறம் தள்ளமுடியாத சூழல் உருவாக்கியுள்ளதை மறுக்க முடியவில்லை.

கேரள மாநிலத்தில் பொதுவுடமைக் கட்சியின் கூட்டணி ஆட்சியே பல்நெடுங்காலம் இருந்தது. இடுக்கி, திருவனந்தபுரம், மலப்புரம், காசர்கோடு, கொல்லம் மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் தமிழர்களை மொழி சிறுபான்மையார் என்ற அடிப்படையில் உருவான தமிழ் பள்ளிகளை மூடி வருகிறது. மலையாளம் படித்தால் மட்டுமே முன்னுரிமை எனச் சட்டம் இயற்றி தனது மொழி பிடிப்பை காட்டி விட்டது. இது போன்றவற்றை கவனிக்க மறுத்து விட்டு தமிழ் மொழியை தூக்கிப்பிடிப்பவர்கள் மீது பாசிசப்பார்வையை வீசுவதை, முனியாண்டி விலாஸ் கடை இருக்க புதிய முனியாண்டி விலாஸ் வைப்பவர்கள் ''ஒரிசினல் முனியாண்டி விலாஸ்'' என் பெயர் வைப்பது போல் உள்ளது என்ற விமர்சனப்பார்வையும் உள்ளதை புறம் தள்ள இயலாது. 

மொழியால் உருவான நாடு

வங்கதேசம் எப்படி உருவானது என்ற வரலாற்றை திருப்பிப் பாருங்கள். பாகிசுதான் தனது மொழியை வங்கதேசத்தின் மீது திணித்தது. இதை எதிர்த்தவகளை ஒடுக்கி அழித்தொழித்தது. இந்தக்கோரிக்கை ஐக்கிய நாடுகள் சபைக்கு போனது வங்கமொழி காக்கப்பட்டு, வங்காளம் என்ற நாடு உருவானது. வங்க மொழியை எதிர்த்த தலைவர்களை வங்கத்தில் உருவான அரசு தூக்கிலிட்டது. இந்த வரலாற்றை மூடி மறைத்து தமிழ் மொழிக்காக போராடுபவர்களை பாசிஸ்டுகள் எனச்சொன்னால் உங்களை ''பொதுவுடமை பாசிசவாதிகள், திராவிட பாசிசவாதிகள்'' என அவர்கள் திரும்பச் சொல்ல எவ்வளவு நேரமாகும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. வங்கம்போலவே திபெத்தும் அங்கு மத ஆட்சிக்கு எதிராக சீன பொதுவுடமை கட்சி நடவடிக்கை எடுத்தது போர் தொடுத்தது என்பது பொதுவான வரலாறு. திபெத்தியர்களின் பவுத்த கோட்டாட்டை விட எங்களது மொழியை சீனம் அழிக்கிறது என்ற கூப்பாட்டை யாரும் செவி சாய்க்கவில்லை என்பதை கவனப்படுத்த வேண்டும்.   

ஆக மொழி என்பது பேசுபொருள் மட்டுமல்ல அதில் ஒரு இனத்தின் வரலாறு. அந்த வரலாற்றை தூக்கிப்பிடிக்க அந்தந்த மொழிக்காரனுக்கு உரிமையுள்ளது. இதை மறுப்பவர்கள் அனைவரும் பாசிசவாதிகளே என்று சொல்ல தூண்டுகிறது என்ற வாதத்தை புறம் தள்ள முடியவில்லை.

சரி இதற்கும் மதுரை நாடளுமன்ற வேட்பாளரான திரு.சு.வெங்கடேசனுக்கும் என்ன தொடர்பு. இவர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் பொதுவுடமை கட்சியின் முழுநேரப்பணியாளர். மொழியை மய்யமாக வைத்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்த திராவிட கட்சிகளின் ஆட்சி ஐம்பதாண்டு காலத்தில் பள்ளிகளில் தமிழ் தவிர்த்து பிறமொழியே ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாக்கப்பட்டுள்ளது. பொதுவுடமிய கட்சியினர் ஆளும் மாநிலமான கேரளத்தில் மொழி சிறுபான்மையிருக்கான உரிய பிரதிநிதித்துவங்களை செய்திடவில்லை. மொழிவாரி சிறுபான்மையினருக்கான அரசு நடத்தப்படும் கூட்டங்கள் கமுக்கமாக நடந்து வருகிறது. அதில் விவாதித்து நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் புறம் தள்ளப்படுகிறது.

 

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...