Search This Blog

Monday 30 November 2020

ஏன் ஆதிவாசிகளை கொண்டாட வேண்டும்

 

 

                               ஏன் ஆதிவாசிகளை கொண்டாட வேண்டும்

                     மனித குழுக்களிடம் உள்ள நல்ல பழக்க வழக்கங்களை நாம் மறந்து விடக்கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் பல தினங்களை கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை சில தினங்களை கொண்டாட அறிவித்துள்ளது. அதில் கை கழுவும் தினம், அன்னையர் தினம், காதலர் தினம், வன நாள் போலவே உலக ஆதிவாசிகள் தினமும் கொண்டாடிக்கொண்டாடுகிறோம். உலகத்தில் பல ஆயிரம் இனக்குழுக்களில் இவர்களிடம் மட்டுமே தனித்துவமான பண்புகள் இன்னும் தேங்கியுள்ளதால் அவர்களை உலக நாடுகள் கொண்டாடுகிறது.

                   'விஞ்ஞான வளர்ச்சி உச்சத்தை அடைந்து விட்டதாக பெருமை அடித்தாலும், நாம் வாழும் பூமி மனிதன் 'வாழவே' தகுதியற்றதாக மாறிவிட்டது என்பதை மறக்கலாகாது.

                காற்றும், குடிக்கும் தண்ணீரும், தாய்ப்பாலும் நஞ்சாகி விட்டது, பூமி வெப்பமயமாதலால் பருவநிலைகளில் மாற்றம் வருகிறது என்கிறது ஆய்வறிக்கை. இதனால் பூமித்தாயை காப்பாற்ற ஊவ்வொரு நாடும் முனைப்பு காட்டுகிறது.

                பதினைந்து ஆண்டுகள் பயன்படுத்திய மோட்டார் வாகனம் நன்றாக இருந்தாலும் அதற்கு தடை, நெகிழிக்கு தடை, வாகன எரிபொருள் பதிலாக சூரிய ஒளி, பேட்டரி பொறுத்த ஆலோசனை என இந்திய அரசு சுற்றுச்சூழலைக்காக்க முனைப்பு காடுட்கிறது. ஆனால் இவைகளை நாம் வாழும் இடத்திலுள்ள குப்பையை அள்ளி நாம் வாழாத இடத்தில் போடுவதை 'சுத்தம் சுகாதாரம்' என்கிறோம் எனச்சொல்லுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள். 

                மனிதகுலம் உப்பினை மட்டும் தின்று விட்டு தண்ணீரைத் தேடி தவியாய் தவிக்கிறது என்பது மட்டும் உண்மை. இதற்குத் தீர்வு வேறெங்கும் தேட வேண்டாம் நாம்முடன் வாழும் ஆதிவாசிகளைகளின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி அவர்களைப்போல் 20 விழுக்காடு கடைபிடித்தாலே இந்த பூமி பழைய நிலைக்கு மாறிவிடும் என்பதை இந்த உலகம் செவி சாய்த்து கேட்க மறுக்கிறது.

                                                                                 ஆதிவாசி

 

              குறிஞ்சி நிலமான மலையில் முல்லையும், மருதமும் கலந்த விளைநிலமாக உள்ள விளைச்சல் தரும் இடமே ''வாசி'' என்கிறது நிகண்டுகள். பழங்குடி மக்கள் வாழும் பெரும்பாலான மலைகளுக்கு வாசிமலை, தவசிமலை, தளி மலை என்ற பெயரில் உள்ளது. மழை வளமும், மண் வளமும் உள்ள இடத்தை கண்டறிந்து வேளாண்மை செய்தவதவனே ''மாறன்'' என விளக்கம் தருகிறது நிகண்டு. இம்மக்கள் வாழும் இடமே குடி.

            மலையில் வாழும் புலையர், பளியர், காடர், ஊராளி, முதுவா, மலையாளி, குறுப்பா, காணி, கணியன், மலசர், தோடர், தோதர், கோத்தர், சோளகர் போன்ற குலத்தினரே ஆதிவாசிகள் என அரசு அறிவித்துள்ளது. நாகரீகம் என்ற பெயரில் நாம் தொலைத்த பழக்க வழக்கங்களை இம்மக்களே இன்னும் கட்டிக்காத்து வருகிறார்கள்.

                                                                                   மொழி

 

அப்படி இவர்களிடம் என்னதான் இருக்கிறது......!

 ஜல்லிக்கட்டு தமிழகதின் அடையாளமாக மாறிவிட்டது. பலரது முகநூல் முகப்பு, ஆடை, பேருந்து, உணவு விடுதி, இல்ல நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ் இவைகளில் மஞ்சுவிரட்டு காளை படங்கள் உயிர்பெற்றுள்ளது. இப்படி நாம் பண்டைய அடையாளத்தை சொல்லிட மொழி முக்கியம். அந்த மொழி அழியாமல் இருப்பது ஆதிவாசிகளிடம் மட்டுமே. ஜல்லிக்கட்டுக்கு மஞ்சுவிரட்டு, வாந்தி என்ற சொல்லுக்கு ஓங்கரிக்க, ஒவ்வாமை என்றும், கம்பு சோளம் இவைகள் பூக்கும் பருத்தை 'கொம்பை' என்ற பழம்சொல்லினை வேளாண்மை குடிகள் கூட மறந்து விட்டார்கள். ஆனால் இப்படியான சங்க இலக்கியத்தில் உள்ள சொற்கள் இம் மக்கள் பேச்சு வழக்காக உள்ளது. இவர்களிடம் இம்மாதிரியான பல ஆயிரம் சொற்கள் இருப்பதை தனது ஆய்வில் பதிவிட்டுள்ளார் நிலகிரியில் அமைந்துள்ள மைய்ய அரசின் பழங்குடிகள் ஆய்வு மைய்யத்தின் பேராசிரியர் சத்தியநாராயணன்.

                                                              நுகர்வு கலாச்சாரம்

 

                 இரண்டு, சில வீடுகளில் ஒரு வாரிசுக்கு மேல் இல்லை. தாய் தந்தையர் உள்பட நான்கு ஐந்து பேர் வாழ்ந்திட இரண்டு மூன்று செண்டில் கட்டினாலே கூட்டி பெருக்கி கழுவவே நேரம் போதாது. ஆனால் நடுத்தர வகுப்பினர் வீடு செட்டி நாட்டு அரண்மனை வீடுகளை மிஞ்சுகிறது. பத்து செண்டில் வீட்டை கட்டி எந்த அறைக்குள் யார் இருக்கிறார்கள் எனத்தெரியாமல் வீட்டுக்குள்ளே இருந்துகொண்டே கணவனும் மனைவியும் 'ஏங்க இருக்கீங்க ' என செல்போனில் கூப்பிடுவதைப்பார்க்கலாம். இப்படி ஒவ்வொரு தனிமனிதனும் அரண்மனை போல வீடு கட்டினால் செங்கல், மணல், கல், இரும்பு, மரம் அனைத்தும் இந்த பூமியிருந்து தானே எடுத்தாக வேண்டும். இந்த நுகர்வு கலாச்சாரம் என்ற கொடுமை இல்லாத இனக்குழு ஆதிவாசி மக்கள் மட்டுமே.

                    வீடு கட்ட சிமிண்ட் தேவை தானே என்ற கேள்வி எழும். சிமிண்டில் கட்டிய வீடும், சுண்ணாம்பு காரையில் அல்லது பழங்குடி மக்கள் போல் சுட்ட மண் அல்லது பச்சை மண் உருண்டையால் சுவற்றில் ஊணாங்கொடி வைத்து கட்டிய வீட்டின் வாழ்நாள் நமது வீடுகளை விட அதிகம் என ஆய்வுகள் மெய்பித்துள்ளது. நம்மால் செம்மண்ணில் வீடுகட்ட முடியாவிட்டாலும் அரசு சொல்லும் 'கைடு லைன்' கொடுத்திருக்கும் குறைந்த பட்சம் இரண்டு சென்ட்டில் அல்லது நாழு பேர் வாழ மூன்று செண்ட்டில் வீடு கட்டினால் போதுமே. கட்டி வைத்த பெரிய பெரிய வீடுகள் தற்போது யாருக்கு பயன்படுகிறது ? என்பதை கேள்வியாகக்கேட்க தடுப்பது நமது நுகர்வு மோகமே.  

                 அரண்மனை என்றவுடன் அரசர், மன்னர் அல்லது ஜமீன்தார் வாழ்ந்த வீடு என்பது மட்டும் நமக்கு நினைவில் வரும். இந்த அரண்மனைகள் மக்களுக்கு அரணாக பயன்பட்டதால் அரண்மனை என்று பெயர். அவை நிர்வாக இடம். அதனால்தான் மன்னர் மானியம் ஒழிப்பு சட்டம் வந்த போது அரண்மனைகளை அரசு கையக்கப்படுத்தியது என்பதை நாம் மறந்து தனி நபர் சொத்தாக நினைப்பதே நமது நுகர்வின் வெளிப்பாடு.

                தற்போது கட்டப்படும், கட்டு வரும் பெரிய பெரிய வீடுகள் தனிமனிதனின் மனநிறைவுக்கு மட்டுமே பயன் தரும். ஆனால் இந்த வீடுகளை கட்ட பயன்படும் இடுபொருள்களால் சுற்றுச்சூழலை அழிக்கிறோம் என்பதை நாம் உணர முடியாதபடி நுகர்வு கலாச்சாரத்தை அரசு நம்மிடம் விதைத்து முளைத்து விட்டது. இதன் விளைவு பூமி வெப்பமயமாகி மழை மாரி தவறி விட்டது.

            வீடுகட்டப்பயன்படும் சிமிண்ட் தயாரிக்க தேவையான சுண்ணாம்பு பூமியை துளைத்தும், பவளப்பாசிகள் கடலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. நாழு பேர் தங்குவதற்கு 3 செண்டில் வீடு கட்டினால் அதில் வீடுகட்டி, வாகனமும் நிறுத்தி, சிறிய வீட்டு தோட்டமும் அமைக்கலாம். ஆனால் நாம் கட்டிய அல்லது கட்ட நினைத்து வைத்துள்ள வீட்டின் அளவை நினைத்துப்பாருங்கள்.

                    நான்கு பேர் உள்ள நமது வீடுகளில் சமைக்க தேவையான பாத்திரங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதை நினைத்துப்பாருங்கள். நாம் ஊரரிய திருமணம் நடத்தி 'ரெட்டை சீர்' கொண்டு வந்து ஊரார் மெச்சிட கொண்டு வந்த சட்டி பானைகளில் மணப்பெண் பெயரை பொறித்து வீட்டில் மூலையில் அடைந்து வைக்கிறோம். இவைகளை ஆண்டுக்கு ஒருமுறை விளக்கிக்கழுவி மறுபடியும் கவுத்தி வைப்பதே நம்மிடம் திணிக்கப்பட்ட நுகர்வு கலாச்சாரம். இந்த பகுமானம் எதுக்காக யாருக்காக. சட்டி பானை செய்திட எடுக்கப்படும் கனிமங்கள் பூமிக்குள்ளிருந்து என்பதை நாம் உணருவதை தடுப்பதில் உள்ளது நுகர்வு கலாச்சாரத்தின் வெற்றி.  

               பழங்குடி வீடுகளில் கஞ்சி காய்சிட, தண்ணீர் எடுக்க, குழம்பு வைக்க, சாப்பிட எல்லாம் சேர்த்து அதிகபட்சமாக பத்து பாத்திரம் கூடத்தேறாது. இவர்கள் கட்டியுள்ள வீடுகளில் ஒருபக்கம் கேளையாடு அருகிலுள்ள 'வரை'யில் படுத்திருக்கும், சிறுத்தை குகையில் இருக்கும், கரடி கீழ் பள்ளத்திலிருக்கும் இயற்கையாக அமைந்த மலைக்குகையை கணகணக்கப்பான வீடாக பயன்படுத்தி வாழ்ந்தார்கள். இவர்களையும் நாம் நுகர்வு கலாச்சாரத்திற்குள் கொண்டு வந்து கெடுத்துவிட்டோம். இவர்களைப்போல் நாம் வாழ வேண்டாம், குறைந்தபட்சம் தேவையில்லாமல் வாங்கிக் குவிக்கும் தன்மையை இந்த மக்களிடம் கற்றுக்கொண்டாலே போதும்.

                                                                      துணி

                அரசு பணியாளர் அல்லது அவர் ஒத்த வருமானம் ஈட்டும் நபரின் வீடுகளில் குறைந்தது 20 பேண்ட் அதுக்கு மேச்சான சட்டை, பெண்களுக்கு குறைந்தது 100க்கு மேல் சேலைகளிய பீரோவில் அடிக்கி வைத்திருப்பார்கள். இதில மேச்சிங் இல்லாதவை கணக்கில் வராதவை. இப்படி குவித்து வைத்திருக்கும் இந்த உடைகளை நமது வாழ்நாளில் ஒரிரு முறைதானே உடுத்த முடியும். இந்த உடைகளை நீங்கள் மறுமுறை கட்டுவதற்குள் அதன் காலம் முடிந்து தானாக கிழிந்து விடும் அல்லது சாயம் விட்டுவிடும் அல்லது நமது வாழ்நாளே முடிந்து விடும்.

                  துணிகள் வண்ணமாக்கிட சாயம் மிக முக்கியம். இந்த வண்ண உடைகளை குறைக்காதவரை நீரும் நிலமும் மாசுபடுவதை தடுக்க இயலாது. ஆடை விசயத்தில் பழங்குடிகளைப்போல் இருக்க வேண்டாம் ஒரு ஆளுக்கு மூன்று ஆடை போதும் என மாகாத்மா காந்தி சொன்னது போல் கடைபிடிக்காவிட்டாலும் ஐந்து வைத்துக்கொள்வோம். இந்த சிக்கனத்தை சொல்லிக்கொடுப்பவர்கள் ஆதிவாசிகள்.

                                                                                      மணி

                    எங்கு பார்த்தாலும் நகைக்கடைகள். இங்கு விற்கப்படும் நகைகளைச் செய்திட பூமியைத் துளையிட்டு சுரங்கம் அமைத்து அதிலுள்ள மண், கல், பாறைகளை வெளியேற்றி மலையாக குவித்த பின்னால் தானே தங்கம் எடுக்கிறார்கள். பத்து கிராம் தங்கம் எடுக்க குறைந்தது அரை ஏக்கம் நிலத்தை தோண்டி சீரழித்தாகவேண்டும். இந்த தங்கத்தை உருக்கி அணிகளன் செய்திட ஏதுவாக மாற்றிட பல இரசாயனங்களை கொண்டு கழுவிட வேண்டும். இதனால் பூமி புல் பூண்டுகள் முளைக்கும் திறனை இழக்கிறது என்பதை தொலைக்காட்சிகளில் வரும் நகை விளம்பரத்தால் நமது மூலைக்கு எட்டாமல் போய்விடுகிறது. வீட்டு வளர்ப்பு விலங்குகளைப்போல் நாம் நுகர்வு கலாச்சாரத்திற்கு  மாறிவிட்டோம் என்றால் மிகையான குற்றச்சாட்டல்ல.

                  உலக மக்கள் தொகையில் அதிக நுகர்வு கலாசாரத்துக்கு வசியப்படுபவர்கள் ஆசிய கண்டத்து மக்கள். அதில் தெற்காசிய மக்கள் தான் நுகர்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்கிறது புள்ளி விபரம். மாகாத்மா காந்தியோ, தந்தை பெரியாரோ தற்போது உயிருடன் இருந்திருந்தால் 'என் கட்சியில் இருப்பவர்கள் நான்கு ஆடைகளுக்கு மேல் வைத்திருப்பவர்கள் கட்சியை விட்டு விளகுங்கள். இல்லை என்றால் நானே நீக்குவேன்' என அவர்கள் நடத்திய குடியரசிலும், யங்இந்தியா பத்திரிக்கையிலும் எழுதி நம்மை திருத்தி வழி நடத்தியிருப்பார்கள்.

                    பழங்குடிமக்கள் காட்டுக்குள் வாழ்ந்தாலும் தேவைக்கு அதிகமாக சுள்ளியைக்கூட எடுத்து சேமித்து வைக்க மாட்டார்கள். ''காடு அள்ள அள்ள குறையாது, காடு கொடுத்துக்கொண்டே இருக்கனும் என்றால் அதன் வளம் அதனிடம் இருக்க வேண்டும்'' என்ற இயற்கைத் தத்துவத்தை இம்மக்கள் புரிந்து வைத்துள்ளனர். அவர்களைத்தான் நாம் சட்டம் போட்டு காட்டை விட்டு விரட்டி நம்மளைப்போல நுகர்வு கலாச்சாரத்தில் சீரழிக்க திட்டமிடுறோம்.

                                                                    காடு

                 தந்தத்திற்காக ஆனைகளையும், தோலிற்காக புலியையும் வேட்டையாடுபவர்கள் பழங்குடி மக்களா? இந்தப்பொருள்களை இவர்கள் ஏறெடுத்துப்பார்ப்பதில்லை. இம்மக்கள் வனத்தை அழிக்கிறார்கள் என்ற அபத்தமான பொய்யை விதைத்து வருவது நாம் தானே.

                 ஆனைகள் தண்ணீருக்காக காட்டை விட்டு வெளியேறுகிறது என்ற செய்தி திருப்ப திருப்ப சொல்லி நம்ப வைத்து விட்டார்கள். ''சினையாக ஊள்ல ஆனை சவுட்டுப்பு என்ற உவர் மண்ணைத் தேடி உப்பு விளையும் தரைக்காட்டுக்கு வரும். தண்ணீர் தேவையென்றால் தெள்ளுக்கொடியை ஒடித்து தண்ணீரைக் குடித்து விடும். முந்திக்காலத்தில் ஆனை சினைப்பருவத்தில் மலையை விட்டு இறங்காமல் இருக்க உப்பங்குழி தோண்டி உப்பு வைப்போம். அதை எங்க தாத்தா காலத்தில் உப்பு வைத்த போது வெள்ளைக்காரன் புடிச்சு ஜெயிலில் போட்டான். அதனால ஆனைக்கு உப்பு வைக்குறது போன தலைமுறையோடு போய் விட்டது'' என பழங்குடி மக்கள் சொல்லுவது படித்த மேதாவிகளான நமது காதுகளுக்கு எட்டவில்லை.

                                                                 காடு யாரால் அழிந்தது

                      பூண்டு, மிளகு, கறிவேப்பிலை, புளி, பட்டை, இந்துப்பு, இஞ்சி அவ்வப்போது உணவுக்காக வேட்டையாடுதல், கல்மணிகள் (precious stone), உயிரைக் காக்கும் மூலிகைகள், சித்த வைத்திய மருந்துகள், வீடுகட்ட, வேளாண்மை கருவிகள் செய்திட தேவை கருதி வெட்டப்படும் மரம், இவை அனைத்தும் வனத்திலிருந்தே கிடைத்ததால் வனம் சார்ந்த வாழ்வு தவிர்க்க முடியாததாக இருந்தது. இந்த ஒட்டுறவை பிரிட்டீஷார் கொண்டு வந்த வனச்சட்டத்தால் முறியத்துவங்கி படிப்படியாக வனத்திற்கும் நமக்குமாக உறவு கருவறுந்து விட்டது.

             வெள்ளைக்காரன் வந்தான் தேயிலை, காபி போட கூப் என்ற பெயரில் பெருமரங்களை வெட்டி வனத்தை அழிந்தான். 1970ல் சாயம் தயாரிக்க விஸ்காஷ் நிறுவனத்திற்கு பெரு மரங்களை அழித்து யூக்லிப்டஸ், பைன், சைப்ரஸ் மரங்களை நடவு செய்திட அனுமதித்தோம். இப்படித்தானே வனம் அழிந்தது. இந்த சாயப்பட்டரையால் கோவை மாவட்ட ஆறுகள் நாசமானதே வரலாறு.

              கொடைக்கானலில் 930 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருந்த புல்வெளி 2014ல் 300 சதுர கிலோமீட்டரானது. உலகின் முதன்மை உயிர்சூழல் மண்டலம் என ஐ.நா மன்றத்தால் அறிவிக்கப்பட்ட நீலகிரியில் 29875 ஏக்கரில் இருந்த புல்வெளி, 4700 ஏக்கராகக் குறைந்தது. மழைக்காலத்தில் நீரினை சேமித்து வைத்து கோடைகாலத்தில் சிறுகசிறுக வடியவிடும் இந்தப்புல்வெளிகள் இல்லாததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மட்டுமே ஏற்படுகிறது. கோடைகாலத்தில் மலைகள் காய்ந்து விடுவதால் காடுகளின் தன்மையே மாறிவிட்டது. புல்வெளியில்லாததால் விலங்குகள் உணவு இல்லாமல் இடம் மாறுகிறது. இடமாற்றத்தால் பல இன்னலுக்கு ஆளாகி வருகிறது.   

           பூமி வெப்பமயமாதல் என்ற கூக்குரலிடும் நாம் பழங்குடி மக்களின் துவக்கப்பள்ளியில் படித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை மறந்து விடவேண்டாம் சுற்றுச்சூழலை காத்திட நாம் நுகர்வு கலாசாரத்தைக் குறைக்கவேண்டும். இந்த பழக்கம் நமக்கு வர நுகர்வற்று வாழ்ந்து  வரும் ஆதிவாசிகளை நாம் கொண்டாடும் போது தான் அந்த நல்லெண்ணம் நமக்குள் வளரும்.

 

 

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...