Search This Blog

Monday, 30 November 2020

துப்பாக்கி ரவை கம்பி மத்தாப்பூ ஆன கதை

 

 

                                                                 துப்பாக்கி ரவை கம்பி மத்தாப்பூ ஆன கதை

தீபாவளி என்றவுடன் சிறுவர் முதல் பெரியவர் வரை குதுகலமாக்கிவிடுவது வெடி என்ற வேட்டு. இந்த வெடி இராணுவத்தில் எதிரிகளை வீழ்த்தப் பயன்பட்டது. இப்படி கொலை ஆயுதமான வெடி, எப்படி? சாமான்ய மக்களின் கைகளில் வேடிக்கை, கேலிக்கை பொருளாக மாறியது. கோயில் திருவிழாக்களில் வெடி வெடிப்பதும், கொங்கு மண்டல கோவில்களில் வெடி காணிக்கையாக செழுத்தும் மரபு எப்படி வந்தது. இதற்கான காரணம் என்ன வெடி வெடித்து மகிழ்வதன் வரலாறுதான் என்ன ?

இராயாண, மகாபாரத காப்பியங்களில் சங்கு, சக்கரம் விட்டதாகவும், சிவன் நெற்றியிலிருந்து சங்கு, சக்கரம் போன்ற வெடி ஆயுதம் கொண்டு எரிப்பதாகவும், திருச்செந்தூர் முருகன் சூரனை செந்தூரம் (பஸ்பம்) செய்ததால் செந்தூர் முருகன் ஆனார் என்று காப்பியக்கதைகள் சொல்கிறது.

பொது ஆண்டிற்கு பின்பு (கி.பி) 4 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பாறைகளில் குடைந்த குடவரைகள், அதனை அடுத்து 19ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டுள்ள கோவில் கட்டிடங்கள், ஒற்றைக்கல் தூண்கள், ஒரு பாறையில் குடையப்பட்ட காக்கதேய பேரரசின் தலைமையிடமான வாரங்கல் அரண்மனை, இவைகளைப் பார்த்தால் வெடி இல்லாமல் இவைகளை உருவாக்கியிருக்க முடியாது என்ற ஐயம் எழும். இது குறித்து நடந்த ஆய்வின் முடிவில், ''சோற்றுக்கு பயன்படுத்தப்படும் உப்பினை காய்ச்சி தரையில் குழி தோண்டி அதில் ஊற்றினால் கெட்டியாகும். அந்த கெட்டியான உப்பு உருண்டையை தண்ணீரில் போட்டாலோ அல்லது அதன் மீது தண்ணீரை ஊற்றினாலோ வெடிக்கும்'' இப்படித்தான் நம் முன்னோர்கள் பாறைகளை குடைந்தார்கள், பாறைகளை பிளந்து அரண்மனை கோயில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தினார்கள் என்று ஆய்வு முடிவுகள் சொல்லுகிறது.

கந்தம், பாஸ்பரஸ், பாதரசம் இவைகளே வெடி தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்கள். இவைகளைக்கொண்டே பீரங்கிகளுக்கு ரவை என சொல்லப்படும் குண்டுகள் செய்யப்படுகிறது. இவை பெரும்பாலும் சீன நாடுகளான அறியப்படும் மத்திய சீனம், திபெத், பலுகிஸ்தான், ஆப்கான் பகுதியிலே கிடைக்கிறது. இந்த மருந்துகள் 17, 18ஆம் நூற்றாண்டு வரை சித்த மருத்துவத்தில் உயிர் காக்கும் மருந்தாக பயன்பட்டது. இவை உயிரை குடிக்கும் வெடியாக தயாரிக்கும் தொழில்நுட்பம் 1620களில் ஜெர்மனியில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து மெல்ல மெல்ல நகன்று 1655 வாக்கில் உலகம் முழுவதும் பரவி மருந்து, வெடி மருந்தாக உருமாறி பாதுகாப்பு படைகளின் கைக்கு வந்து மிரட்டியது. பெரும் ஆனைப்படை வைத்து தில்லியை ஆண்ட லோடியை வீழ்த்திய பாபர் முடிசூட்டி மாமன்னரானது இந்த வெடியால் என்பதே வரலாறு.

இந்தியாவுக்கு வந்த வாஸ்கோடகாமா தனது கப்பலில் வெடி ஆயுதத்தை வைத்தே கொச்சியை சரணடைய வைத்தார். பல்நெடுங்காலம் தமிழக கடல்பகுதியை கையில் வைத்து ஆட்சி செய்த பரங்கியர்கள் வெடியை வைத்துக்கொண்டு நாயக்கர் அரசுக்கு கட்டுப்படாமல் இருந்தனர். பரங்கியர்கள் துணி வியாபாரம் செய்ததை விட நம்ம உவர் நிலத்தில் விளைந்த சவுட்டு உப்பினை வாங்கி சென்றார்கள். பின்னாலில் கந்தகம் மூலம் வெடி தயாரிக்கும் தொழில் நுட்பம் வந்தபின்பு வெடிமருந்து வியாபாரமே அதிகம் செய்தனர் என்பதை திருபாதிரிபுலியூர் - பிரஞ்சு குறிப்புகளை ஆய்வு செய்துள்ளார் ஆய்வாளர் ஜெயசீலன் ஸ்டீபன். இப்படி ஆட்சி அதிகாரத்தை மாற்றிய வெடி, சிறுவர்கள் கையில் விளையாட்டு பொருளாக இருப்பது வரலாறு அறிந்தவர்களுக்கு வியப்பைத் தருகிறது.

விஜயநகர ஆட்சியிலே துப்பாக்கி வந்தற்கான சான்று 1522ல் வரையப்பட்ட விஜயநகர தலைமையிடமான ஹம்பி விருப்பாட்ஷி கோவில் மேல்த்தள ஓவியம் தெளிவுபடுத்துகிறது. தமிழகத்தின் நாயக்கர் ஆட்சியின் தளகர்தாவான மன்னன் திருமலை நாயக்கர் காலத்திலே பரங்கியர்களை எதிர்க்க வெடி ஆயுதம் பெருவாரியாக குவிக்கப்பட்டது. இந்த வெடி ஆயுதத்தை பயன்படுத்த இசுலாமியர்களை மட்டுமே அனுமதித்து நாயக்கர் அரசு. இதனால் படைகளுக்கு தேவையான குதிரைகளை அரபு தேசத்திலிருந்து இறக்குமதி செய்துடன் வெடி இயக்கத்தெரிந்த வீரர்களையும் இறக்குமதி செய்தனர். நாயக்கர் ஆட்சியில் குதிரைப்படை, வெடிப்படை வீரர்கள் பெரும்பாலும் இசுலாமியர்களே. இதனால் இசுலாமியர்களை 'காவல் குடிகள்' என்று ராமப்பய்யன் அம்மானை, சேது மன்னர் செப்பேட்டு வரலாறுகள் சொல்லுகிறது. விஜயநகர மற்றும் நாயக்கர் ஆட்சிக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னன் வீரபாண்டியன் படையில் அதிகமான இசுலாமியர் இருந்தனர் என அமீர்குருஸ் எழுதிய தில்லி முகலாய வரலாறு என்ற நூலிலும் தஞ்சை திருக்களர்கோவில் கல்வெட்டும், சேது மன்னர் செப்பேடுகளும் பறை சாட்டுகிறது.  

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்த 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள், பிரஞ்சுக்காரர்கள், தில்லி முகலாயர்கள், மைசூர் திப்புசுல்தான், இவர்களுக்குள் ஏற்கனவே நாட்டை ஆண்டு கொண்டிருந்த நாயக்க பிரதிநிதிகள், தமிழக பாளையக்காரர்கள் என பலரும் ஆங்காங்கு ஆண்டார்கள். தமிழக வரலாற்றிலே கொடூரமான காலகட்டம் என்றால் இந்தக்காலம் என்றே சொல்ல வேண்டும்.

இந்தக்காலகட்டத்தில் மதுரையை ஆண்ட தில்லி முகலாய சுல்தானின் பிரதிநிதியான ஆற்காடு வாலஜா மன்னரின் பிரதிநிதி முகமது யூசூப்ஹான் மதுரையை ஆண்டார். இவரைப்போலவே கொங்கு மண்டலமாக வரலாற்றில் அறியப்படும் சேலம், ஈரோடு, கோவை பகுதிகளை மைசூரை தலைமையிடமாக கொண்டு ஆண்ட ஹைதரலி, அவரது மகன் திப்பு சுல்தானின் ஆளுமையின் கீழிருந்தது. நாயக்கர் ஆட்சியின் வீழ்சியால் தமிழகத்தின் தென் பகுதி பாளையங்கள் தன்னாட்சி செழுத்தி மன்னர்களானார்கள்.  

மதுரை அரசுக்கு கப்பம் கட்ட மறுத்த நெற்கட்டுசேவல் பூலித்தேவன், சிவகிரி போன்ற பாளையங்கள் மீது முகமது யூசூப்கான் படையெடுத்தார். தன்னாட்சி செய்த சிவகங்கை அரசு, முகமது யூசூப்ஹானை எதிர்த்து நாயக்கர் அரசின் கடைசி வாரிசான அரசி மீனாட்சியின் தத்துப்பிள்ளை விஜய சொக்கநாத திருமலை நாயக்கனை மீண்டும் மதுரையில் ஆட்சியில் அமர்த்த முனைந்தது. இவர்கள் மீதும் முகமது யூசூப்கான் படையெடுத்தார் என நாயக்கர் மற்றும் சேது சீமை வரலாற்று நூல்கள் மூலம் அறிய முடிகிறது. முகமது யூசூப்கானை எதிர்கொள்ள திப்பு சுல்தானின் ஆதரவை பாளையப்பட்டு மன்னர்கள் நாடினார்கள்.

இந்தக்காலத்தில் அதிகமாக கொள்ளை நடந்தது. தனது எல்லையில் உள்ள மக்களை கொள்ளையர்களிடமிருந்து காத்திட மக்களை படை வீரகளாக ஆக்கினார் முகமது யூசூப்கான். இதன் துவக்கமாக வெடிமருந்தினை 'கைமருந்தாக' மக்களுக்கு வழங்கப்பட்டது. அதிக பாதரசம் சேர்த்த வெடி மருந்தினை இரும்பு குழாயில் போட்டு அதிகம் கிட்டிக்காமல் (இறுக்கம்) தீ வைத்தால் வெடிக்காமல் தீப்பிளம்பினை கக்கும். (பூந்தொட்டி, பூ மந்தாப்பூ இவைகள் இப்படித்தான் தயாரிக்கப்படுகிறது) 'எதிரிகள் வருவது தெரிந்தால் இந்த வெடியினை தீப்பற்றவைங்கள். தீப்பிளம்பைப் பார்க்கும் படைகள் வெடியிருப்பதாக நினைத்து பயந்து ஓடும். இந்த வெடி ஓரளவுக்கு மக்களை காத்ததால் முகமது யூசுப்கானுக்கு மக்கள் செல்வாக்கு அதிரித்தது. இந்த ஆதரவை தக்கவைக்க  மக்களுக்கு வெடிமருந்தை தயாரிக்கும் முறையை சொல்லிக்கொடுக்க உத்தரவிட்டுள்ளார் என இசுலாமியர் நூலும், பிரிட்டீஷ் குறிப்புகளும் தெளிவுபடுத்துகிறது.

முகமது யூசூப்கான் தனது எல்லையான மேலூர் நாடு, வெள்ளளூர், சூரக்குடி நாடுகளில் ஊருக்கும் வெளியிலுள்ள கோவில்களில் வெடி வெடித்து பாளையக்கார படைகளுக்கு பயம் காட்ட ஆள்களை நியமித்தார். இந்த வெடி வெடிப்பவர்களுக்கு நிலம் மானியம் கொடுத்த செய்திகள் செவிவழிச்செய்தியாக இன்றளவும் மேலூர் பகுதியில் உலாவுகிறது. உயிரை பறிக்காத இந்த வெடியை 'வெத்துவெடி' என மக்கள் பெயரிட்டார்கள். இன்றும் கிராமங்களில் எதுவும் செய்யாத ஆளினை ''அவனொரு வெத்துவேட்டு' என கிண்டலாக சொல்லுவதை கேட்கலாம். (பேராசிரியர் தொ.பரமசிவனின் பேட்டி)

இதே காலகட்டத்தில் கொங்கு மண்டலத்தை ஆண்ட திப்பு சுல்தான் வெள்ளக்கோவில் நாட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் (கொங்கு மண்டலத்தில் 24 நாடுகளில் இதுவும் ஒன்று) பொங்களூர் நாட்டிலுள்ள பொன்னிவாடி கிராமத்தில் உள்ள வீரக்குமார், கருப்பசாமி கோவிலில் மந்தையில் வெடி வெடித்து ஆள்களை நியமித்தார். வெடி வெடிப்பவர்கள் பெயர் 'பொட்டிலி' என்றும், பொட்டிலிகளுக்கு காணிக்கை கொடுக்கவும் மக்களுக்கு ஆணை பிறப்பித்தார். இது தான் காலப்போக்கில் வெடிக்காணிக்கையாக வந்திருக்கும் என ஆய்வுகள் சொல்லுகிறது. (கொங்க நாட்டில் திப்பு சுல்தான்,  மற்றும் தீரன் சின்னமலை வரலாறு ஆசிரியர் புலவர் - ராசு).

இப்படித்தான் அரசபடைகளிடமிருந்த வெடி என்ற பயங்கரமான ஆயுதம் சாமானிய மக்களிடம் வந்தடைந்தது. திப்புவின் குதிரை படைக்கு தளபதியான தீரன் சின்னமலை தனது ஆயுத கிடங்கில் பெருவாரியாக வெடிமருந்துகள் பதுக்கி வைத்திருந்ததை பிரிட்டீஷார் குறிப்புகள் சொல்லுகிறது. மதுரை மீனாட்சியம்மன் ஊர்வலத்தில் நான்கு வீதி முக்குகளில் வெடிப்போட நாயக்க மன்னர் சொக்கநாதநாயக்கர் உத்தரவிட்டு அவர்களுக்கு வெடிமானியம் வழங்கினார். இதன் நீட்சி இன்றும் தொடர்கிறது.

19ம் ஆம் நூற்றாண்டில் பிரஞ்சுக்காரர்கள், தில்லி முகலாயர்கள், மைசூர் திப்புசுல்தான், நாயக்க பிரதிநிதிகள், தமிழ் மன்னர்கள் தத்தமது ஆட்சியை காப்பாற்ற வரிவசூலை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தேவையிலிருந்தனர். அன்றய காலகட்டத்திலிருந்த பெரிய தொழில்சாலை விவசாயம் மட்டுமே. விவசாய விளைச்சலை அதிகரிக்க கிணறு வெட்டுவதற்கு தேவையான வெடிமருந்துகளை இசுலாமிய ஆட்சியாளர்கள் வாரிவழங்கினார்கள். இதனால் தமிழகத்திலே அதிக கிணறுகள் இருக்கும் பகுதி கொங்கு மண்டலம், அதற்கு அடுத்தபடியாக மதுரை மண்டலம் என்பது குறிப்பிடத்தக்கது. வேளாண்மை குடிகளிடன் வெடி சகசமாக புழங்கியதால் இந்தியா முழுவதும் ஆட்சியை அதிகாரத்தை நிலைநிறுத்திய பிரிட்டீஷார் வெடி மருந்துக்கென தனிச்சட்டத்தை கொண்டு வந்தனர். இந்த சட்டம் சென்னை மாகாணத்திலே முதன்முதலில் அமுல் செய்து கடுமை காட்டினார்கள். (கொங்கு வரலாறு)

நாயக்கர் ஆட்சியில் வரி வசூலிக்கும் துர்கை வழிபாடான நவராத்திரி விழா முடிந்த பின்பு தீபாவளி நாளில் வெத்து வெடிகளை வெடித்து அரண்மனையாளர்கள் மகிழ்ந்தனர் (நாயக்கர் காலத்தில் தொகுக்கப்பட்ட தனிப்பாடல்கள், துதிப்படல்களான அம்மானைகள்). இதே போல் நாயக்கர் மான்னர்கள் அரண்மனையை விட்டு வெளியேறும் போது வெடிப்படையினர் வெடி வெடித்து மன்னர் வரவேற்கும் நிகழ்வும், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தவும் இதை நிகழ்த்தினார்கள். (நாயக்கர் வரலாறு). நாயக்கர் மன்னர்கள் வருகையின் போதும், பெரும் கோவில்களிலும் வெடியை பார்த்த மக்கள் ஆட்சி மாற்றங்களால் தங்கள் பாதுகாப்பிற்காக கையாண்டார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமான கோவிலில் வெடித்த வெத்து வெடிகளே காலப்போக்கில் திருவிழாக்களில் வெடி வெடிக்கும் பழக்கமாக மாறியது.

இசுலாமிய அரசின் வெடிப்படை வீரர்கள் இறந்தால் வெடிவெடித்து துக்கத்தை அனுசரித்தனர். இதன் நீட்சியே இன்றும் அரசியல் பிரமுகர்கள், படைவீரர்கள் இறந்தால் வெடிவெடித்து சோகத்தை கடைபிடிக்கப்படுகிறது.  

இப்படி அரண்மனைகளில், கோயில் திருவிழாக்களில் வெடித்த வெத்துவெடிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதை கணக்கிட்ட காவல்துறையை பரவலாக்கி மக்களை கெடுபிடிக்குள் கொண்டு வந்த பின்பு வெடியில் நல்ல வருவாய் கிடைப்பதை அறிந்த பிரிட்டீஷார் பெருவணிமாக மாற்றினார்கள்.

 

 

No comments:

Post a Comment

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...