யார் இந்த மாலிக் அம்பர்
மாலிக் அம்பர் (Malik Ambar), இந்திய வரலாற்றில் இடம் பிடித்த ஆப்பிரிக்க வம்சாவளித் தலைவர். மொகலாய சாம்ராஜ்யத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இவரது வழிநடத்தலின் கீழ், இந்துக்கள், முஸ்லிம்கள், ஆப்பிரிக்கர்களை கொண்ட படையணிகள், டெக்கான் பிரதேசத்தை மொகலாயர் கைப்பற்ற விடாமல் தடுத்து நிறுத்தின.
மாலிக் அம்பர் 1549ம் ஆண்டு, எத்தியோபியாவில் பிறந்தார். பல்லாயிரக் கணக்கான எத்தியோப்பிய அடிமைகள், அரேபியாவிலும், இந்தியாவிலும் விற்கப் பட்டுக் கொண்டிருந்த காலம் அது. மாலிக் அம்பர் இந்தியாவிற்கு அடிமையாக சென்றவர்.
பிற்காலத்தில் முஸ்லிமாக மதம் மாறி, ஒரு சுதந்திர மனிதனாக பாக்தாத்தில் கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றார். அதன் பிறகு இராஜதந்திரியாகி அஹ்மத்நகர் சுல்த்தான் நிஜாம் ஷா அமைச்சரவையில் பணியாற்றினார்.
இதற்கிடையே மொகலாய சாம்ராஜ்யம் வடக்கே இருந்து விஸ்தரிக்கப் பட்டு வந்தது. அக்பர், மற்றும் ஷாஜஹான் சக்கரவர்த்திகளின் பெரிய இராணுவத்தை தடுத்து நிறுத்தும் பொறுப்பு மாலிக் அம்பரிடம் ஒப்படைக்கப் பட்டது. அவர் தன்னைப் போன்ற முன்னாள் எத்தியோப்பிய அடிமைகளுடன், இந்து, முஸ்லிம் வீரர்களையும் ஒன்றிணைத்து, டெக்கான் பிரதேசத்திற்கான விடுதலைப் படையை உருவாக்கினார்.
தளபதி மாலிக் அம்பரின் போர்த்தந்திரங்கள், கெரில்லாத் தாக்குதல்கள் காரணமாக மொகலாயப் படைகள் முன்னேற முடியாமல் பின்வாங்கின. தென்னிந்தியா மொகலாய சாம்ராஜ்யத்திற்குள் அடங்காமல் தப்பியதற்கு காரணம், மாலிக் அம்பர் என்ற ஆப்பிரிக்கத் தளபதி ஆவார். இந்திய வரலாற்று நூல்களில் அவர் பற்றிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப் படுகின்றன. இன்றைய இனவாத, மதவாத அரசியலின் செல்வாக்கே அதற்குக் காரணம்.
ஆதாரம் ;வின்சண்ட் ஸ்மித் இந்திய வரலாறு பாகம் இரண்டு
No comments:
Post a Comment