இராஜம் அய்யர் (13/05/1898)
வீடு இருண்டு கிடக்கிறது. விளக்குகள் கூட துக்கம்
காக்கின்றன. அந்த அறையின் மூலையில் ஒரு படுக்கை. அதில் 26 வயதே ஆன இளைஞன் தன்
கடைசி மூச்சை உயிர்த்துக் கொண்டிருக்கிறான். வேதாந்தமும் சித்தாந்தமும்
படித்துப்படித்து லயித்த கண்கள் இன்று செருகி கிடக்கின்றன. எத்தனையோ தத்துவ
வித்தகர்கள் வியக்க எழுதிக்குவித்த கைகள் துவண்டு கிடக்கின்றன. வீட்டின் மூலையில்
இருந்த சமையல் அறையின் தனிமையில் கண்ணீர் வடித்தபடி அவன் இளம் மனைவி. பல
நாட்களாய்ப் படுக்கையில் கிடந்து காலம் முடியக் காத்திருக்கும் தன் நாயகனுக்கு
அருகில் சென்று பார்க்கத் தவிக்கிறாள் அந்தப் பேதை. அவன் அருகே எந்த நேரத்திலும்
சுற்றமும் நட்பும் சூழ்ந்திருந்தது. அந்நிய ஆண்கள் முன் வீட்டுப் பெண்கள் வரக்
கூடாதென்பது அன்று எழுதப்படாத சட்டம். ஒரு வார்த்தை... ஒரே ஒரு வார்த்தை அவனுடன்
பேசத் துடிக்கிறாள் அவள். நாள்கணக்கில் காத்திருந்த அந்தத் தனிமை ஒரு நாள்
கிடைக்கிறது. கண்ணீர் வழிய அவசர அவசரமாய்க் கணவனை நெருங்குகிறாள். மூடியிருந்த
அவன் கண்கள் சற்றே திறக்கின்றன. அவன் உதடுகள் மெல்ல அசைகின்றன.
“உன்னோடமெட்டிச் சத்தத்தைக் கேட்டு எத்தனை
நாளாச்சு?"
அன்பு கனியும் அந்தக் குரலுக்கு என்ன பதில் சொல்வதென
அவள் திகைக்கிறாள். அந்தக் கணத்தில் அறைக்குள் நுழைகிறான் அந்த இளைஞனின் சகோதரன்.
அடுத்த விநாடி அவள் அறையை விட்டு வெளியேறி மீண்டும் அடுக்களைக்குள்
அடைக்கலமாகிறாள்.
“உன்னோட மெட்டிச் சத்தத்தைக் கேட்டு எத்தனை நாளாச்சு?” - இவை தான் தமிழின் இரண்டாவது நாவலான கமலாம்பாள் சரித்திரத்தை எழுதிய பி.ஆர். ராஜம் அய்யர் தன் மனைவியிடம் பேசிய கடைசி வார்த்தை.
“உன்னோட மெட்டிச் சத்தத்தைக் கேட்டு எத்தனை நாளாச்சு?” - இவை தான் தமிழின் இரண்டாவது நாவலான கமலாம்பாள் சரித்திரத்தை எழுதிய பி.ஆர். ராஜம் அய்யர் தன் மனைவியிடம் பேசிய கடைசி வார்த்தை.
இந்து வேதாந்தத்தில் ஆழ்ந்து மூழ்கி சுய தேடலும் சுய
விடுதலையும் பிரதானம் என்று கருதி வாழ்வின் நாளெல்லாம் தியானித்திருந்த ஒரு மனிதன்
தன் மனைவியிடம் பேசிய கடைசி வார்த்தைகள் இவை.
இந்த வார்த்தைகளின் வெளிச்சத்தில் ராஜம் அய்யரின்
ஆளுமையும் மன உலகையும் ஆய்வுசெய்தால் அதுவே ஒரு நாவலாக விரியக்கூடும். மண்ணின்
லெளகீக இன்பங்களுக்கும் இந்திய தத்துவத்தின் மோட்ச நோக்கங்களுக்கும் இடையே இழுபட்ட
மேதைகளில் ஒருவராக ராஜம் அய்யரைக் காண முடிகிறது.
1872ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி மதுரை மாவட்டம்
வத்தலக்குண்டில் பிறந்தவர் ராஜம் அய்யர். தந்தை ராமையா சாஸ்திரி உடன் பிறந்தவர்கள்
ஒன்பது பேர். இவர் சிறு வயதிலேயே தனிமை விரும்பி, சிறந்த படிப்பாளி. குறிப்பாக வேதாந்தமும் பக்தி இலக்கியங்களும், ஆள்
அரவமற்ற கோயிலும், ஆற்று வெளியும் இவர் மனதுக்கு உகந்த இடங்கள்.மனவெளியின் தனிமையில் வாழ்ந்த இவருக்கு 13 வயதில்
விவாகம். மனைவி 9 வயதான ராமலெட்சுமி. மதுரை சேதுபதி உயர்பள்ளியில் பள்ளி
படிப்பும், மதுரை நேடிவ் கல்லூரியில் எஃப்.ஏ.யு-வும் முடித்த ராஜம் அய்யர் 1889இல்
சென்னை வந்து கிறிஸ்துவக் கல்லூரில் சரித்திரத்தில் பட்டம் பெற்றார். தன்னுடைய 17 வயதில்அன்றைய நாளில் பிரபலமான பூண்டி
அரங்கநாத முதலியார் எழுதிய ‘கச்சிக்கலம்பகம்’ நூலுக்கு அற்புதமான விமர்சனம் ஒன்றை
சென்னை கிறிஸ்துவ கல்லூரி மாத இதழில் எழுதினார். விமர்சனம் எழுதுபவர்களுக்கெல்லாம்
முன்னுதாரணமாக இன்றுவரை ராஜம் அய்யர் எழுதிய விமர்சனத்தை குறிப்பிடலாம்.இந்த அற்புதமான விமர்சனத்தை பார்த்த அரங்கநாத
முதலியார் ஆச்சர்யத்தில் மூக்கின் மேல் விரல் வைத்துவிட்டார்.
ராஜம் அய்யர் சென்னையில் தனது மனைவி ராமலெட்சுமியுடன்
வாழ்ந்த காலக்கட்டத்தில் கற்ற ஆங்கில கல்வியின் விளைவாக தனது கருத்துகளில் பெரும்
மாறுதல் ஏற்படத்தொடங்கியது. ஜாதி வர்ணாசிரமம் பிரமாணர்களால் ஏற்படுத்தப்பட்டன
என்றும் அந்த ஏற்பாட்டால் நமது தேசம் சிரழிந்ததென்றும், அதை எப்படியாவது
வேரறுத்தால்தான் நமது நாட்டுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்றும்
அபிப்பிராயப்பட்டார்.
ராஜம் அய்யர் சட்டத்தேர்வில் தோல்வி அடைந்தது அவருடைய
வாழ்வில் பெரும் திருப்புமுனை ஆயிற்று. யோகமும், மோட்சமும் அவரது குறிக்கோளாயின.
தாம்பத்தியம் உள்பட மண் சார்ந்த அனைத்து
விஷயங்களிலும் அவருக்கு வெறுப்பு உண்டாயிற்று. படுக்கை அறை கூட அவருக்கு கரிக்க
ஆரம்பித்தது. அதேசமயம் தான் விரும்பிய யோக சாதனைகளை அடைய முடியாத கோபம். அந்த
ஊமைக் கோபம் மனைவியிடத்தில் பாய்ந்தது. இந்த நிலையில் திருவொற்றியூரில் அன்று
வாழ்ந்த கண்ணம்மாள் என்ற தேவதாசியின் நட்பு இவருக்கு வாய்த்தது.
ஸ்ரீவில்லிபுத்துரைச் சேர்ந்த தேவதாசியான இவர் குலத்தொழிலில் வெறுப்புற்று அதை அறவே
விடுத்து வேதாந்தம் பயின்று வந்தார்.
அவர் ராஜம் அய்யரை 90 வயது வேதாந்தியான ஒரு
மூதாட்டியிடம் அறிமுகம் செய்து வைத்தார். இந்த சந்நியாசிநி அம்மாள் அரிய விஷயங்களை
பற்றி உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அந்த இடம் சென்று நாள்தோறும் உபன்யாசம்
கேட்டு திருப்தி அடைந்து கொண்டிருந்தார் ராஜம் அய்யர். ஒரு நாள் பிரசங்கம் மிகவும்
உருக்கமாகச் சென்று கொண்டிருந்தது. பிரசங்கம் முடிந்து அனைவரும் போய்விட்ட
நிலையில் ராஜம் அய்யர் மட்டும் தனிமையாக உட்கார்ந்து அசைவற்று ஆழ்ந்த யோசனையில்
இருந்துவிட்டார்.
இது தக்க சமயம் என்று எண்ணிய சந்நியாசிநி அம்மாள்
ராஜம் அய்யரை அழைத்து கருணையுடன் பெரியார்களுடைய அநுபூதி விஷயங்களை உருக்கமாகப்
பேசி ராஜம் அய்யரின் விரக்தி பொங்கும் மனநிலையை அறிந்து அவரது தலை மீது கை வைத்து
பரிபூரண ஆசியை வழங்கினார். ராஜம் அய்யரின் கொந்தளிக்கும் மனம் சாந்தம் அடைந்தது. அவரது
கோபங்கள், வேகங்கள் நீங்கின. சாத்வீக மன நிலையில் முழு மூச்சுடன் அன்று முதல்
வேதாந்த விசாரத்தில் ஈடுபட்டார்.
இந்த மூதாட்டி ஆசி வழங்கும் பகுதியை ராஜம் அய்யர்
தனது நாவலான கமலாம்பாள் சரித்திரத்தில் விசுவரூபதர்சனம் என்ற பகுதியாக இடம்
பெற்றிருக்கும் என்று நம்ப இடமுள்ளது.இந்த சமயத்தில் சுவாமி விவேகாநந்தர் சென்னை வந்து
டாக்டர் நஞ்சுண்டராவ், அளசிங்கப்பெருமாள் போன்ற சீடர்களைக் கொண்டு சநாதன தர்மத்தை
நிலை நாட்டுவதற்காக “பிரம்மாவதின்” என்றொரு ஆங்கிலப் பத்திரிகை நடத்த ஏற்பாடுகள்
செய்தார்.பிரம்மாவதின் பத்திரிகையில் ராஜம் அய்யர் எழுதிய
“மனிதன் அவன் தாழ்வும் ஏற்றமும்” என்ற கட்டுரை, அக்காலத்தில் ஞானத்தை தேடும்
ஆஸ்திகர்களுக்கு மிகவும் முக்கியான பேசும் பொருளாக அமைந்தது.ராஜம் அய்யருக்கு இந்தக் கட்டுரை மூலமாக மிகவும்
முக்கியமான குருவும் வாய்த்தார். அந்த குரு ஸ்ரீமத் சாந்தானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்.
ராஜம் அய்யரின் வேதாந்தப் பசிக்குத் தீனி போட்டவரும் அவரே. மயிலாப்பூர்
ஆஸ்திகர்களால் தொடங்கப்பட்ட பிரபுத்த பாரதம் பத்திரிகை சுவாமி விவேகானந்தரின்
ஆசியுடன் ராஜம் அய்யரை ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்டது. பிரபுத்த பாரதத்தில் பல
பெயர்கள் பூண்டு அவர் எழுதிய படைப்புகளின் தொகுப்பே “ரேம்பிள்ஸ் இன் வேதாந்தா”
என்ற பெயரில் புத்தகமாக வந்தது. ராஜம் அய்யரின் முழு மேதைமையையும் இத்தொகுப்பில்
காணலாம்.
விவேக சிந்தாமணி மாத இதழில் தன்னுடைய ‘கமலாம்பாள்
சரித்திரம்’ நாவலை தொடர்கதையாக எழுதினார். இந்த நிலையில் இவருக்கு குடல் சிக்கல்
நோய் வந்தது. ஒருமுறை அதற்குத் தப்பினார். இரண்டாவது முறை இதே நோய் தாக்கியது.
இதுவே இவரது முடிவாயிற்று. வேதாந்த வேட்கையும், சுய விடுதலையும் லட்சியமாக
கொண்டிருந்தாலும் உள்ளே மனைவியிடம் அன்பை கனிந்து கொண்டிருந்தார். வாழ்வின் இறுதிக்
கணங்களில் மனைவியிடம் சொன்ன வார்த்தைகள் இதன் அடையாளம். ராஜம் அய்யர் இறந்த இரண்டொரு நாளில் அன்றைய ஆங்கிலேய
அரசாங்கம் இரண்டு போலீஸ்காரர்களை ராஜம் அய்யரை விசாரிக்க அனுப்பியது. 1898-ஆம்
வருடம் ஏப்ரல் மாத இதழில் அவர் எழுதி வெளியிட்ட “வேதாந்தமும் சக்கரவர்த்தி பெருமானும்”
என்ற கட்டுரையில் ராஜநிந்தனையாக சில விஷயங்கள் இருப்பதாக எண்ணி ஆங்கிலேய அரசு
விசாரணைக்காக போலீஸ்காரர்களைஅனுப்பியது. அச்சமயம் ராஜம் அய்யர் சிவலோகம் சென்று
விட்டார் என்று அங்குள்ளவர்கள் கூறியுள்ளனர்.ராஜம் அய்யர் எழுதிய இக்கட்டுரையில், ‘வேதாந்தம் சக்கரவர்த்தி
பெருமானது அரசாட்சியை எப்பொழுதும் கவிழ்க்கவே பார்க்கிறது. அது இருக்கிற வரையில்
என்றைக்காவது அவருக்கு அபாயம் வருவது திண்ணம்’ என்று குறிப்பிட்டு
எழுதியிருந்தார்.
ராஜம் அய்யர் தன் கட்டுரையில் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியை அவமதித்துள்ளதாகவும், ராஜதுவேஷ வழக்கு போட வந்ததாகவும் காவலர்கள் கூறினர். ராஜம் அய்யரோ வாதும், வழக்குமற்ற உலகுக்கு சென்றுவிட்டார் என்பதை தெரிந்த ஆங்கிலேய காவலர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ராஜம் அய்யரின் தகப்பனார், “பிஞ்சில் பழுத்து வெம்பி வெடித்ததாலும், தக்க குருவை அடையாததாலும் என் பிள்ளைக்கு அகால மரணம் வந்தது” என்று விசனமுற்றார். ராஜம் அய்யரின் ‘கமலாம்பாள் சரித்திரம்’ நாவலை லண்டன் SOAS பல்கலையைச் சார்ந்த ஸ்டூவர்ட் ப்ளாக்பர்ன் அவர்கள் ஆங்கிலத்தில் The Fatal Rumour: A Nineteenth-century Indian Novel மொழிபெயர்த்துள்ளார்.
இதன்மூலம் ஆரம்ப கால தமிழ் நாவலுக்கான
முக்கியத்துவத்தை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. இந்த நாவல் மதுரை மாவட்ட
ஜல்லிக்கட்டு காளைகள் குறித்து பதிவு செய்திருக்கிறது.
ராஜம் அய்யரின் வேதாந்த வேட்கையின் வாழ்வும்,
மனதுக்குள்ளே வெதும்பிய அகப் போரட்டங்களும், சந்நியாசிநி அம்மாளைச் சந்தித்து
வாங்கிய பரிபூரண ஆசியின்போது அவர் அடைந்த பேரானந்த நிலையும், அவரின் ஆளுமைத்
திறமும் அவரின் ‘கமலாம்பாள் சரித்திரம்’ நாவலை உள்வாங்குவதன்மூலம் நாம் அறிந்து
கொள்ள முடியும்.
No comments:
Post a Comment