நூலதிகாரம்
நூல்; அனுபவங்களின் நிழல் பாதை
ஆசிரியர்; ரெங்கையா முருகன் + ஹரிசரவணன்
வெளியீடூ ; வம்சி
விலை; 350
ஆசிரியர்; ரெங்கையா முருகன் + ஹரிசரவணன்
வெளியீடூ ; வம்சி
விலை; 350
தமிழக அரசு & விகடன் விருது பெற்ற நூல், குமுதம் தீராநதியில் தொடராகவும் வந்தது குறிப்பிடத்தக்கது.
(என் மகள் வைக்கம் நாகமணியின் நூல் மதிப்புரை)
மக்களை அறிந்த மண்ணின் மைந்தர்களின் வரலாற்றை இந்த நூல் பேசுவதால் மக்கள் இலக்கியம் என்றே அழைக்கலாம். என் அப்பா அடிக்கடி மரபு அறிவை பற்றி என்னிடம் கூறும் போது சரியாக விளங்கவில்லை. இப்புத்தகதை படித்த பிறகு என்னால் மிக சரியாக புரிந்துகொள்ள ஏதுவாக இருந்தது.
இயற்கையோடு இணைந்த பழங்குடிகள் வாழ்க்கை முறையை அவர்கள் வாழ்விடத்திடலிருந்து அப்புற[ப்படுத்தும் போது அவர்களின் மரபு அறிவு அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட முடியாமல் போய்விடுகிறது. பழங்குடிகள் மட்டுமல்ல, நாமும் வளர்ச்சி என்ற பெயரில் கட்டமைக்கப்பட்ட நவீன உலகத்தின் பிடியில் மாட்டிக்கொண்டு பலவற்றறை இழந்து வருகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை ஆகும். எனக்கு விபரம் தெரிந்த காலம் வரை பாத்திரங்களை விளக்க பயன்படுத்தபட்டு வந்த அடுப்பு சாம்பல் காணாமற்போய் இன்று பல்வேறு வகையான பொடிகளை பயன்படுத்தி கொண்டு உள்ளோம்.
பழங்குடி மக்கள் தங்கள் ஊர் எல்லையை தாண்டி விறகு எடுப்பதை கூட பாவமாக கருதுகிறார்கள் என்பதை ஆசிரியர் பதிவிட்டுள்ளார். அப்படியிருக்க அவர்களை அரசு அப்புறப்படுத்த ஏற்கத்தக்க காரணங்கள் ஒன்றும் இல்லை. ஆனால் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக அவர்களை வெளியேற்ற துடிக்கிறோம் என்பதே உண்மை என நினைக்கிறேன்.
இந்நூலில் பொதுகுப்பை, கூளம் என்ற வார்த்தையை கண்டவுடன் என் ஊரில் பயன்படுத்தப்பட்ட குப்பைக்கிடங்குகள் நினைவுக்கு வந்தன. தற்போது குப்பைகளை மக்கச்செய்து பயன்படுத்தும் அத்தயக முறை பயண்பாட்டில் இல்லை. இது போன்ற நுண்ணிய அறிவுகளை அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் இழந்து வருகிறோம். அல்லது இழக்க வைக்கிறார்கள். சாணி மற்றும் குப்பை கூளங்களை கிடங்கில் போட்டு மக்கினால் தான் அதனுள் மீத்தேன் உருவாகி நல்ல உரமாக மாறும் என்பது அறிவியல். இந்த அறிவியலில் உள்கூறுகளை பழங்குடி மக்களோ அல்லது வெகுமக்களாகிய நாமோ தெரிந்துவைக்காமல் இருக்கலாம். ஆனால் அத்தகைய செயலில் மிகப்பெரிய விஞ்ஞானம் பொதிர்ந்துள்ளது என்பதை யார் எடுத்து சொல்லுவது.
மரபு அறிவினை இழந்த தலைமுறைக்கும் மரபினை கட்டிக்காக்கும் தலைமுறைக்கும் உள்ள பெரிய இடைவெளியை தெரிந்து கொள்ள முடியும். இதனை பழங்குடிகளின் வாழ்வியலிலிருந்து அவர்களின் வருத்தத்தை நூலாசிரியர் பதிவு செய்துள்ளதை படித்தவுடன் என் தாத்தா இறக்கும் தருவாயில் வைத்தியத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியாத தவிப்பை உணர்ந்தேன்.
''மொழியை இழந்தவனுக்கு பெண்ணை தர மாட்டேன்'' என்ற அப்பழங்குடிகளின் செய்தியை படித்த போது எனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. மொழி என்பது பல்வேறு மரபு அறிவுகளை உள்ளடக்கியது என்று அறிந்தே அக்கூற்றை அவர் கூறியிருப்பார் என்றே நான் உணர்கிறேன். ஆனால் இன்று குழந்தைகளின் பெயரை கூட தமிழில் வைக்க தவறி விடுகிறோம் என்பது மிகுந்த வருத்தற்குரியது.
என் தந்தை அடிக்கடி கூறும் கல்வி வேறு அறிவு வேறு என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை உணர்ந்த இடமாக இப்புத்தகம் இருந்தது என்பதில் எவ்வித ஐய்யப்பாடும் இல்லை. பல ஆயிரம் செய்திகளை திராவிட மொழிக்குடும்ப இனக்குழுக்களில் மரபு சார்ந்த அறிவு மற்றும் அவர்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இந்த நூல் உதவும் என நம்புகிறேன்.
No comments:
Post a Comment